கிருதி
From Wikipedia, the free encyclopedia
கிருதி இசை வடிவங்களில் மிகச் சிறந்ததும் அரங்கிசை வகைகளில் மிக முக்கியமானதும் ஆகும். தற்காலத்து அரங்கிசை நிகழ்ச்சிகளில் கிருதிகளைப் பாடுவதற்கு அல்லது இசைப்பதற்குத் தான் அதிகமான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கிருதிகளை அதிகம் பாடும் போது அவற்றைப் பாடுவோர்க்கும், அவற்றைக் கேட்போருக்கும் அரியதோர் இசையின்பம் ஏற்படுகின்றது. பல இசைவாணர்களும் கிருதிகள் வழியாகப் பல அரும்பெரும் கருத்துக்களையும் தங்கள் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தியுள்ளனர். கிருதிகளில் கற்பனை சுரம், நிரவல் முதலியன பாடுவதற்கு ஏற்ற இடங்கள் உள்ளன.[1]
கிருதிகள் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் பகுதிகளைக் கொண்டவை. சில கிருதிகளில் அனுபல்லவி இருக்காது. அப்போது சரணத்திற்கு "சமஷ்டி சரணம்" என்று பெயர். சில சமயங்களில் சரணங்கள் ஒன்றுக்கு மேற்பட்டவையாகவும், ஒரே தாதுவால் (சுரக் கோர்வை) அல்லது வெவ்வேறு தாதுக்களால் அமைக்கப்பட்டோ இருக்கலாம். சாகித்தியம் இறைவனை பற்றியதாகவோ, உலகியலைப் பற்றியதாகவோ இருக்கலாம். கிருதியின் எல்லை 1 ½ ஸ்தாயி முதல் 2 ஸ்தாயி வரை உள்ளது. அனாகத, அதீத எடுப்புக்கள் கையாளப்படுகின்றன. கிருதிகள் எல்லா விதமான இராகங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. இராகங்களின் வடிவம் அழிந்து போகாமல் இருப்பதற்குக் கிருதிகள் தான் காரணம் என்று கருதப்படுகிறது.