யூலியன் அசாஞ்சு
From Wikipedia, the free encyclopedia
யூலியன் பவுல் அசாஞ்சு (Julian Paul Assange, பிறப்பு: 3 சூலை 1971) என்பவர் ஆத்திரேலிய ஊடகவியலாளரும்[3], வெளியீட்டாளரும்[4] ஆவார். விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை நிறுவி, அதன் முதன்மை ஆசிரியராகவும் பேச்சாளராகவும் உள்ளார். விக்கிலீக்சைத் தொடங்குவதற்கு முன்னர் இவர் இயற்பியல், கணிதவியல் மாணவராகவும் கணினி நிரலாளராகவும் இருந்தார்.
யூலியன் அசாஞ்சு Julian Assange | |
---|---|
2014 இல் அசாஞ்சு | |
பிறப்பு | யூலியன் பவுல் ஹோக்கின்சு 3 சூலை 1971 (1971-07-03) (அகவை 53) டவுன்சுவில், குயின்சுலாந்து, ஆத்திரேலியா |
குடியுரிமை |
|
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1987–இன்று |
அறியப்படுவது | விக்கிலீக்ஸ் நிறுவனர் |
பட்டம் | பணிப்பாளர்[1] and editor-in-chief of WikiLeaks (2006–2018); publisher (since 2018)[2] |
அரசியல் கட்சி | விக்கிலீக்ஸ் கட்சி (2013–2015) |
வாழ்க்கைத் துணை |
|
கையொப்பம் |
அசாஞ்சு 2006 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தைத் தொடங்கினார். இவர், ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானித்தான், ஈராக் போர்கள் குறித்த பெரும் எண்ணிக்கையிலான இரகசிய ஆவணங்களைத் தனது இணையத்தளத்தில் கசிய விட்டதை அடுத்து, உலக அளவில் பெரும் கவனிப்புக்குள்ளானார். இவர், பல நாட்டு அரசுகளின் கண்டனத்துக்குள்ளாகியிருந்த அதே வேளையில், உலக அளவில் மனித உரிமை ஆர்வலரிடையே பிரபலம் பெற்றார். பல ஊடக விருதுகளைப் பெற்றுள்ளார்.
அசாஞ்சு பல நாடுகளில் வசித்து வந்துள்ளார். தாம் எப்போதும் பயணித்தபடியே உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நவம்பர் 2010 இல் சுவீடன் நீதிமன்றம், இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்திப் பன்னாட்டுப் பிடியாணையைப் பிறப்பித்தது. ஆனால், இக்குற்றச்சாட்டுகளை மறுத்த அசாஞ்சு, இது விக்கிக்கசிவுகளினால் பாதிக்கப்பட்டோரால் புனையப்பட்ட வழக்கு என்று கூறினார். இருப்பினும் 2010 திசம்பர் 7ஆம் திகதி இவர் இலண்டனில் காவல்துறையினரிடம் சரணடைந்தபோது கைது செய்யப்பட்டார்.[5] 2010 திசம்பர் 14 அன்று இவர் பிணையில் விடுவிக்கப்பட்டபோதிலும் இரண்டு நாள் கழித்தே திசம்பர் 16 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.[6][7]
2012 ஆகத்து மாதத்தில் எக்குவடோர் அரசு புகலிட உரிமையை வழங்கியது. அதன் பின்னர் இவர் இலண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் தங்கியிருந்தார். இவருக்கு 2017 டிசம்பர் 12 முதல் எக்குவடோரின் குடியுரிமை வழங்கப்பட்டது.[8]
ஐக்கிய இராச்சியத்துக்கான எக்குவடோர் தூதர் காவல்துறையினரை தூதரகத்தினுள் அழைத்ததை அடுத்து, 2019 ஏப்ரல் 11 அன்று அசாஞ்சு பிரித்தானியக் காவல்துறையினரால் எக்குவடோர் தூதரகத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.[9] அசாஞ்சு இத்தூதரகத்தில் மொத்தம் 2,487 நாட்கள் வாழ்ந்திருந்தார்.[10] ஐக்கிய இராச்சியத்தின் பிணை ஆணைச் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு 50 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.[11] மே 2019, சூன் 2020 இல், அமெரிக்க அரசு அசாஞ்சுக்கு எதிராக 1917 இன் உளவு சட்டத்தை மீறியதற்காக குற்றம் சாட்டியது, அத்துடன் அவர் கொந்தர்களுடன் சதி செய்ததாகக் குற்றம் சாட்டியது.[12][13][14] அசாஞ்சு ஏப்ரல் 2019 முதல் சூன் 2024 வரை இலண்டனில் உள்ள பெல்மார்சு சிறையில் அடைக்கப்பட்டார், அமெரிக்க அரசாங்கத்தின் ஒப்படைப்பு முயற்சி பிரித்தானிய நீதிமன்றங்களில் எதிர்க்கப்பட்டது.[15][16][17]
சூன் 2024 இல், அசாஞ்சு அமெரிக்க வழக்குரைஞர்களுடன் ஒரு தண்டனைத் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார். உளவுச் சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆவணங்களைப் பெற்று வெளியிடச் சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் வடக்கு மரியானா தீவுகளுக்கான மாவட்ட நீதிமன்றத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.[18][19] ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், நீதித்துறை வழக்கறிஞர்கள் அவரை உடனடியாக விடுவிக்க அனுமதிக்கும் தண்டனையை கோரினர். வெளியிடப்படாத ஆவணங்களைத் திருப்பித் தருமாறு அல்லது அழித்து, பிரமாணப் பத்திரத்தை வழங்குமாறு விக்கிலீக்சுக்கு அறிவுறுத்துமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது. அசாஞ்சு உடனடியாக சைப்பேனை விட்டு முன்னாள் ஆத்திரேலியப் பிரதமரும், அமெரிக்காவுக்கான ஆத்திரேலியத் தூதருமான கெவின் ரட் உடன் வெளியேறினார்.[20] 2024 சூன் 26 அன்று அசாஞ்சு ஆத்திரேலியத் தலைநகர் கான்பரா வந்து சேர்ந்தார்.[21]