From Wikipedia, the free encyclopedia
கிறித்தவம் குறித்த விமர்சனங்கள் (Criticism of Christianity) என்னும் பொதுத் தலைப்பின் கீழ் வரலாற்றில் கிறித்தவம், கிறித்தவ சபை, கிறித்தவர்கள் குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் பதியப்படுகின்றன.
இத்தகைய விமர்சனங்களுள் சில கிறித்தவ நம்பிக்கைகள் பற்றியும், மறைநூலில் அடங்கியுள்ள போதனைகள் பற்றியும், மறைநூலை விளக்கியுரைப்பது பற்றியும் அமைந்தவை. இத்தகைய விமர்சனங்களுக்கு ஒழுங்குமுறையான பதில் வழங்குகின்ற சிறப்பு இயல் கிறித்தவ தன்விளக்கம் (Christian Apologetics) என்று அழைக்கப்படுகிறது.
மேலும் கிறித்தவம் பற்றி விமர்சிக்கப்படும் பொருள்கள் இவை: மறைநூலில் அடங்கியுள்ள சில கொள்கைகள்; வரலாற்றில் சில அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகளை அறவியல் பார்வையில் நியாயப்படுத்துகின்ற சில விவிலிய விளக்கங்கள்; கிறித்தவம் அறிவியலோடு ஒத்துப் போக இயலுமா என்னும் கேள்வி; சில கிறித்தவக் கொள்கைகள்.
விவிலியத் திறனாய்வு (Biblical criticism) என்பது, விவிலியத்தை வரலாற்றில் பல கட்டங்களில் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பாகக் கொண்டு, பிற இலக்கிய மற்றும் மெய்யியல் ஆவணங்களை ஆய்வதற்குப் பயன்படுத்துகின்ற கருவிகளை விவிலிய ஆய்வுக்கும் பயன்படுத்தி விமர்சிக்கின்ற துறை ஆகும்.
இத்தகைய திறனாய்வு முறை 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் எழுந்த அறிவொளிக் காலத்தின் தாக்கத்தைக் கொண்டுள்ளது.[1] விவிலியம் கூறுகின்ற செய்தியை ஆழமாக அறிவதற்குப் பொதுவாக மையநீரோட்ட கிறித்தவ சபைகளும் ஆய்வாளர்களும் பயன்படுத்துகின்ற பல்வேறு உத்திகளின் தொகுப்பே விவிலியத் திறனாய்வு ஆகும். இதில் பொதுவான வரலாற்றுத் தத்துவங்கள் பயன்படுகின்றன. விவிலியம் கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட நூல் தொகுப்பு என்னும் கருத்தை முதன்மைப்படுத்தாமல், வரலாற்றில் வாழ்ந்த மனிதர்களே அதனைத் தொகுத்தார்கள் என்னும் அடிப்படையில் விவிலிய நூல்களை ஆய்வுக்கு உட்படுத்துவது இப்பார்வையின் தனித்தன்மை ஆகும்.
விவிலியத் திறனாய்வில் நான்கு முக்கிய வகைகள் உண்டு.[2] அவை கீழ்வருவன:
ஆய்வாளர்களும் ஐயவாதிகளும் (skeptics) விவிலியத்தில் முரண்பாடான கூற்றுகள் உள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றனர்.[4]
ஒரே நிகழ்வை எடுத்துக் கூறுவதில் பெயர், எண்ணிக்கை, இடம், சூழ்நிலை போன்றவற்றில் வேறுபாடுகள் உள்ளதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த விமர்சனத்திற்கு பொதுவாகத் தரப்படுகின்ற பதில் இது: விவிலிய நூல்கள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு ஆசிரியர்களால் வெவ்வேறு இலக்கியப் பாணிகளில் எழுதப்பட்டவை. எனவே ஒவ்வொரு ஆசிரியரும் பயன்படுத்திய மூல ஏடு/ஏடுகள், வாய்மொழி மரபு/மரபுகள் வேறுபாடுகளைக் கொண்டிருந்திருக்கலாம் (documentalry hypothesis).[5][6] அந்த வேறுபாடுகள் காரணமாக முரண்பாடுகள் எழக்கூடும்.[7]
இயேசுவின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் நான்கு நற்செய்தியாளர்கள் எழுதிய நூல்கள் புதிய ஏற்பாட்டில் உள்ளன (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்).
