சோலோனிய அரசியலமைப்பு
பண்டைய ஏதென்சில் சோலனால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு / From Wikipedia, the free encyclopedia
சோலோனிய அரசியலமைப்பு (Solonian Constitution) என்பது கிமு 6 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏதென்சுக்காக சோலோனால் உருவாக்கப்பட்டதாகும்.[1] சோலோனின் காலத்தில், மக்கள் பிரிவினருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாக ஏதெனியன் அரசு கிட்டத்தட்ட துண்டு துண்டாகிவந்தது. திராகோவின் பழைய சட்டங்களைத் திருத்த அல்லது ஒழிக்க சோலன் விரும்பினார். அவர் குடிமை மற்றும் தனிநபர் வாழ்க்கை முழுவதையும் உள்ளடக்கிய சட்டங்களின் கோட்பாட்டை அறிவித்தார், அதன் நன்மையால் ஏற்பட்ட விளைவுகள் என்பது [2] அவரது அரசியலமைப்பின் முடிவுக்குப் பிறகும் நீண்ட காலம் நீடித்தது.
சோலனின் சட்ட சீர்திருத்தங்களின் படி, விவசாயிகளின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் கடனுக்காக அடிமையாக்கபட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பண்ணையடிமை முறையில் வேளாண்மை செய்த ஹெக்டெமோரோய் ("ஆறில் ஒரு பங்கு தொழிலாளர்கள்") என்ற நிலையும் நீக்கப்பட்டது. இந்த சீர்திருத்தங்கள் சீசாச்சியா என்று அழைக்கப்பட்டன.[3] சோலனின் அரசியலமைப்பானது, பிறப்பின் அடிப்படையை விட செல்வ நிலையை அரசியல் பதவிகளை வகிப்பதற்கான அளவுகோலாக மாற்றினார். அதன் மூலம் பழைய பிரபுத்துவத்தின் அதிகாரம் குறைத்தது, இது திமோக்ராட்டியா (செல்வர் ஆட்சி) எனப்படும் அமைப்பாகும். குடிமக்கள் தங்கள் நிலங்களில் செய்யும் உற்பத்தியின் அடிப்படையில் பென்டாகோசியோமெடிம்னோய், ஹிப்பிஸ், ஜீகிடே, தீட்ஸ் என்னும் நான்கு பிரிவினராக பிரிக்கப்பட்டனர்.[4] கீழவைக்கு மேல்முறையீடுகளை கேட்கும் உரிமை வழங்கப்பட்டது, மேலும் சோலோன் மேலவையையும் உருவாக்கினார். இவை இரண்டும் அரியோபகாகு பிரபுத்துவ அவையின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் அமைந்தன. சோலன் வைத்திருந்த கொடூரமான அரசியலமைப்பின் பகுதிகள் கொலை தொடர்பான சட்டங்கள் மட்டுமே ஆகும். அரசியலமைப்பு கவிதையாக எழுதப்பட்டது. அது அறிமுகப்படுத்தப்பட்டவுடன், சோலன் பத்து வருடங்கள் தன்னைத்தானே நாடுகடத்திக்கொண்டார். அதனால் அவர் ஒரு சர்வாதிகாரியாக அதிகாரத்தை கையில் எடுக்க ஆசைப்படவில்லை என்று காட்டினார்.