![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/40/Placenta_held.jpg/640px-Placenta_held.jpg&w=640&q=50)
சூல்வலிப்பு
From Wikipedia, the free encyclopedia
சூல்வலிப்பு (Eclampsia) இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் உள்ள பெண்களுக்கு ஏற்படும் சூல்வலிப்பும் இழுப்பும் ஆகும்.[1] இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் என்பது ஒரு கருவுற்றநிலைக் கோளாறு ஆகும். இந்நிலையில் உயர்குருதியழுத்தமும் சிறுநீரில் புரதமிகையும் அமையும்; ஏதாவதொரு உறுப்பில் அல்லது பல உறுப்புகளில் செயலிழப்பும் ஏற்படலாம்.[7][8] இது மகப்பேற்றுக்கு முன்போ மகப்பேற்றின்போதோ அல்லது அதற்குப் பின்போ ஏற்படலாம் .[1] பெரும்பாலும் இது கருவுறலின் இரண்டாம் அரைப்பகுதியில் ஏற்படும்.[1] வலிப்புகள் வலிவான சுருங்கி விரியும் தசைத்துடிப்பு வகையினதாகும். இது ஒரு மணித்துளி நேரம் இருக்கும்.[1] வலிப்புக்குப் பின் மனமருட்சியோ புலன் மறக்கடிப்போ (coma) ஏற்படும்.[1] நுரையீரல் அழற்சி, பெருமூளைக் குருதியொழுக்கு, சிறுநீரகச் செயலிழப்பு, மாரடைப்பு ஆகிய சிக்கல்கள் நேரலாம்.[1] சூல்வலிப்பும் இளம்பேற்றுக் குளிர்காய்ச்சலும் பல பேரளவு கருவுற்றநிலை உயர்குருதியழுத்தக் கோளாறுகளின் ஒரு பகுதியாகும்.[1]
சூல்வலிப்பு | |
---|---|
![]() | |
பிரசவத்திற்குப் பிறகு வெட்டப்பட்ட சூல்வித்தகத்தின் மொத்த உடற்கூறியல் படம் | |
சிறப்பு | மகப்பேறியல் |
அறிகுறிகள் | வலிப்புகள், உயர் இரத்த அழுத்தம்[1] |
சிக்கல்கள் | நுரையீரல் அழற்சி, பெருமூளைக் குருதியொழுக்கு, சிறுநீரகச் செயலிழப்பு, மாரடைப்பு[1] |
வழமையான தொடக்கம் | கருவுற்ற 20 வாரங்களுக்குப் பிறகு[1] |
சூழிடர் காரணிகள் | சூல்நிலைக் குளிர்காய்ச்சல்[1] |
தடுப்பு | ஆஸ்பிரின், கால்சிய நிரப்புகள், குருதியழுத்த மருத்துவம்[2][3] |
சிகிச்சை | மக்னீசியம் சல்பேட்டு, ஐட்ரலாசைன், நெருக்கடிமுறை மகப்பேறு[1][4] |
முன்கணிப்பு | 1% அளவு இறப்பு இடர்[1] |
நிகழும் வீதம் | 1.4% மகப்பேறுகளில்[5] |
இறப்புகள் | உயர்குருதியழுத்தக்கருவுறலால் 46,900 பேர் இறந்தனர் (2015)[6] |
இதற்கு மருத்துவமாக, உயர் இடர் வாய்ந்தவர்களுக்கு ஆசுப்ரின் தரப்படும். உணவு குறைவாக உட்கொள்பவர்களுக்கு கால்சிய நிரப்பு மாத்திரைகள் தரப்படும். உயரழுத்தம் வருவதற்கு முன்பு மாத்திரைகள் தரப்படும்.[2][3] கருவுற்றநிலை உடற்பயிற்சிகளும் நலம் தரலாம்.[1] மகனீசிய்ம் சல்பேட்டைச் சிரையிலோ தசையிலோ செலுத்துதல் வலிப்புக்கு பாதுகாப்பாக உதவுகிறது.[4][9] இது வளர்ந்த, வளரும் நாடுகள் அனைத்துக்கும் பொருந்தும்.[4] செயற்கை மூச்சுயிர்ப்பும் தேவைப்படலாம்.[1] ஐட்ரலாசைன் போன்ற உயர்குருதியழுத்த மருந்துகள் தருதல், அல்குல் வழியாகவோ அறுவையாலோ நெருக்கடி மகப்பேறு நிகழ்த்துதல் இரண்டும் நல்ல தீர்வுகளாக அமையும்.[1]
இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் 5% அளவு மகப்பேறுகளிலும் சூல்வலிப்பு 1.4% அளவு மகப்பேறுகளிலும் ஏற்படுகிறது.[5] நல்ல மருத்துவ ஏந்துள்ளதால், வளர்ந்த நாடுகளில் 2000 மகப்பேறுகளில் ஒன்றில் இறப்பு ஏற்படுகிறது.[1] கருவுறலின்போதான இறப்புகளில் உயர்குருதியழுத்தக் கோளாறு மிகப் பொதுவான காரணமாக அமைகிறது.[10] இவை 2015 ஆம் ஆண்டில் மட்டும் 46,900 இறப்புகள் ஏற்பட்டன.[6] சூல்வலிப்பால் மட்டும் 1% பெண்கள் இறக்கின்றனர்.[1] இந்த eclampsia எனும் சொல் மின்னல் எனப் பொருள்படும் கிரேக்கச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.[11] முதன்முதலில் இந்நிலை கி. மு 5 ஆம் நூற்றாண்டில் இப்போக்கிரட்டீசால் விவரிக்கப்பட்டது.[11]