![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/49/Aristoteles_Logica_1570_Biblioteca_Huelva.jpg/640px-Aristoteles_Logica_1570_Biblioteca_Huelva.jpg&w=640&q=50)
ஏரணம்
From Wikipedia, the free encyclopedia
ஏரணம் அல்லது அளவையியல் அல்லது தருக்கவியல் (Logic) [1] என்பது அறிவடிப்படையில் ஓர் உண்மை ஆகும், ஒரு பொருள் பற்றி அது ஏற்கக்கூடியது (= ஏலும்) என்று அறியவும், ஒரு முடிவுக்கு வரவும், உறுதியாக நிலைநிறுத்தவும் பயன்படும் ஓர் அடிப்படைக் கருத்தியல் முறைகளைப் பற்றிய ஓர் அறிவுத்துறையாகும். ஏரணம் மெய்யியலின் ஒரு முக்கியமான துறை. ஏரணம் என்னும் தமிழ்ச்சொல் ஏல் = ஏற்றுக்கொள், இயல்வது, பொருந்துவது என்பதில் இருந்து ஏல்-> ஏர் ஏரணம் என்றாயிற்று [2] ஏரணம் என்பது படிப்படியாய் அறிவடுக்க முறையில் ஏலும் (= இயலும் பொருந்தும்), ஏலாது (இயலாது, பொருந்தாது) என்று கருத்துக்களைப் படிப்படியாய் முறைப்படி தேர்ந்து மேலே சென்று உயர் முடிபுகளைச் சென்றடையும் முறை மற்றும் கருத்தியல் கூறுகள் கொண்ட ஒரு துறையாகக் கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் இதனை Logic (லா’சிக்) என்று கூறுவர். மேற்குலக மெய்யியலில் லாச்யிக் (ஏரணம்) என்பது கிரேக்க மொழிச் சொல்லாகிய லோகோசு (λόγος, logos) என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது ஆகும்.[1] இதன் பொருள் “சொல், எண்ணம், சொற்கருத்தாடல், காரணம், கொள்கை” "[3][4] என்பதாகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/49/Aristoteles_Logica_1570_Biblioteca_Huelva.jpg/640px-Aristoteles_Logica_1570_Biblioteca_Huelva.jpg)
ஆரம்பத்தில் ஏரணம் என்ற சொல் "வார்த்தை" அல்லது "என்ன பேசப்படுகிறது" என்ற நோக்கத்துடனும் சிந்தனை அல்லது காரணம் என்ற புரிதலுடனும் பார்க்கப்பட்டது. பொதுவாக வாதங்கள் வடிவத்தில் முறையான ஆய்வுகளை ஏரணம் கொண்டிருக்கும். வாதம் மற்றும் அதன் ஊகங்களின் முடிவு இவற்றிடையே நிலவும் தருக்க ஆதரவே சரியான வாதம் என்பதாகும். சாதாரண சொற்பொழிவுகளில், அத்தகைய வாதத்தின் முடிவுகள் எனவே, அதனால், ஆகையால், இதனால் போன்ற வார்த்தைகளால் குறிப்புணர்த்தப்படுகிறது.
ஏரணம் என்பதன் சரியான நோக்கம் மற்றும் பொருள் தொடர்பான உலகளாவிய உடன்பாடு எதுவும் இல்லை, ஆனால் அது பாரம்பரியமாக வாதங்களின் வகைப்பாட்டையும், அனைத்து வாத வடிவங்களுக்கும் பொதுவான சரியான வாதத்தை முறையாக விரித்துரைத்தலையும், போலித்தனம் உள்ளிட்ட நம்பகத்தன்மையை ஆய்வு செய்தல் மற்றும் முரண்பாடுகள் உட்பட சொற்பொருள்களின் ஆய்வு ஆகிய அனைத்தையும் இது உள்ளடக்கியுள்ளது. வரலாற்று ரீதியாக, தத்துவ துறையில் ஏரணம் ஆராயப்பட்டு வந்தது. 1800 களின் நடுப்பகுதியில் பண்டைய காலத்திலிருந்து கணிதப் பிரிவிலும் ஏரணம் ஆராயப்பட்டது. மற்றும் சமீபத்தில் கணினி அறிவியல், மொழியியல், உளவியல் மற்றும் பிற துறைகளில் எரணம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்தியா,[5] சீனா,[6] பேர்சியா மற்றும் கிரேக்கம் ஆகிய நாகரிகங்களில் ஏரணமானது ஆராயப்பட்டுள்ளது. மேற்கத்தேய நாடுகளில் ஏரணமானது அரிசுடாட்டிலால் முறையான கட்டுப்பாடாக நிறுவப்பட்டது. மெய்யியலில் ஏரணத்திற்கு அடிப்படை இடம் கொடுத்தவர் அரிசுடாட்டில் ஆவார். பின்னர் அல் ஃபராபி என்பவர் ஏரணத்தை மேலும் விரிவாக்கி அதை யோசனைகள் மற்றும் ஆதாரங்கள் என இரு வகையாகப் பிரித்தார். கிழக்கு நாடுகளில் பௌத்தர்களாலும் சமணர்களாலும் ஏரணம் அபிவிருத்திக்கு உள்ளாக்கப்பட்டது.