மணிரத்னம் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
பொன்னியின் செல்வன் 1 (Ponniyin Selvan: I) என்பது 2022 இல் திரைக்கு வெளிவந்த ஒரு தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை மதராசு தாக்கீசு, லைக்கா தயாரிப்பகம் ஆகிய தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் மணிரத்னம் இயக்கித் தயாரித்தார். இது பிரபல தமிழ் எழுத்தாளரான கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்ட இரு பாகங்களின் முதல் பாகம் ஆகும். இளங்கோ குமரவேல், பி.ஜெயமோகன் ஆகியோருடன் இணைந்து ரத்னம் இதற்கான திரைக்கதையை எழுதியுள்ளார்.
பொன்னியின் செல்வன்: 1 | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | மணிரத்னம் |
தயாரிப்பு |
|
திரைக்கதை |
|
வசனம் | ஜெயமோகன்[1] |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ரவி வர்மன் |
படத்தொகுப்பு | ஏ. ஸ்ரீகர் பிரசாத் |
கலையகம் | |
விநியோகம் |
|
வெளியீடு | 30 செப்டம்பர் 2022 |
ஓட்டம் | 167 நிமிடம்[2] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 250 crores |
மொத்த வருவாய் | மதிப்பீடு. ₹450 கோடி (US$56 மில்லியன்)[3](Day 32 ) |
இத்திரைப்படத்தின் முதன்மை நடிகர்கள் விக்ரம்,[4] கார்த்திக், ஜெயம் ரவி, ஜெயராம்,[5] ஐஸ்வர்யா ராய் பச்சன்,[6] திரிசா,[7] விக்ரம் பிரபு,[8] ஐஸ்வர்யா லெக்ச்சுமி,[9] அஸ்வின் ககுமனு, சோபிதா துலிபாலா[10] மற்றும் துணைநிலை நடிகர்கள் சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ் ராஜ்[11], ரகுமான் ஆகியோர் ஆவர். ஏ. ஆர். ரகுமான் இசைமைத்துள்ளார்[12], ரவி வர்மன் ஒளிப்பதிவையும் ஏ. ஸ்ரீகர் பிரசாத் தொகுத்தலையும் தோட்டா தரணி தயாரிப்பு வடிவமைப்பையும் புரிந்தனர்.
பொன்னியின் செல்வன் முதலில் தனித்து நிற்கும் திரைப்படமாக இருக்கும் நோக்குடன் இருந்தது. ஆனால் பின்னர் இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு,[13] அதில் முதல் பாகமானப் பொன்னியின் செல்வன் 1 செப்டம்பர் 30, 2022 இல் உலகம் முழுவதும் வெளியானது.[14] இந்தத் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியது.
கதையின் அடுத்த பகுதியான பொன்னியின் செல்வன் 2, 28 ஏப்ரல் 2023 அன்று வெளியிடப்பட்டது.[15]
பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிப்பதிவு ஆகிய பிரிவுகளிலும் இப்படம் விருதுகளை வென்றுள்ளது.[16]
10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசர் சுந்தர சோழர் தென்னிந்தியாவில் செழிப்பாக ஆட்சி செய்கிறார். அதே நேரத்தில் அவரது மகன்களான ஆதித்த கரிகாலன் மற்றும் அருள்மொழிவர்மன் அல்லது பொன்னியின் செல்வன் ஆகியோர் முறையே காஞ்சி மற்றும் இலங்கையில் பேரரசுகளை கைப்பற்றினர். ஆதித்த கரிகாலன் தனது நாட்டில் ஏதோ பிரச்சனையை உணர்ந்து, தனது நம்பிக்கைக்குரிய கூட்டாளியும் வாணர் குலத்து இளவரசனுமான வல்லவரையன் வந்தியத்தேவனை அனுப்பி அதுகுறித்து விசாரிக்கவும், பின்னர் தன் சகோதரி இளவரசி குந்தவை மற்றும் சுந்தர சோழர் ஆகியோருக்கு தகவலை அனுப்புகிறான். அமைச்சர்கள் அனைவரும் கூடிவிருக்கும் கடம்பூர் கோட்டைக்கு வருவதற்கு முன் வந்தியத்தேவன் வைணவரான ஆழ்வார்க்கடியான் நம்பியை சந்திக்கிறான். கடம்பூரின் இளவரசன் கந்தமாறனுடன் இருந்த தோழமையைப் பயன்படுத்திக் கோட்டைக்குள் நுழைகிறான் வந்தியத்தேவன். அங்கு நடக்கும் சிற்றரசர் கூட்டத்தில் ஆதித்த கரிகாலனை அரியணை ஏறவிடாமல் தடுக்கவும், அவனது சித்தப்பா மதுராந்தக சோழனை அதில் அமர்த்தவும் நிதி அமைச்சரும் பொக்கிசதாரருமான பெரிய பழுவேட்டரையர் மற்றும் பிற அமைச்சர்கள் சதி ஆலோசனை செய்வதைக் கேட்கிறான்.
