தமிழர் விளையாட்டுகள் (சங்ககாலம்)
From Wikipedia, the free encyclopedia
சங்ககால விளையாட்டுகள் சங்கப்பாடல்களிலிருந்து தொகுக்கப்பட்டு அகர-வரிசையிலும், பாகுபாட்டு-வரிசையிலும் இங்குத் தரப்பட்டுத் தனித்தனியே விளக்கப்படுகின்றன.
கெடவரல், பண்ணை ஆகிய இரண்டு சொற்களும் விளையாட்டை உணர்த்தும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். [1]
கூடி விளையாடும்போது இரண்டு குழுவாகப் பிரிவதற்காக இருவர் இருவராக இணைந்து புதுப்பெயர்களை வைத்துக்கொள்வர். ஒருவர் கல் என்றும், மற்றொருவர் மண் என்றும் பெயர் சூட்டிக்கொண்டால், ஓர் அணித்தலைவனிடம் சென்று, கல் வேண்டுமா, மண் வேண்டுமா என்று கேட்பர், அவர் மண் வேண்டும் என்று சொன்னால் மண் என்று பெயர் சூட்டிக்கொண்டவர் அந்தத் தலைவர் அணியில் சேர்ந்துகொள்வார். இந்த முறை தொல்காப்பியர் காலத்திலேயே இருந்துவந்தது. [2]
தெரு, மறைவிடம், மன்றம், செய்குன்று, இளமரக்கா என்னும் பூங்கா, பந்தல், பளிக்கறை, நீர்நிலை, நெடுமணல்-பரப்பு, காவற்காடு, கனிமலர்ச்சோலை, களம் முதலான பகுதிகளில் சங்ககால மக்கள் விளையாடியதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.