மேற்கூறிய நான்கு நற்செய்தி நூல்களும் ஒரே இயேசுவைப் பற்றிப் பேசினாலும் இயேசுவின் வாழ்வு, போதனை, சாவு, உயிர்த்தெழுதல் பற்றி விவரிக்கும்போது அந்நூல்களுக்கிடையே ஒரு சில முரண்பாடுகளைக் காண முடிகிறது. அவற்றைத் தம்முள்ளே இசைவுற இணைப்பது கடினமாகவும் உள்ளது. இதை விவிலிய அறிஞர் ஈ.பி. சான்டெர்சு (E. P. Sanders) என்பவர் சுட்டிக்காடுகிறார்.[8]
விவிலிய நூல்கள் கடவுளின் கடவுளின் தூண்டுதலால் எழுதப்பட்டதால் அவற்றுள் எந்த வித தவறுகளும் அடங்கியிருக்கவில்லை என்று கிறித்தவர்கள் பொதுவாக நம்புகிறார்கள். இதை விவிலியத்தின் தவறாத் தன்மை (inerrancy of the Bible) என்று கூறுவர்.[9] ஹாரொல்ட் லின்ட்செல் என்பவர், "விவிலியத்தில் தவறான கூற்றுகள் இருந்தாலும் அவற்றை விவிலியம் தவறாது எடுத்துரைக்கின்றது" என்று கூறுகின்றார்.[9]. எடுத்துக்காட்டாக, சாத்தான் ஒரு பொய்யன். அப்பொய்யனின் கூற்று தன்னிலே பொய்யானதாக இருந்தாலும் அதை விவிலியம் அப்படியே எடுத்துரைக்கிறது.[9]
விவிலியத்தில் தவறு அடங்கியிருக்கவில்லை என்போர் விவிலியத்தில் அடங்கியிருக்கும் ஒவ்வொரு சொல்லையும் சொற்றொடரையும் கடவுள் அப்படியே எழுத்துக்கு எழுத்து என்று வெளிப்படுத்தினார் என்றோ, விவிலிய நூல்களின் ஆசிரியர்கள் கடவுளின் வார்த்தையை எழுத்துக்கு எழுத்து என்று எடுத்தெழுதினார்கள் என்றோ கூறுவதில்லை. மாறாக, கடவுள் மனித ஆசிரியர்களைப் பயன்படுத்தி, அவர்களது மொழி, நடை, பாணியிலும் தவறின்றியும் எழுதிட உதவினார் என்பர்.[10]
கடவுளின் வார்த்தை என்ற வகையில் அதில் கடவுள் நமக்கு வெளிப்படுத்த விரும்பிய உண்மைகள் அப்படியே யாதொரு தவறுமின்றி நம்மை வந்தடைகின்றன.[11] இருப்பினும், எந்த அளவுக்கு விவிலியம் தவறில்லாமல் உள்ளது என்பது குறித்து கருத்தொற்றுமை இல்லை. சிலர், விவிலியம் மனிதரின் மீட்புப் பற்றிய உண்மைகளை போதிப்பதாலும், அறிவியல் உண்மைகளை எடுத்துரைப்பது அதன் நோக்கமன்று என்பதாலும் அதில் அறிவியல் தொடர்பான தவறுகள் இருப்பதில் வியப்பில்லை என்பர்.[12] வேறு அறிஞரோ, விவிலியத்தில் அறிவியல் சம்பந்தமான தவறுகள் உண்டு என்பர்.[13] விவிலியத்தில் எந்தவொரு தவறுமே இல்லை என்போரும் உண்டு.
விவிலியம் மனிதருக்கு போதனை வழங்குவதில் தவறுகளை அளிப்பதில்லை என்னும்போது, அது எழுதப்பட்ட மூல மொழியிலிருந்து பிற மொழிகளில் பெயர்க்கப்படுவதில் எழும் தவறுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆயினும் பாட ஆய்வின் வழியாக மூல பாடம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை இன்று அறிய முடிகிறது.[10] இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் விவிலிய பாடம் மீண்டும் மீண்டும் எடுத்து எழுதப்பட்ட போதும் மொழியாக்கம் செய்யப்பட்ட போதும் பெரிதும் சிதைந்து போனதை எடுத்துக் கூறுவர்.
