சிவாஜி கணேசன்
நாடக ,திரைப்பட நடிகர் மற்றும் முன்னாள் அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
சிவாஜி கணேசன் (Sivaji Ganesan, 1 அக்டோபர் 1928 – 21 சூலை 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும்.[2] ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார்[3] என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும்.[4] தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன்.
சிவாஜி கணேசன் | |
---|---|
சிவாஜி கணேசன், 1962 ஆகத்து 24 பிலிம்பேரில் வெளியானது | |
பிறப்பு | விழுப்புரம் சின்னையா மன்ராயா்.கணேசமூர்த்தி (வி.சி.கணேசன்) (1928-10-01)1 அக்டோபர் 1928 விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 21 சூலை 2001(2001-07-21) (அகவை 72) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | நடிகர் திலகம், சிம்மக்குரலோன்[1] |
செயற்பாட்டுக் காலம் | 1952 – 1999 |
சமயம் | இந்து |
பெற்றோர் | தந்தை: சின்னையா மன்ராயா் தாயாா்: ராஜாமணி அம்மாள் |
வாழ்க்கைத் துணை | கமலா கணேசன் |
பிள்ளைகள் | சாந்தி இராம்குமார் பிரபு தேன்மொழி |
உறவினர்கள் | உடன்பிறந்தோா் :- வி. சி. திருஞானசம்பந்தர் வி. சி. கனகசபைநாதன் வி. சி. தங்கவேல் வி. சி. சண்முகம் வி. சி. பத்மாவதி.வேணுகோபால் பேரன்கள்: விக்ரம் பிரபு துஷ்யந்த் |
விருதுகள் | கலைமாமணி விருது பத்ம ஸ்ரீ பத்ம பூசன் தாதாசாஹெப் பால்கே விருது என். டி. ஆர் தேசிய விருது செவாலியர் விருது |
நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படுகின்றார். நீண்ட வசனங்களை எளிதில் உள்வாங்கிக் கொண்டு அதை உணர்ச்சிபூர்வமாக திரையில் பிரதிபலிக்கும் ஆற்றல் இவருக்கு இயல்பாகவே இருந்தது. நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர், நடிப்பு பல்கலைக்கழகம் என்றும் போற்றப்படுகிறார். சரித்திரம், புராணம் , குடும்பம், சமூகம் போன்ற அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று அதில் திறம்பட நடித்தவர் சிவாஜி கணேசன்.[5]
சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன். 1960 இல் எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க -ஆசிய திரைப்பட விழாவில் அந்த விருது வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் பத்ம ஸ்ரீ, பத்ம பூசன் மற்றும் திரைப்பட துறையின் உயரிய விருதான தாதாசாஹெப் பால்கே விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகரும் ஆவார்.