From Wikipedia, the free encyclopedia
கல்பசார் திட்டம் (Kalpasar Project) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கடற்கரையோரத்தில் அமையவுள்ள நன்னீர் நீர்த்தேக்கம் ஆகும். இந்த அணையானது கம்பாத் வளைகுடாவின் குறுக்காக 30 கி. மீ நீளத்திற்கு கட்டப்பட திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த அணை கட்டப்படுவதன் நோக்கம் நீர்ப்பாசனம், குடிநீர் தேவைகள், தொழிற்துறை பயன்பாடு ஆகியவை ஆகும்.[1][2] 30 கி.மீ. நீளமுள்ள இந்தக் கடல் அணை திட்டத்தில், குஜராத்தின் செளராஷ்டிர பிராந்தியத்தின் ஆறுகளான, நருமதை, மாகி, தாதர், சபர்மதி, லிம்ப்டி பாகோவா, மற்றும் இரண்டு சிறிய ஆறுகளில் ஓடி வரும் சராசரி ஆண்டு மழைநீர் ஓட்டத்தில் 25 விழுக்காட்டினை கணக்கிட்டு 10,000 மில்லியன் கன மீட்டர் நன்னீரை சேமிக்கும் நோக்கில் அமையவுள்ளது. அணைக்கு மேல் 10 வழிச் சாலை இணைப்பு அமைக்கப்படும், இது சவுராஷ்டிராவிற்கும் தெற்கு குஜராத்துக்கும் இடையிலான தூரத்தை வெகுவாகக் குறைக்கும்.[3] கடல் சூழலில் உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரியை உருவாக்கும் இந்த திட்டத்திற்கு, அலை மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமான செலவினைத் தவிர்த்து 90,000 கோடி ரூபாய் அல்லது 12.75 பில்லியன் அமெரிக்க டாலர் (2015-16 மதிப்பீடுகள் 8% வருடாந்திர பணவீக்கத்துடன்) செலவாகும். இந்தத் திட்டமானது கல்பசார் அணைக்கட்டின் கட்டுமானம் மற்றும் நர்மதா ஆற்றில் மற்றொரு பட்புத் தடுப்பணை, அத்துடன் இரண்டையும் இணைக்கும் கால்வாய் ஆகியவற்றை நிர்மாணிக்கும் திட்டமாக உள்ளது.[4]
2004 ஆம் ஆண்டில் உறுதியான நிலைப்பாட்டுடன் இதற்கான செலவினம் தொடங்கியது.[5] 2018 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள 250 கோடி ரூபாய் பல்வேறு சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் செலவிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு சூலை மாதத்திற்குள், சுற்றுச்சூழல், சூழலியல், சமூக மற்றும் நிதி பாதிப்பு போன்றவற்றுக்கான 43 சாத்தியக்கூறு ஆய்வுகளில் 25 முடிந்துள்ளது; மேலும் 8 பணிகள் நடந்து கொண்டிருந்தன; மீதமுள்ள 10 கணக்கெடுப்புகளை முடிக்க 3 முதல் 5 ஆண்டுகள் (2021-2023) ஆகலாம். விரிவான திட்ட அறிக்கையானது 2018 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.[6][7] இந்த திட்டம் சாத்தியமானதாகக் கண்டறியப்பட்டால், தற்போது நடைபெற்று வரும் 3 முதல் 5 ஆண்டு கால அளவிலான கட்டுமானத்திற்கு முந்தைய சாத்தியக்கூறு ஆய்வுகள் உட்பட திட்டப்பணிகள் முடிய இன்னும் 20 ஆண்டுகள் (2035-38 க்குள்) தேவைப்படலாம்.[8] 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, கல்பசார் அணைக்கு சுற்றுச்சூழலியல் அல்லது பிற துறைகளின் அனுமதிகள் எதுவும் பெறப்படவில்லை. இதற்கிடையில், திட்டத்தின் ஒரு சிறிய அங்கமான பதுத் தடுப்பணையின் கட்டுமானம் 2020 முதல் தொடங்க உள்ளது.[9]
சேமிப்புத் திறன் மற்றும் தடுப்பணைகள் இல்லாததால் நர்மதா ஆற்றில் இருந்து மட்டும் ஆண்டுதோறும் 30,000 எம்.சி.எம் நீர் கடலுக்குள் பாய்கிறது, இதனால் கல்பசார் திட்டத்தை விரைவுபடுத்த குஜராத்தின் நீர் கொள்கையை மறுஆய்வு செய்ய நிபுணர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.[10]
கல்பசார் என்றால் அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் ஏரி என்று பொருள். இந்து புராண ' கல்ப வ்ரிக்ஷா ' ( தேவநாகரி : कल्पवृक्ष) என்பதிலிருந்து தோன்றிய சொல் - விருப்பங்களை நிறைவேற்றும் மரம்.
கம்பாத் வளைகுடா 1975 ஆம் ஆண்டில் யுஎன்டிபி நிபுணர் திரு எரிக் வில்சனால் அலை மின் உற்பத்திக்கான ஒரு நம்பிக்கைக்குரிய தளமாக அடையாளம் காணப்பட்டது. அடுத்தடுத்த அரசாங்கங்கள் ஒரு திட்டத்தின் சாத்தியத்தை விரிவாக முன்வைத்தன. இத்திட்டத்தினை தனது மனதில் கருக்கொண்ட தொலைநோக்கு பார்வையாளர் டாக்டர் அனில் கேன் என்பவரால் கல்பசார் திட்டம் என்று பெயரிடப்பட்டது, அவர் 80 களில் இதை ஒரு சாத்தியமான திட்டமாகக் கருதினார். 1988-89 ஆம் ஆண்டில் கம்பாட் வளைகுடா முழுவதும் அணைக்கு ஒரு முன்னீட்டாய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டது. பலமான அடித்தளத்தை நிறுவுவதன் மூலம், வளைகுடாவை மூடுவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானது என்று அறிக்கை முடிவு செய்தது.[11] ஆய்வுகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், முன்மொழியப்பட்ட அணையின் நீளம் குறைக்கப்பட்டு கடலலை ஆற்றல் உற்பத்தி நிலைய கட்டுமானத் திட்டம் கைவிடப்படுகிறது. திட்டத்தின் செலவு (2017 ஆம் ஆண்டு நிலையில்) ₹ 90,000 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. சாத்தியமானது என்று அங்கீகரிக்கப்பட்டால் இந்த திட்டம் முடிவடைய 20 ஆண்டுகள் ஆகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.[12]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.