ஓமர்
பண்டையக் கிரேக்க இதிகாசக் கவிஞர் / From Wikipedia, the free encyclopedia
ஓமர் (Homer) என்பவர் பண்டையக் கிரேக்க இலக்கியத்தின் பெருங்காப்பியப் படைப்புகளான இலியது, ஒடிசி ஆகியவற்றை எழுதிய புகழ்பெற்ற இதிகாசக் கவிஞர் ஆவார். ஓமர் என்பவர் உண்மையில் வாழ்ந்தாரா, ஒடிசியும் இலியதும் அவரால் படைக்கப்பட்டனவா என்பது குறித்து மேனாட்டு அறிஞர்களிடையே ஐயமும் ஆராய்ச்சி விவாதங்களும் இருந்து வந்ததுண்டு. இன்றைய அறிஞர்கள் ஓமர் என்ற ஒரு கவிஞனே இவ்விரண்டு காவியங்களையும் படைத்தவன் என்று பொதுவாக ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் இந்த ஓமர் என்பவர் யார், எங்கே வாழ்ந்தார், அவர் வாழ்ந்த காலம் எது என்பனவற்றைப் பற்றி திட்டவட்டமாக வரையறுத்துக் கூறமுடியவில்லை. கிரேக்கர்கள் திராய் நகரை பத்து ஆண்டுகள் முற்றுகையிட்டு இறுதியில் அந்நகரை அழித்த கதையை இலியது காவியம் கூறுகிறது. திராய் போரின் கடைசி ஆண்டில் மன்னன் அகமோம்னனுக்கும் மாவீரனாகக் கருதப்படும் கிரேக்க கதாநாயகன்அக்கீலியசுக்கும் இடையில் நடந்த போரின்போது சில வாரங்கள் நீடித்த சண்டையில் இலியத் கவனம் செலுத்துகிறது. திராய் நகர் வீழ்ச்சியின்போது ஒடிசியசு என்ற மன்னன் தன்னுடைய நாடான இதாகா தீவுக்குத் திரும்ப முற்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கடைசியில் தன் தாய்நாடு சேர்ந்த கதையை ஒடிசி காவியம் கூறுகிறது.
ஓமர் Ὅμηρος | |
---|---|
பிரித்தானிய அருங்காட்சியகத்திலுள்ள ஓமரின் சிலை | |
பிறப்பு | c. 9 century BC Unknown |
இறப்பு | c. 8 century BC (அகவை 0) Ios |
பணி | கவிஞர், ஆசிரியர், எழுத்தாளர் |
பாணி | இதிகாசம் |
ஓமர் பற்றிய நம்பத் தகுந்த வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் செந்நெறிக் காலத்தில் இருந்தே கிடைக்கவில்லை. எத்தனையோ கதைகள் தோன்றி ஓமரின் வரலாற்று உண்மைகளை மறைத்து விட்டன. இன்றைய துருக்கியிலுள்ள அனடோலியா கடற்கரையோரத்தின் மையத்தில் அமைந்திருக்கும் ஐயோனியாப் பகுதியிலிருந்து வந்தவர் ஓமர் என்று கருதப்படுகிறது. சிறுவன் ஒருவனைத் துணையாகக் கொண்டு கிரேக்க நகரமெங்கும் பாடல்களைப் பாடிக்கொண்டு போகும் பாணன் என்பது அவரைப் பற்றி வழங்கி வரும் பழமையான கதைகளில் ஒன்றாகும் [1][2][3]
இலியத், ஒடிசி காவியங்கள் யாரால், எப்போது, எந்தச் சூழ்நிலையில் இயற்றப்பட்டவை போன்ற செய்திகள் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன. பரவலாகப் பேசும் நவீன அறிஞர்களின் கருத்து இவற்றுக்கான விடைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறது. ஓமர் என்ற தனிப்பெரும் கவிஞனே இலியத் என்ற காவியத்தசியும் ஒடிசி என்ற காவியத்தையும் இயற்றினான் என்கிறது ஒரு பிரிவு. பல்வேறு காலங்களில், பல்வேறு இடங்களில் பாடப்பட்டு வந்த வீரச்சுவை மிகுந்த பாடல்கள் காலப்போக்கில் பெருங்காப்பியங்களாக தொகுக்கப்பட்டன. இத்தொகுப்பில் முக்கியப்பங்கு ஆற்றியவர் ஓமர் என்று மறு பிரிவும் கூறுகின்றன [3]. ஆனாலும், இவ்விரு இதிகாசங்களும் 2800 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட காவியங்கள் எனப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது [4]. ஐயோலிக், அயோனியன் போன்ற பிராந்தியக் கிரேக்க மொழிகள் கலந்த ஒரு மொழி ஓமரால் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கருதப்படுகிறது, அதிலும் குறிப்பாக கிழக்கத்திய அயோனிக் மொழியின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும் கருதப்படுகிறது [5][6].
பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் இவ்விரு காவியங்களும் வாய்மொழி இலக்கியங்களாக தலைமுறைகள் கடந்து வந்தவையாக இருக்கலாம் என நம்புகின்றனர் [7].
கி.மு. எட்டாவது நூற்றாண்டுக்கு முந்தைய கிரேக்கச் சொற்கள் ஓமரின் நடையில் இடம்பெற்றுள்ளன. பழங்காலத்தில் இருந்து இன்றைய வரை மேற்கத்திய நாகரிகத்தின் மீது ஓமரின் புராணங்கள் அதிக செல்வாக்கு செலுத்துகின்றன. இலக்கியம், இசை, கலை மற்றும் திரைப்படம் போன்ற மிக பிரபலமான படைப்புகளில் இவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது [8]. ஓமரின் புராணங்கள் பண்டைய கிரேக்க கலாச்சாரம் மற்றும் கல்வியில் மிகப்பெரிய தாக்கத்தை கொண்டிருந்தன; பிளேட்டோவிற்கு, ஓமர் வெறுமனே கிரேக்கத்தைக் கற்பித்தவர் என்று எளிமையாகச் சொல்வர் [9][10].