ஒளியிழை
From Wikipedia, the free encyclopedia
ஒளியிழை அல்லது ஒளிநார் அல்லது கண்ணாடி ஒளியிழை (optical fibre அல்லது optical fiber) என்பது மயிரிழை போன்ற மெல்லிய நீளமான பொருளின் நடுவே அதன் அச்சுப்பகுதியில் மட்டுமே சென்று ஒளியைக் கடத்தும் இழை. இது ஓர் அலைநடத்தி போன்று தொழிற்பட்டு இழையின் இரு முனைகளுக்கிடையேயும் ஒளியைக் கடத்தும் தன்மையுடையது.[1] பயன்பாட்டு அறிவியல், பொறியியல் ஆகிய நெறிகளில் ஒளியிழைகளின் வடிவமைப்பு மற்றும் பயன்பாடுகள் இழை ஒளியியல் (fiber optics) என அழைக்கப்படுகின்றது. இதன் பயன்பாடு கணினியின் தரவுகளையும், தொலைபேசியின் குறிகைகளையும் (குறிப்பலைகளையும்) ஒளியின் பண்புகளில் மாற்றங்களாக ஏற்றி, நெடுந்தொலைவு கடத்திச் செல்ல இன்று மிகவும் பயன்படுகின்றது. ஒளியலைகளின் மீது ஏற்றப்பட்ட செய்தி, அல்லது தரவுக்குறிபலைகள், கடலடியே கண்டம் விட்டு கண்டம் தாண்டியும் செலுத்தப் பெறுகின்றன. அதே போல உடலின் உள்ளுறுப்புகளின் பகுதியைச் சோதனை செய்யவும், பிற கருவிகளின் உட்பகுதியைச் சோதனை செய்யவும் படம் எடுத்து அந்தத் தரவுகளை வெளிக்கொணரவும் பயன்படும் ஒளியிழைநோக்கி (fibrescope) போன்ற கருவிகளிலும் இந்த ஒளியிழை (ஒளிநார்) பயன்படுகின்றது.
ஒளியலைகள் மிகுந்த அதிர்வெண் கொண்டவை ஆகையால், கூடுதலான குறிகைகளை ஏற்றி செலுத்த இயலும். இதனால் ஒளியிழைகள் பெரும்பாலும் அதிக கற்றையகலம் (தரவு வேகம்) கொண்டதான, ஒளியிழை தொலைதொடர்புகளில் பயன்படுத்தப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் ஒளியிழை தொலை தொடர்பு தொழில்நுட்பத்தைக்கொண்டு அதிவேக இணைய தொடர்புகள் (அதாவது 1 Gb/s தரவு வேக தொடர்புகள்) கொண்டுவர சில சோதனைகள் செய்துவருகிறது.
இங்கு செப்புக் கம்பிகள் போன்ற மாழைக் கம்பிகளுக்கு மாறாக கண்ணாடியிழைகள் பயன்படுத்தப்படுகிறன, ஏனென்றால் குறிகைகள் (signals) இதனுள் பயணிக்கும் பொழுது அதன் ஆற்றல் குறைவாகவே இழக்கிறது; மேலும் இவை மின்காந்த விளைவுகள் தடுப்பு திறன் கொண்டவையாகும். இவை ஒளியூட்டுவதற்காகவும் பயன்படுத்துவார்கள்; கோவையாக சேர்த்து இவைகளை ஒரு ஒளியுருவுவை (பிம்பத்தை) கடத்தவும் பயன்படும். இதனை சிறப்பாக வடிவமைத்து தயாரித்தால் பல்வேறு பயன்பாடுகளில் இவை துணை புரியும், எடுத்துக்காட்டாக, ஒளியிழை உணரிகள் மற்றும் இழைச் சீரொளிகள்.
ஒளியிழைகள், முழு அக எதிரொளிப்பு கொண்டதான உள்ளகம் என்ற மையப்பகுதியில் தான் ஒளியை ஓரிடத்தில் இருந்து மற்றையிடங்களுக்கு கடத்தும். இதனாலேயே ஒளியிழைகள் அலைநடத்திகளாக செயலாற்றுகிறது. கண்ணாடி ஒளியிழைகளில் ஒளி பரவும் முறை பொருத்து அதை ஒருமுக பரவல் ஒளியிழைகள் என்றும், பன்முக பரவல் ஒளியிழைகள் என்றும் கூறலாம். பன்முக பரவல் ஒளியிழைகள் பெரும்பாலும் அதிக உள்ளக விட்டம் கொண்டதாகவும், சிறு தொலைவு தொடர்புகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும், உயர் ஆற்றலை கடத்துவதாகவும் அமைந்து உள்ளது. ஒருமுக பரவல் ஒளியிழைகள் நெடுதூர அதாவது 550 மீ (1800 அங்குலம்) அளவுக்கு மேற்பட்ட தூரத்திற்கு தகவல் (ஒளி) கடத்தும் பொருளாக பயன்படும்.
ஒளிவடங்களின் நீளத்தை சேர்ப்பது மின் கம்பிகளை காட்டிலும் மிக கடினமானது ஆகும். அதன் முனைகளை கவனமாக பிளவு செய்யவேண்டியதும், அவைகளை இணைப்பதற்கு மின்பாய்வினால் அதனை உருக்கவோ அல்லது வேறு இயந்திரங் கொண்டோ செய்தல் வேண்டும். களட்டக்கூடிய இணைப்புகளுக்கு தனி வட இணைப்பிகள் பயன்படுத்துவர்.