சுடுகலன்
From Wikipedia, the free encyclopedia
சுடுகலன் (Firearm) என்பது, கட்டுப்பாடான வெடிப்பின் உதவியுடன், ஒற்றை எறிபொருளையோ அல்லது பல எறிபொருட்களையோ அதிவேகத்துடன் எறிவதற்குப் பயன்படும் குழாய்வடிவக் கருவியாகும்.[1] எறிபடை திண்மமாகவோ நீர்மமாகவோ வளிமமாகவோ அமையலாம். இது துப்பாக்கி, பீரங்கி குண்டுகளைப் போல விடுதலையாகவோ, மின்அதிர்ச்சி தரும் எறிபடை போலவோ திமிங்கல வேட்டை ஈட்டி போலவோ சிறைபடுத்தப்பட்டோ அமையலாம். "சுடுதல்" என்ற சொல்லால் குறிக்கப்படும் இந்த அதிவேக எறிதல், சுடுகலன்களுள் மட்டுப்படுத்தப்பட்ட இடத்தினுள் வெடிபொருட்கள் விரைவாக எரிவதன் மூலம் உண்டாகும் வளிம அழுத்தம் காரணமாக நடைபெறலாம் அல்லது வெளியில் உள்ள அமுக்க எந்திரத்தில் அடைக்கப்பட்ட உயரழுத்த வளிமம் எறிபடையுள்ள குழாயூடே செலுத்தப்படுவதாலோ நிகழலாம். குறுகிய பருமனில் அடைபட்ட வளிமம் குழாய் நீளத்தின் நெடுக எறிபடையை முடுக்கி, வளிமச் செயல்பாடு குழாய் முனையில் நின்றதும், அதன் பயணத் தொலைவை எட்டும் அளவுக்கு விரைவையூட்டுகிறது. மாறாக, எறிபடையின் முடுக்கத்தை மின்காந்தப் புல உருவாக்கத்தாலும் செய்யலாம். இதற்கு குழாய்க்குப் பதிலாக வழிகாட்டித் தடங்கள் பொருத்தப்படும்.
பழைய சுடுகலன்களில் வெடிமருந்து அல்லது வெடித்தூள் எனப்பட்ட உந்துபொருள் (propellant) பயன்பட்டது. தற்காலச் சுடுகலன்களில் புகையாத் தூள், கோர்டைட்டு (cordite) என்பவை போன்ற பிற உந்துபொருட்கள் பயன்படுகின்றன. வழுவழுப்பான துளை கொண்ட துப்பாக்கிகள் தவிர, பிற புது வகையான துப்பாக்கிகள் சுழல் குழாய்களைக் கொண்டுள்ளன. இது தோட்டா எனப்படும் எறிபொருளில் சுழற்சியை ஊட்டுவதால், எறிபொருள் (பறந்து) செல்லும் பொழுது மேம்பட்ட நிலைப்பாட்டோடு பறந்து செல்கின்றது.
துப்பாக்கியின் தோற்றமுள்ள கருவிகள் முதலில் சீனாவில் கி.பி 1000 ஆண்டளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த்த் தொழில்நுட்பம் 12 ஆம் நூற்றாண்டளவில் எஞ்சிய ஆசியா முழுவது பரவி விட்ட்து. ஐரோப்பாவை 13 ஆம் நூற்றாண்டில் அடைந்த்து.[2]