From Wikipedia, the free encyclopedia
எழிமலை (Ezhimala, மலையாளம்: ഏഴിമല) என்பது தென் இந்திய மாநிலமான, கேரளத்தின், கண்ணூர் மாவட்டத்தில், பையனூர் அருகே உள்ள ஒரு மலைப் பகுதியாகும். இந்த மலை கடல்மட்டத்தில் இருந்து 286 மீட்டர் உயரம் கொண்டது. கண்ணூருக்கு வடக்கே 38 கி.மீ தொலைவில் தனித்து உள்ள இந்த மலைப் பகுதி கடலோடிகளுக்கான நில அடையாளமாக உள்ளது.
எழிமலை | |
---|---|
எழிமலை | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 286 m (938 அடி) |
ஆள்கூறு | 12°01′06″N 75°12′57″E |
புவியியல் | |
அமைவிடம் | இந்தியா, கேரளம் |
நாடு | இந்தியா |
மூலத் தொடர் | அரபிக்கடலை ஒட்டிய தனித்த பகுதி |
எழிமலையானது பண்டைய புலி நாட்டின் தலைநகராக, முக்கியமான வரலாற்று தளமாக கருதப்படுகிறது. பொது ஊழியின் தொடக்கத்தில் செழிப்பான துறைமுகமாகவும், வணிக மையமாகவும் இது திகழ்ந்தது. எழிமலை 11 ஆம் நூற்றாண்டில் சோழர் - சேரர் போர்களில் முக்கிய போர்க்களங்களில் ஒன்றாக இருந்தது. கௌதம புத்தர் எழிமலைக்கு வந்ததாக சிலர் நம்புகிறனர்.
இந்த மலைகள் எழிமலை, மூசிக சைலம், சப்த சைலம் என்றும் அழைக்கப்படுகின்றது.
இந்த மலைக்கு போர்த்துகீசியர்கள் மான்டே டி எலி (Monte d'Eli ) என்று பெயரிட்டனர். [1] ஆங்கிலேயர்கள் இதை மவுண்ட் டெல்லி அல்லது மவுண்ட் எலி என்று அழைத்தனர்.
ராமந்தளி ஊராட்சியின் ஒரு பகுதியாக இருக்கும் எழிமலை, வடக்கு மலபாரின் வரலாற்றில் இடம்பெற்ற மிக முக்கியமான இடங்களில் ஒன்றாகும். வரலாற்று காலத்திற்கு முன்பிருந்தே, புகழ்பெற்ற காவியமான இராமாயணத்தின் சில பகுதிகள் மற்றும் உள்ளூர் இந்து தொன்மக் கதைகளில் எழிமலையை குறிப்பாக அனுமனுடன் தொடர்புபடுத்தி கூறப்படுகின்றன. [2] [3]
எழிமலை, பழையங்காடி மற்றும் இந்த பிராந்தியத்தில் உள்ள பல கிராமங்கள் மற்றும் நகரங்கள் குறித்து தமிழின் சங்க கால இலக்கியங்களில் (கிமு 500 முதல் கிபி 300 வரை) ஏராளமான குறிப்புகள் காணப்படுகின்றன. பழையங்காடி என்பது அதன் பண்டைய தமிழ்ப் பெயரான பாழியின் சிதைந்த வடிவமாகும். மூசிக அல்லது கோலாதிரி அரச மரபின் மன்னனான உதயன் வேண்மான் நன்னனின் (நன்னன் அல்லது நந்தன் என அழைக்கப்படும்) அரசனின் பண்டைய தலைநகராக பாழி குறிப்பிடப்பட்டுள்ளது. நன்னின் மரபானது சேரர், பாண்டியர், சோழர் போன்றோரின் உறவினர் அல்லது சகோதரி வம்சமாக இருந்தபோதிலும், அவர்களிடையே தொடர்ந்து போர்கள் நடந்துவந்தன. இதற்கு நன்னனின் காலமும் விதிவிலக்கல்ல. [4] [5] [6] [7] தனது இராச்சியத்தின் ( கோலத்துநாடு ) மீது படையெடுத்த சேர மன்னர்களுக்கு எதிராக நன்னன் பாழியில் எதிர்த்து வீரப் போர் புரிந்து போராடியதாக நூல்கள் குறிப்பிடுகின்றன. இறுதியில், சேர மன்னர் நார்முடிச்சேரரால் நன்னன் கொல்லப்பட்டார். அப்போதைய தமிழகத்தின் அரசியலின் பண்பாட்டின்படி பிற தமிழக மன்னர்களைப் போலவே, நார்முடிச் சேரலும் அறிஞர்கள் மற்றும் புலவர்களை சிறந்த முறையில் ஆதரிப்பவராக இருந்தார். அவர் ஒரு முறை தனது அரசவைப் புலவரான காப்பியாற்றுக் காப்பியனாரின் புலமையைப் பாராட்டி அவருக்கு 40 லட்சம் தங்க நாணயங்களை பரிசளித்தார்.
