அச்சிடல்
From Wikipedia, the free encyclopedia
அச்சிடல் (Printing) என்பது முதலுரு அல்லது வார்ப்புருவில் இருந்து எழுத்துகளையும் படிமங்களையும் மீள்ளாக்கம் செய்யும் செயல்முறையாகும். மிகப்பழைய எடுத்துகாட்டுகளாக உருளை வார்ப்புருக்களையும் சைரசு உருளையையும் நபோனிடசு உருளைகளையும் கூறலாம். மிகப்பழைய மரக்கட்டைவழி அச்சிடல் கி.பி 220 ஆம் ஆண்டுக்கும் முன்பே சீனாவில் உருவாகைப் பரவியது.[1] பின்னர் சீனாவில் கி.பி 1040 அளவில் நகர் எழுத்து அச்சிடல் முறையை பி ஷெங் என்பார் உருவாக்கினார்.[2] 15 ஆம் நூற்றாண்டில் நகர் எழுத்து அச்சிடல் எந்திரத்தை யோகான்னசு கூட்டன்பர்கு ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார். இவரது அச்சகம் மறுமலர்ச்சி, சீர்திருத்தம், அறிவொளி அறிவியல் புரட்சிக் காலங்களில் முதன்மையான பாத்திரம் வகித்து, இக்கால அறிவுசார் பொருளியலுக்கு வழிவகுத்தது. இது கல்வியை மக்களிடம் கொண்டுசென்றது.[3]
இன்று பேரளவு அச்சிடுகள் அச்சகத்திலும் சிற்ரளவு அச்சிடுகள் எண்ணிம அச்சுப்பொறிகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன. பொது அச்சீட்டுப் பொருளாக தாள் பயன்பட்டாலும் அச்சிடலுக்கு பொன்மங்கள். நெகிழிகள், துணிகள், கூட்டுப்பொருள்கள் போன்றனவும் பயனில் உள்ளன. தாளில் அச்சிடல், பதிப்புத் துறையிலும் ஆய்விதழ்களை அச்சிடலிலும் பேரள்வில் நடைபெறுகிறது.
அச்சிடல் பேரளவிலான தொழில் செயற்பாடாக இருக்கின்ற போதிலும், சிறிய அளவிலும் அச்சிடல் நடைபெற்று வருகின்றது. அச்சிடல், பதிப்புத் தொழிலின் ஒரு முக்கிய பகுதியாகும். 2005 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, உலகில் எல்லா மொழிகளிலுமாகச் சேர்ந்து மொத்தம் 45 டிரில்லியன் பக்கங்கள் அச்சாகின்றன[4]. 2006 ஆம் ஆண்டு அமெரிக்காவில் மட்டுமே 30,700 அச்சடிப்பு நிறுவனங்கள் இருந்தன. இவை 112 பில்லியன் டாலர் வணிகமாக இருந்தது[5]. அச்சில் இருந்து இணையத்துக்கு நகர்ந்தவை அமெரிக்காவில் 12.5% ஆக இருந்தன.