![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4f/P_culture.svg/langta-640px-P_culture.svg.png&w=640&q=50)
இருமுனையப் பிறழ்வு
From Wikipedia, the free encyclopedia
இருமுனையப் பிறழ்வு (Bipolar disorder அல்லது bipolar affective disorder) அல்லது இருதுருவக் கோளாறு என்பது கிளர்ச்சி-சோர்வு கோளாறான ஓர் உளநோய் ஆகும். உளநோய் கண்டறிதலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதீத உற்சாக நிலை நிகழ்விருந்து ஒன்று அல்லது மேற்பட்ட சோர்வு நிகழ்வுகள் இருப்பினும் இல்லாதிருப்பினும் அது இருமுனையப் பிறழ்வாக வகைப்படுத்தப்படுகிறது. உள்ளம் மிகவும் உயர்ந்த உணர்ச்சிகளுடன் இருக்கும் நிலை பித்து என அழைக்கப்படுகிறது. இவ்வாறான மிக உயர்ந்த மன உணர்நிலைகளை எட்டியவர்கள் பொதுவாக உளத்தளர்ச்சி உணர்நிலைகளையும் உணர்வதுண்டு. சில நேரங்களில் இரண்டும் ஒரே நேரத்தில் நிகழும் கலந்த உணர்நிலையிலும் அவர்கள் இருக்கலாம். [1] இத்தகைய இருவேறு அதீத மனநிலைகளுக்கு இடையே "வழமையான" உணர்நிலைகளிலும் இருப்பர்; ஆனால், சில நபர்களுக்கு தளர்வும் உற்சாகமும் விரைவாக மாறிக்கொண்டிருக்கலாம் - இது விரைவுச் சுழற்சி எனப்படுகிறது. தீவிரமான பித்து நிலைகளில் உளப்பிணி அறிகுறிகளான திரிபுக்காட்சிகளும் மாயத் தோற்றங்களும் வெளிப்படும். இந்த மனக்கோளாறை உணர்நிலை மாற்றங்களின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து இருமுனையம் I, இருமுனையம் II, சைக்ளோதைமியா என்ற பிற துணை பகுப்புகளில் வகைப்படுத்துகின்றனர். இவை அனைத்துமே இருமுனையக் கற்றை (bipolar spectrum) எனப்படுகிறது.
இருமுனைய பிறழ்வு | |
---|---|
![]() | |
இருமுனையப் பிறழ்வு கூடிய கிளர்ச்சிக்கும் உளச்சோர்வுக்கும் இடையே மாறி மாறி இருத்தலாகும் | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | உளநோய் மருத்துவம், clinical psychology |
ஐ.சி.டி.-10 | F31. |
ஐ.சி.டி.-9 | 296.0, 296.1, 296.4, 296.5, 296.6, 296.7, 296.8 |
ம.இ.மெ.ம | 125480 309200 |
நோய்களின் தரவுத்தளம் | 7812 |
மெரிசின்பிளசு | 001528 |
ஈமெடிசின் | med/229 |
பேசியண்ட் ஐ.இ | இருமுனையப் பிறழ்வு |
ம.பா.த | D001714 |
இருதுருவக்கோளாறு உள்ள ஒருவர் பித்து, உளச்சோர்வு ஆகிய இரு உளப்பிரச்சினைகளுக்கும் மாறி மாறி உட்பட்டு துன்பப்படுவார். சாதாரண மனச்சோர்வை ஒருதுருவ மனச்சோர்வு எனலாம். இருதுருவக் கோளாறில் பெரும்பாலும் முதலில் தோன்றுவது பித்து நிலையாகும். அக்காலப்பகுதியில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு உயர்ந்த சக்தியுள்ள மனோபாவத்துடன் இருப்பதோடு, வன்முறை, குற்றச்செயல்கள், மதுப்பாவனை, குடும்ப பிரச்சினைகள் ஆகியவற்றிலும் ஈடுபடக்கூடும். சிறிது காலம் பித்து நோய் நீடித்த பின் மனச்சோர்வு வரலாம். பித்து நிலையோடு ஒப்பிடும் போது மனச்சேர்வுக்குறிய காலம் குறைவாக இருந்த போதிலும் அதிக வலிமையுடன் தோன்றுவதால், இக்காலப் பகுதியில் தற்கொலை எண்ணங்களுடன் இருக்கக்கூடும். ஒருதுருவ மனச்சோர்வை விட இருதுருவக் கோளாறில் தற்கொலைக்கான வாய்ப்புக்கள் அதிகம்.