சங்க காலத்து நூல்கள் பண்டைய பாழியின் பெருமையையும் செல்வத்தை மிகப் பெருமையாக விவரிக்கின்றன. [8] பரணரைப் போலவே பாழியின் செல்வத்தைப் பற்றி சங்க காலப் புலவர்களும், அதற்கு பிந்தைய நூற்றாண்டுத் தமிழ்ப் புலவர்களும், மிகப் பெரிய அளவில் பேசுகிறார்கள். சங்கத் தொகை நூற் பாடலான அகம் 173 "தங்க வயல்கள் நிறைந்த நன்னனின் பெரிய மலை சரிவுகளையும், சூரியனில் வெப்பத்தால் காய்ந்த நீண்ட மூங்கில்கள் வெடித்து அதிலிருந்து முத்துக்கள் தெறிப்பதையும் பற்றி பேசுகிறது." புகழ்பெற்ற அறிஞர் இல்லம்குளம் குஞ்சன் பிள்ளை கூற்றின்படி "பழைய எழிமலைநாட்டின் கோட்டயம் (வடக்கு மலபார்) மற்றும் கண்ணூர் பகுதிகளிலிருந்தே எண்ணற்ற உரோமானிய (தங்க) நாணயங்கள் அகழப்பட்டன. இதில் ஒரே சந்தர்பத்தில் கிடைத்த நாணயங்கள் (தங்கம்) ஆறு சுமைதூக்கும் தொழிலாளர்களால் எடுத்துச் செல்லக்கூடிய அளவு நாணயங்கள் கிடைத்தன. இந்த நாணயங்கள் கி.பி 491 வரையிலான காலத்தைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டது.
எழிமலை பொது ஊழியின் தொடக்கத்திலிருந்து ஒரு செழிப்பான துறைமுகமாகவும் வணிக மையமாகவும் இருந்தது ; பின்னர் 11 ஆம் நூற்றாண்டில் சோழர் - சேரர் போர்த் தொடரில் முக்கிய போர்க்களங்களில் ஒன்றாக இருந்து; பகவான் புத்தர் எழிமலைக்கு விஜயம் செய்ததாக சிலர் நம்புகிறார்கள்.
கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் ஆதுலன் என்பவரால் எழுதப்பட்ட மூசிக வம்சம் எனும் நூல் மூலம், குறிப்பாக மூசிக அரச மரபினரைப் பற்றியும், பொதுவாக வடக்கு கேரள நாட்டைப் பற்றியும் தெளிவாக அறிய முடிகிறது. [9] [10] மூசிக வம்ச வரலாற்றில் முதலில் குறிப்பிடபட்ட மன்னர் இராமகதா மூசிகர் ஆவார். இவருடைய தலைநகரம் பெரும்பாலும் பாழி (பண்டைய பழையங்காடி) ஆகும். இந்த வம்சத்தின் பிற்கால மன்னர்களை ஆதுலன் விவரிக்கிறார், அவர்கள் இப்போது கோலாதிரி வம்சம் என்று அழைக்கப்படுகிறார்கள் . மன்னர்களான ராமகதா மூசிகரின் வாரிசுகள் தங்கள் தலைநகரை எழிமலை, வல்லபப்பட்டனம் ( வலப்பட்டணம் ) நகருக்கும் இறுதியில் சிரக்கல், அருகிலுள்ள பிற இடங்களுக்கிடையில் அடுத்த நூற்றாண்டுகளில் மாற்றினர்.
ஆசியாவின் மிகப்பெரிய இந்தியக் கடற்படை அகாதமி எழிமலையில் உள்ளது.[11]
பெரும்பா சந்தி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையின் வடக்கில் பயணித்தால் மங்களூர், கோவா, மும்பையும், தெற்கில் பயணித்தால் கொச்சி, திருவனந்தபுரம் போன்ற பகுதிகளை அடையலாம். இரிட்டியின் கிழக்கே உள்ள சாலை மைசூர் மற்றும் பெங்களூரை இணைகிறது. அருகிலுள்ள தொடருந்து நிலையம் மங்களூர் - பாலக்காடு பாதையில் உள்ள பையனூர் ஆகும் . மங்களூர், கண்ணூர், கோழிக்கோட்டில் வானூர்தி நிலையங்கள் உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.