இயேசு பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் யூத இறைவாக்கினர்கள், வருங்காலத்தில் மக்களுக்கு விடுதலை வழங்கும் மெசியா ஒருவர் யூத குலத்தினின்று பிறப்பார் என்று முன்னறிவித்தனர். யூத சமயப் பார்வையில் அந்த இறைவாக்குகள் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறவில்லை. வேறு ஐயவாதிகள், அந்த இறைவாக்குகள் தெளிவின்றி உள்ளன என்றும், அவை நிறைவேறவில்லை என்றும் கூறுவர்.[14] பழைய ஏற்பாட்டு நூல்கள் புதிய ஏற்பாட்டு நூல்கள்மீது தாக்கம் கொணரவில்லை எனவும் கூறுவர்.[15] மேற்கூறியதற்கு மாறாக, கிறித்தவ தன்விளக்க அறிஞர்கள் மெசியா பற்றிய பழைய ஏற்பாட்டு இறைவாக்குகளை இயேசு தம் வாழ்வில் நிறைவேற்றினார் என்று கூறுவர்.[16] இயேசு மீண்டும் ஒரு முறை வருவார் என்றும், மெசியா பற்றிக் கூறப்பட்ட "இறுதித் தீர்ப்பு", "இறையாட்சி நிறுவுதல்", "மெசியா காலத்தை" தொடங்குதல் போன்ற இறைவாக்குகளை நிறைவேற்றுவார் என்றும் பல கிறித்தவர்கள் நம்புகின்றனர்.
புதிய ஏற்பாட்டின்படி இயேசு பிறந்தது தாவீதின் குலத்தில் ஆகும். இதை விமரிசிக்கும் வகையில் ஸ்டீபன் எல். ஹாரிசு (Stephen L. Harris) என்பவர் கூறுவார்: "இயேசு பழைய ஏற்பாட்டு இறைவாக்குகளை நிறைவேற்றவில்லை. அவர் யூத மக்களைப் பிற இனத்தாரிடமிருந்து விடுவிக்கவுமில்லை, தாவீதின் ஆட்சியை நிலைநாட்டவோ உலக அமைதியைக் கொணரவோ செய்யவுமில்லை. மாறாக, அவர் இழிவான சிலுவை மரணத்தைச் சந்தித்தார்; ஒரு குற்றவாளியாக சிலுவையில் அறையப்பட்டார். இது யூதர்கள் இயேசு கிறிஸ்துவைத் தமது மெசியாவாக ஏற்பதற்குப் பெரும் தடையாக உள்ளது.[17]
இதற்குப் பதில்மொழியாக, சில கிறித்தவ போதகர்கள் இயேசு இசுரயேலின் விடுதலையை நிறைவேற்றி ஆயிரம் ஆண்டு ஆட்சியைக் கொணர்வார் என்று கூறுகின்றனர்.
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யூத இறையியலாரான ஐசக் பென் ஆபிரகாம் (Isaac ben Abraham) என்பவர் தாம் எழுதிய "Chizzuk Emunah" ("உறுதிபெற்ற நம்பிக்கை") என்னும் நூலில், இயேசு வாக்களிக்கப்பட்ட மெசியா அல்ல என்றும், அவர் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தவில்லை என்றும் வாதிட்டார். மேலும் அவர் புதிய ஏற்பாட்டில் பல முரண்பாடுகள் உண்டென்றார். கிறித்தவர்கள் சனிக்கிழமைக்குப் பதில் ஞாயிற்றுக் கிழமையை ஓய்வுநாளாகக் கருதுவதையும் அவர் விமர்சித்தார்.[18] அந்நூலை அவர் யூதர்கள் கிறித்தவர்களாக மாறுவதை எதிர்த்து எழுதினார்.[19] அந்நூலுக்கு மறுப்பாக யோவான் கிறிஸ்தோஃப் வாகென்சைல் (Johann Christoph Wagenseil) என்பவர் ஒரு நூலை இலத்தீனில் எழுதினார். இவ்வாறு அந்நூலில் கூறப்பட்ட கருத்துகள் மேலும் பல ஐரோப்பியர் அறிய வந்தனர். கிறித்தவ சமயத்தை வன்மையாக விமர்சித்த வோல்ட்டேர் (Voltaire) என்பவர் ஐசக் பென் ஆபிரகாமின் நூலைப் பெரிதும் புகழ்ந்தார்.[18]
