இந்தியாவின் நுழைவாயில் (மும்பை)
From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் நுழைவாயில் (Gateway of India, மராத்தி: गेटवे ऑफ इंडिया) மும்பையில் பிரித்தானிய அரசாட்சியில் கட்டப்பட்ட ஒரு நினைவுச்சின்னம் ஆகும்.[1] தெற்கு மும்பையில் அரபிக் கடலோரத்தில் அப்போலோ பந்தர் என்னும் சிறுதுறைப் பகுதியில் அமைந்துள்ளது.[2][3] பசாற்றுக்கல்லால் கட்டப்பட்டுள்ள இந்த நினைவு வளைவு, 26 மீட்டர்கள் (85 அடிகள்) உயரமுள்ளது.[4] மீனவர்களுக்கான சிறிய துறையாக இருந்தவிடத்தில் பிரித்தானிய ஆளுநர்களும் பிற முதன்மை நபர்களும் வந்திறங்கக்கூடிய வகையில் புதுப்பிக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டது.
இந்தியாவின் நுழைவாயில் Gateway of India | |
---|---|
இந்தியாவின் நுழைவாயில் துறைமுகத்தில் இருந்து பார்த்தால், 2003. | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | இந்திய - சாராசெனிக் முறை |
இடம் | மும்பை (பம்பாய்), இந்தியா |
உயரம் | 10 m (33 அடி) |
கட்டுமான ஆரம்பம் | 31 மார்ச் 1911 |
நிறைவுற்றது | 1924 |
துவக்கம் | 4 டிசம்பர் 1924 |
செலவு | ₹2.1 மில்லியன் (1911) |
கட்டுவித்தவர் | இந்தியா |
உரிமையாளர் | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
உயரம் | 26 m (85 அடி) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | ஜார்ஜ் விட்டர் |
மும்பையில் படகுகள் மூலம் வந்திறங்கும் பயணிகள் எதிர்கொள்ளும் முதல் கட்டிடமாக இது இருந்தமையால் இந்தியாவின் நுழைவாயில் என அழைக்கப்பட்டது.[5] மும்பையின் தாஜ் மகால் என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறது.[6] மும்பை நகரத்தின் முதன்மையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.
இந்தியாவிற்கு 1911இல் வருகை புரிந்த பிரித்தானிய மன்னர் ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் மற்றும் அரசி மேரி அப்போலோ, பந்தர் துறைமுகத்தில் வந்திறங்கியதன் நினைவாக இந்தக் கட்டிடம் எழுப்பப்பட்டது. இந்தோ-சார்சனிக் கட்டிட வடிவமைப்பில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தின் அடிக்கல் மார்ச்சு 31, 1911 அன்று இடப்பட்டது. ஜார்ஜ் விட்டர் என்ற கட்டிட வடிவமைப்பாளரின் இறுதி வடிவம் 1914இல் பெறப்பட்டு கட்டிடப் பணி 1924ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. இதன்பிறகு இந்திய வைசிராய்களும் மும்பை ஆளுநர்களும் இதன்வழியே அலங்காரமாக அழைத்து வரப்பட்டனர்.[7][8]
இந்த நினைவு வளாகத்தில் மூன்று தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன: 2003இல் இருமுறை நடந்துள்ளது; 2008ஆம் ஆண்டில் தாஜ் மகால் தங்குவிடுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டைகளின்போது நான்கு ஆயுதமேந்திய தீவிரவாதிகள் இங்கேயே வந்திறங்கினர்.