தருமம்
From Wikipedia, the free encyclopedia
தருமம் அல்லது அறம் என்பது இந்து சமயம், பௌத்தம், சமணம் போன்ற இந்திய சமயங்களில் வாழ்க்கைக்கான சரியான வழிமுறையாகச் சொல்லப்பட்டிருக்கும் நீதி நெறி அல்லது போதனைகள் ஆகும். இது கொடை, கருணை, தயை போன்ற பல்வேறு பொருள் தரும் சொல்லாகவும் உள்ளது. இந்து சமயத்தை ’சனாதன தருமம்’ என்று அழைப்பர். வட மொழி நூலான மனுதரும சாத்திரம் வருணாசிரம தருமம் என நான்கினைக் குறிகிறது. பொதுவாக கொடையாளர்கள் அல்லது யாசிப்பவர்கள் தருமம் என்ற சொல்லை பயன்படுத்துவர்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மனிதர்களைப் பொறுத்தவரை தருமம் என்றால் சரியான செயல்களைச் செய்வது, சரியான பாதையில் நடப்பது ஆகும். உலகத்திலுள்ள மனிதர்கள் இவ்வாறு நீதி நெறியில் வாழ்வது மட்டுமல்லாமல், வான் வெளியில் உலகம் உழல்வதும், அண்ட சராசரங்கள் ஓர் ஒழுங்கில் இயங்குவதும் தருமம் எனப்படும் இறைவனின் விதிகளில்தான் என்கிறது இந்து சமயம்.
வேதாந்த சாத்திரங்களின்படி ”எது தாங்குகின்றதோ அதுவே தர்மம்” என்று வரையறுத்துக் கூறுகிறது. தனி மனித தருமம், சமூக தருமம், இராஷ்டிர தருமம் அல்லது தேசிய தருமம் மற்றும் மனித சமூகத்திற்கான தருமம் என்ற ஐந்தாக தருமங்கள் உள்ளன. இந்து சமய தத்துவத்தில் தர்மம் என்பது நான்கு புருஷார்த்தங்களில் முதன்மையானதாகும்.