எலத்தூர், கோழிக்கோடு
From Wikipedia, the free encyclopedia
எலத்தூர் (Elathur) என்பது இந்திய மாநிலமான கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கோழிக்கோடு மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். எலத்தூர் நகரம் கோழிக்கோடு-கண்ணூர் தேசிய நெடுஞ்சாலை எண் 17 இல் கோழிக்கோடு நகருக்கு வடக்கே சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேற்கில் அரபிக் கடலும் கோரபுழா நதி எனப்படும் எலத்தூர் நதி வடக்கிலும் இந்நகரை சூழ்ந்துள்ளன [1]. எலத்தூர் நதி பொதுவாக முன்னாள் மலபார் மாவட்டத்தில் வடக்கு மலபார் மற்றும் தெற்கு மலபார் இடையேயான ஓர் எல்லையாகக் கருதப்பட்டது.
எலத்தூர் Elathur | |
---|---|
நகரம்/துணை நகரம்/கோழிக்கோடு மாநகராட்சியின் பகுதி | |
ஆள்கூறுகள்: 11°20′0″N 75°44′0″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கோழிக்கோடு மாவட்டம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 41,326 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அ.கு.எண் | 673303 |
தொலைபேசிக் குறியீடு | 0495 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KL |
2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எலத்தூர் பஞ்சாயத்தின் மொத்த மக்கள் தொகை 41,326 ஆகும்[2]. இத்தொகையில் கிட்டத்தட்ட சரிபாதியாக இந்துக்களும் இசுலாமியர்களும் கலந்திருந்தனர். எலத்தூர் பஞ்சாயத்தின் மொத்தப் பரப்பளவு 13.58 சதுர கிலோமீட்டர்களாகும். ஆனால் இதன் பெரும்பகுதியை தேசிய நெடுஞ்சாலை 17, மாநில நெடுஞ்சாலை, ஆறுகள் மற்றும் இந்திய இரயில்வே துறை போன்றவை எடுத்துக் கொண்டன.
சாலை வழியாகவும் இரயில் பாதை வழியாகவும் எலத்தூர் நகரம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இப்பஞ்சாயத்தின் வழியாக தேசிய நெடுஞ்சாலை 17 செல்கிறது. இத்தேசிய நெடுஞ்சாலைக்கு கிழக்கில் எலத்தூர் இரயில் நிலைய சந்திப்பு அமைந்துள்ளது[3]. இந்துசுத்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் கோழிக்கோடு மண்டல பிராந்திய அலுவலகம் இரயில் நிலையத்திற்கு அருகாமையில் இருக்கிறது [4].
அரபிக் கடல் எலத்தூருக்கு மேற்கே அமைந்துள்ளது. எலத்தூர் கடற்கரை புத்தியானிராதே முதல் கோரபுழா வரை நீண்டுள்ளது . கடலின் இந்த பகுதியில் கடல் சிப்பி இனங்கள் ஏராளமாக காணப்படுகின்றன.
கோழிக்கோடு நகரின் வடக்குப் பகுதியில் எலத்தூர் அமைந்துள்ளது. வர்த்தக மையம் நதக்காவு, மேற்கு மலை, புதியங்காடி போன்ற கோழிக்கோடு மாநகரத்தின் புறநகர் பகுதிகள் எலத்தூர் சாலையில் அமைந்துள்ளன. அகில இந்திய வானொலியின் உள்ளூர் வானொலி நிலையம் இதே வழியில் இருக்கும் குண்டுபறம்பாவில் அமைந்துள்ளது. பவங்காடு சந்திப்பில், இச்சாலை கிழக்கு நோக்கி அதோலிக்கும் வடக்கு நோக்கி நேரான சாலை எலத்தூருக்கும் இரண்டாகப் பிரிந்து செல்கிறது. வெங்கலி சாலை மேம்பாலம் கடந்த கால போக்குவரத்து பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளது, மேலும் பாலம் முடிந்தபின், எலத்தூர் நகரம் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.