சிறப்பு நிறைவு
From Wikipedia, the free encyclopedia
சிறப்பு நிறைவு(Super Over)[1][2] அல்லது நீக்குவான் (Eliminator)[3][4], எனப்படுவது வரையிட்ட நிறைவுகளில் நடக்கும் ஒரு துடுப்பாட்டம் சமனில் முடியும்போது வெற்றியாளரை முடிவு செய்யப் பயன்படுத்தப்படும் முறை ஆகும்.
ஒரு போட்டியில் இரு அணிகளும் சமமான ஓட்டங்களைப் பெற்றிருந்தால் இருவருக்கும் ஆட்டப் புள்ளிகளை பகிர்ந்தளிக்காமல் இந்த சிறப்பு நிறைவில் வெற்றி பெற்ற அணிக்கே முழுமையான புள்ளிகளும் வழங்கப்படும். 2008ஆம் ஆண்டு சிறப்பு நிறைவு முறை முதன்முறையாக இருபது20 போட்டிகளில் பயன்படுத்தப்பட்டது. இது இதற்கு முன்னிருந்த பௌல் அவுட் முறைக்கு மாற்றாக அமைந்தது.
சமனான போட்டியொன்றில் இரு அணிகளும் மூன்று மட்டையாளர்களையும் ஒரு பந்து வீச்சாளரையும் சிறப்பு நிறைவில் விளையாட நியமிக்கின்றன. இரு அணிகளும் மீண்டும் ஆடுகளத்திற்கு வருகின்றன. ஆறு பந்துகளுக்கு, முதல் அணி பந்துவீசி களத்தடுப்புச் செய்ய இரண்டாமணியின் மட்டையாளர்கள் தங்களால் இயன்ற அளவு ஓட்டங்களை எடுக்கின்றனர். பிறகு இரண்டாம் அணி பந்து வீச முதலாமணியின் மட்டையாளர்கள் ஓட்டங்களை எடுக்கின்றனர். இறுதியாக எந்த அணி கூடுதலான ஓட்டங்களை எடுத்துள்ளதோ அந்த அணியே வென்றதாக அறிவிக்கப்படுகிறது. மட்டையாளர்கள் வழக்கமான முறைகளில் வீழ்த்தப்படுகின்றனர். ஓரணியின் இரண்டு மட்டையாளர்களும் ஆட்டமிழக்கும் போது அந்த அணியின் சிறப்பு நிறைவு முடிவுறுகிறது.
ஒருவேளை சிறப்பு நிறைவும் சமனில் முடிந்தால் எதிரணியை விட அதிக நான்குகள் அடித்த அணி வெற்ற பெற்றதாக அறிவிக்கப்படும். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வரலாற்றில் முதன்முறையாக 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் சிறப்பு நிறைவு முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதுவும் சமனில் முடிந்ததால் நான்குகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.