பிரெஞ்சு-ஜெர்மன் மருத்துவர், இறையியலாளர், இசைக்கலைஞர், மெய்யியலாளர் (1875-1965) From Wikipedia, the free encyclopedia
ஆல்பட்டு சுவைட்சர் (Albert Schweitzer, 14 சனவரி 1875–4 செப்டம்பர் 1965 ) சமாதானத்துக்காக நோபல் பரிசு பெற்ற அறிஞர்.ஆல்பர்ட் சுவைட்சர் மெய்யறிவாளராகவும் மருத்துவராகவும் மதபோதகராகவும் தொண்டூழியம் செய்த மனித நேயராகவும் விளங்கினார். தம் வாழ்வின் இறுதி வரை அணுக்குண்டு தயாரிப்பு, சோதனைகள் அணு ஆயுதங்கள் ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.[1][2][3]
சமயம் இசை கல்வி ஆகியவற்றில் பல தலைமுறைகளாகச் சிறந்து விளங்கிய குடும்பத்தில் பிறந்தார். தமது 18ஆவது வயதில் பாரிசு நகரில் வல்லுநர்களிடம் முறையாக இசை பயின்றார். 1893 ஆம் ஆண்டில் சுடாரசுபர்க்கு பல்கலைக் கழகத்தில் வேதாகமக் கல்வியைக் கற்று முனைவர் பட்டம் பெற்றார். 1894 இல் படையில் சேர்ந்து பணியாற்றினார். 1898 இல் பாரிசு நகருக்குச் சென்று காண்ட் தத்துவத்தைப் படித்துப் பட்டம் பெற்றார். தத்துவம் இசை கிறித்தவ சமயம் ஆகிய மூன்று துறைகளிலும் முனைவர் பட்டம் பெற்றார். ஏழாண்டுக் காலம் மீண்டும் படித்து மருத்துவத் துறையிலும் டாக்டர் பட்டம் பெற்றார். அதோடு மட்டுமன்றி வெப்பப் பகுதிகளில் நிலவுகின்ற நோய்களைக் குணப்படுத்தும் முறைகளையும் பாரிசுக்குச் சென்று கற்றுக்கொண்டார். தமது 37 ஆம் அகவையில் கெலன் பிரச்சள் என்னும் தொண்டுள்ளம் கொண்டப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
1911ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்பை முடித்த சுவைட்சர், கல்வியறிவு இல்லாமல் வறுமையிலும் கடும் நோயிலும் வாடிய ஆப்பிரிக்க நாட்டு ஆதிவாசிகளுக்கு மருத்துவப் பணி புரிய லாம்பர்னே என்னும் ஊருக்குச் செல்லத் தீர்மானித்தார். நண்பர்களும் உறவினர்களும் இம்முடிவை எதிர்த்து அவரைத் தடுக்க முயன்றார்கள். சுவைட்சர் அவர்களின் அறிவுரையைச் செவி மடுக்காமல் லாம்பர்னேயில் காட்டுப் பகுதியில் மரங்களால் கட்டப் பட்ட கட்டிடத்தில் சிறிய அளவில் மருத்துவமனையை அமைத்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தார். நச்சுக்காய்ச்சல், தொழுநோய் பூச்சிக்கடி ஆகியவற்றால் அங்கு வாழ்ந்த நீக்ரோ இன மக்களுக்கு சிகிச்சை அளித்தார். சுவைட்சர் ஒரு செருமானியர் என்பதாலும் அந்தக் கால கட்டத்தில் முதல் உலகப் போரினால் செருமனிக்கும் பிரான்சுக்கும் பகைமை இருந்ததாலும் பிரஞ்சு அரசு அவரை வீட்டுக் காவலில் வைத்தது.அவர் செய்த மருத்துவப் பணிக்கு இடையூறு செய்தது. போதிய நிதி வசதியும் மருந்துகளும் மருத்துவக் கருவிகளும் இல்லாததால் தம் சொற்பொழிவுகள் வாயிலாக கிறித்தவ சமயப் பணிஆற்ற பல நாடுகளுக்குப் பயணம் செய்தார்.அப்பயணத்தில் கிடைத்த பணத்தையும் பொருள்களையும் கொண்டு லாம்பர்னேயில் உள்ள மருத்துவமனையை நடத்தி விரிவாக்கினார். மனிதநேயத்துடன் இவர் ஆற்றிய 40ஆண்டுக் கால மருத்துவத் தொண்டைப் போற்றிப் பாராட்டி நோபல் பரிசு 1952 இல் வழங்கப் பட்டது.
பிறருக்கு எவ்வாறு தொண்டு செய்ய முடியும் என்பதை அறிந்தவர்களே உண்மையான மகிழ்ச்சியை அடைவார்கள்.
வாழுகின்ற அனைத்து உயிர்களிடமும் பரிவும் அன்பும் காட்டாதவர்கள் அமைதியைக் காண முடியாது.
மனிதன் மனித இனம் முழுமைக்கும் சொந்தமானவன்.ஒவ்வொருவரும் மற்றவருக்கு கடமைப் பட்டவர் ஆவர்.
நம்மை நாமே எண்ணிப் பார்க்கும்போதுதான் நம் உயிரின் விலையில்லா மதிப்பையும் வாழ்க்கையின் நோக்கத்தையும் உணர முடிகிறது. இச்சிந்தனையின் விளைவு பிற உயிர்களை மதிக்கத் தோன்றும்.பிறரை நேசிக்கத் தோன்றும் எல்லாரும் சமம் ஓர் நிறை என்று கருதத் தோன்றும்.
மேற்கத்திய நாகரிகம் ஒழுக்கத்தைப் பின்பற்றாமல் அழிந்து வருவதாக சுவைட்சர் வருந்தினார்.
திருக்குறளுக்கு இணையான ஒரு அறநெறி நூல் உலகிலேயே இல்லை என்று கூறினார். அவர் புலால் உணவை மறுத்து காய்கறி உணவைச் சாப்பிட்டார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.