உசேன் சாகர்
From Wikipedia, the free encyclopedia
உசேன் சாகர் (ஹுசைன் சாகர், தெலுங்கு: హుస్సేన్ సాగర్, உருது: حسين ساگر), இந்தியாவின் ஐதராபாத் நகரில் உள்ள ஓர் ஏரி ஆகும். இது நகரின் நீர்த்தேவைகளை நிறைவு செய்வதற்காக முசி ஆற்றின் கிளை ஆற்றில் கட்டிய 5.7 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள ஏரி. 1562ல் இப்ராகிம் குளி குதுப் ஷாவின் ஆட்சிக்காலத்தில் அசரத் உசேன் ஷா வாலி என்பவர் உசேன் சாகரைக் கட்டினார். இந்த ஏரியின் நடுவில் ஒரே கல்லால் ஆன கௌதம புத்தரின் சிலையை 1992ல் அமைத்தனர். இந்த ஏரி ஐதராபாத் நகரை அதன் துணை நகரான செகந்தராபாத்திலிருந்து பிரிக்கிறது.[1] உசேன் சாகரின் முடிவில் சயேதனி மாவின் கல்லறையான மசூதியையும் தர்காவையும் காணலாம். இந்த ஏரியின் அதிகபட்ச ஆழம் 10 அடிகளாகும்.
உசேன் சாகர் | |
---|---|
அமைவிடம் | ஐதராபாத், ஆந்திரா, இந்தியா |
ஆள்கூறுகள் | 17.45°N 78.5°E / 17.45; 78.5 |
வகை | செயற்கை ஏரி |
வடிநில நாடுகள் | இந்தியா |
அதிகபட்ச ஆழம் | 32 அடி |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 1,759 அடி |
குடியேற்றங்கள் | ஐதராபாத், செக்கந்திராபாத் |
பால்காபூர் நதியின் குறுக்காக கரை எழுப்பி இந்த ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நதி முசி ஆற்றின் ஒரு துணை ஆறு ஆகும். முன்நாளில் இந்த ஏரி, செகந்திராபாத் நகருக்கு குடிநீர் வழங்குவதற்காகவே கட்டப்பட்டது. ஆனால் இன்று இவ்வேரி பொழுதுபோக்கிடமாகவும் நீர்விளையாட்டிற்காகவும் பயனாகிறது. இதன் கிழக்குப் பக்கமுள்ள ஏரிக்கரை சாலை செகந்திராபாத் நகரையும் ஐதராபாத் நகரையும் இணைக்கிறது. புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புடைய பெருமக்களின் கருங்கற் சிலைகள் சாலைநெடுகிலும் நிறுவப்பட்டுள்ளன. இந்தச் சாலையின் முதலிலும் முடிவிலும் விசயநகர மற்றும் காகத்திய பாணியில் அமைந்த எழிலார்ந்த சலவைக்கல் தோரணவாயில்கள் கட்டப்பட்டுள்ளன. ஏரியின் நடுப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை 17.5 மீட்டர் உயரமும் 350 டண் நிறையும் கொண்ட ஒரே கல்லில் வடிக்கப்பட்ட சிலையாகும். ஏரியின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள லும்பினி பூங்காவிலிருந்து படகில் சென்று வரலாம்.