பழைய ஏற்பாட்டு இறைவாக்குகள் இயேசுவின் வாழ்வில் நிறைவேறின என்று வாதிட்டவர்களுள் முக்கியமான ஒருவர் பிலேசு பாஸ்கால் (Blaise Pascal) ஆவார். "இயேசு கிறிஸ்து இறைத்தன்மை கொண்டவர் என்பதற்கு இறைவாக்குகளே மிக உறுதியான நிருபணம்" என்பது பாஸ்காலின் கூற்று. சுமார் நாலாயிரம் ஆண்டளவாக வந்த இறைவாக்குகள் இயேசுவின் வாழ்வில் நிறைவேறியதை அவரே எடுத்துக் கூறினார் என்பதை பாஸ்கால் சுட்டிக்காட்டினார்.[20]
கிறித்தவ தன்விளக்க அறிஞர்களுள் ஒருவரான ஜாஷ் மெக்டோவல் (Josh McDowell) என்பவரும் பழைய ஏற்பாட்டு இறைவாக்குகள் இயேசுவில் நிறைவேறியதை எடுத்துரைத்தார். இயேசு எக்குலத்தில் பிறப்பார், எங்கே பிறப்பார் என்பதையும், அவர் கன்னியிடமிருந்து பிறப்பார், புதுமைகள் புரிவார், துன்புற்று இறப்பார், உயிர்த்தெழுவார் போன்றவற்றையும் இறைவாக்குகள் முன்னறிவித்தபடியே இயேசு நிறைவேற்றினார்.[21]
தாம் வலியுறுத்த விரும்புகின்ற கருத்துக்களை நிலைநாட்டும் வண்ணம் ஒரு சில விவிலியக் பகுதிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து விளக்கம் தருவது முறையானதன்று என்று சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, பெண்கள் மட்டிலும் ஓரினப் பால் ஈர்ப்புடையோர் மட்டிலும் வெறுப்புக் காட்டுவோர் இவ்வாறு செய்வதாக ஒரு குற்றச்சாட்டு. மோசே சட்டம் முழுவதுமே புதிய ஏற்பாட்டுச் சட்டம் வெளிப்படுத்தபின் செயலிழந்துவிட்டது என இந்த விமர்சகர்கள் கூறுகின்றனர்.
விருத்தசேதனம் பற்றிய சட்டம் புதிய ஏற்பாட்டிற்குப் பின்னர் செயலிழந்துவிட்டது சிலர் கூறுவர். ஆயினும் பழைய ஏற்பாட்டில் உள்ள முக்கிய சட்டமாகிய அன்புக் கட்டளை புதிய ஏற்பாட்டிலும் வலியுறுத்தப்படுகிறது.
கிறித்தவர்களிடையே பொதுவாக ஏற்கப்படுகின்ற கருத்து இது: பழைய ஏற்பாட்டு சட்டங்களுள் முக்கியமாக மூன்று வகைகள் உள்ளன. அவை அறநெறிச் சட்டம், சமயச் சடங்குச் சட்டம், தூய்மை பற்றிய சட்டம் என்பவை ஆகும். இவற்றுள் அறநெறிச் சட்டம் எக்காலத்திற்கும் எல்லா மனிதருக்கும் பொருந்துவன. எனவே, இறைவன் மட்டிலும் பிறர் மட்டிலும் அன்பு காட்டுதல், நீதி நெறிக்கு ஏற்ப ஒழுகுதல், பிறர் சொத்தைக் கவராதிருத்தல் போன்ற பொதுவான அறநெறிச் சட்டங்கள் தொடர்கின்றன.
பழைய ஏற்பாட்டில் பல சட்டங்கள் சமயச் சடங்குகள் பற்றியவை. பலி ஒப்புக்கொடுப்பதற்கான பலிப்பொருள் எப்படி இருக்க வேண்டும், எந்தெந்த வகையான பலிகள் உள்ளன போன்ற சட்டங்கள் புதிய ஏற்பாட்டுக் காலத்திற்குப் பின் செயலிழக்கின்றன.
தூய்மை பற்றிய சட்டங்களும் பழைய ஏற்பாட்டில் உள்ளன. அவையும் அக்காலப் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவை ஆதலால் இக்காலத்திற்குப் பொருந்துவன அல்ல.
இவ்வாறு பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையே வேறுபாடுகள் கற்பிப்பதில் இயேசு என்ன வழி காட்டினார் என்று கருதுவது முக்கியம். அதுபோன்றே தூய பவுல் போன்ற புதிய ஏற்பாட்டு நூலாசிரியர்கள் கிறித்தவ நடத்தையை எவ்வாறு விளக்கியுள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கிறித்தவ தன்விளக்க அறிஞர்கள் பதிலிறுக்கின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.