கா. அப்பாத்துரை
தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர்களுள் ஒருவர் / From Wikipedia, the free encyclopedia
கா. அப்பாத்துரை (24 சூன் 1907 – 26 மே 1989) தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர்களுள் ஒருவரும் பன்மொழிப்புலவர் எனப் பெயர் பெற்றவரும் ஆவார். அப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது. தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஒரே ஆண்டில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார். இந்தி மொழியில் விசாரத் பட்டம் பெற்றார். இவை தவிர இன்னும் பல வேற்று மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். இதனாலேயே அறிஞர் பெருமக்கள் அவருக்குப் "பன்மொழிப்புலவர்" என்ற பட்டத்தைச் சூட்டினார்கள்.
கா. அப்பாத்துரை | |
---|---|
![]() | |
பிறப்பு | (1907-06-24)சூன் 24, 1907 குமரி, ஆரல்வாய்மொழி |
இறப்பு | மே 26, 1989(1989-05-26) (அகவை 82) |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | பன்மொழிப்புலவர் |
அப்பாத்துரையார் குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் பிறந்தார். இவர் எழுதிய நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நூல்களுள் குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு மற்றும் தென்னாட்டுப் போர்க்களங்கள் ஆகியவை தலையாயனவாகக் கருதப்படுகின்றன. தமிழும் தமிழரினமுமே உலக மொழிகளுக்கும் மனித இனத்திற்கும் முன்னோடிகள் என்னும் தனது கோட்பாட்டை அறிவியற்பூர்வமாகத் தனது ஆய்வுகள் மூலம் முன்வைத்தார்.