நம்பியும் சதியாலோசனையை உளவு பார்ப்பதைக் கண்ட வந்தியத்தேவன், கோட்டையிலிருந்து வெளியேறிய பிறகு, ஒரு படகில் நம்பியை எதிர்கொள்கிறான். தான் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போன நந்தினியைக் கண்டுபிடிக்க தான் அங்கு வந்திருந்ததாகத் தெரிவிக்கிறான். பெரிய பழுவேட்டரையரின் தம்பி சிறிய பழுவேட்டரையரின் கண்ணில் மண்ணைத் தூவி தஞ்சாவூரில் உள்ள அரச மாளிகைக்குச் செல்ல எண்ணி, நந்தினியின் வாகனத் தொடரை இடைமறித்த வந்தியத்தேவன், தான் நம்பிக்கு அறிமுகமானவர் என்றும் அவரிடம் இருந்து ஒரு செய்தியை அனுப்ப விரும்புவதாகவும் தெரிவிக்கிறான்.
அரண்மனைக்குள் நுழைய உதவும் ஒரு முத்திரை மோதிரத்தை நந்தினி அவனிடம் கொடுத்து விட்டு செல்கிறாள். கோட்டையின் தலைமைப் பொறுப்பாளரான சின்ன பழுவேட்டரையரிடம், அந்த முத்திரை மோதிரத்தைக் காட்டி, பெரிய பழுவேட்டரையர் கொடுத்ததாகக் கூறுகிறான். வந்தியத்தேவன் சுந்தர சோழரைச் சந்தித்து சதிகாரர்களைப் பற்றி அவரிடம் தெரிவிக்கிறான். ஆனால் சின்ன பழுவேட்டரையர் இடையில் தலையிட்டு அவனைக் கைது செய்ய முயற்சிக்கிறார். வந்தியத்தேவன் அவரிடமிருந்து தப்பித்து, நந்தினியின் அறைக்குச் செல்கிறான் அங்கு ஆதித்த கரிகாலனினின் செய்தியுடன் குந்தவை அவன் சந்திக்கவுள்ளதை அவள் கண்டறிகிறாள். ஆதித்த கரிகாலனுக்கு குந்தவை அளிக்கும் பதிலைக் கொண்டுவரும்படி கேட்கிறாள். பின்னர் அவன் அரண்மனையிலிருந்து வெளியேற ஒரு ரகசிய சுரங்கப்பாதையைக் காட்டுகிறாள்.
வந்தியத்தேவன் குந்தவையை மலர் விற்பனையாளரான சேந்தன் அமுதன் மூலம் சந்தித்து அரசுரிமைக்கு எதிராக சதி நடப்பதைப் பற்றிய தகவலை அவளிடம் தெரிவிக்கிறான். பொன்னியின் செல்வனை இலங்கையிலிருந்து அழைத்து வருமாறு அவள் அவனுக்கு உத்தரவு பிறப்பிக்கிறாள். சுந்தர சோழர் மற்றும் அவரது வாரிசுகளுக்கு எதிராக சதி செய்வதை நிறுத்துமாறு மதுராந்தகனிடம் அவன் தாயார் செம்பியன்மாதேவி கேட்டுக்கொள்கிறார். ஆனால் அதற்கு மதுராந்தகன் மறுத்துவிடுகிறான். ஆதித்த கரிகாலன் தனது தோழனான பார்த்திபேந்திரன் பல்லவனிடம், நந்தினியை தான் தன் இளமைப் பருவத்தில் காதலித்ததாகவும், ஆனால் அவள் பேரரசின் வருங்கால அரசியாக வருவதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அவள் நகரத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டதாகவும் கூறுகிறான். ஆதித்த கரிகாலன் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவளைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. அது போரில் தோல்வியுற்று, காயமுற்ற பாண்டிய மன்னனான வீரபாண்டியனுக்கு உதவியாக நந்தினி இருக்கும் சூழலாகும். அதைக் கண்டு ஆத்திரமுற்ற கரிகாலன், வீரபாண்டியனின் தலையை துண்டித்தான். அதனால் தற்போது, சோழ வம்சத்தை பழிவாங்க நந்தினி பெரிய பழுவேட்டரையரை மணந்துள்ளாள்.
இலங்கை மன்னன் மகிந்தனுக்கு எதிரான போரில் பொன்னியின் செல்வன் வெற்றி பெறுகிறான். அதே சமயம் வந்தியத்தேவன் படகோட்டி பெண்ணான பூங்குழலி (சமுத்திரகுமாரி) உதவியுடன் இலங்கைக்கு பயணம் மேற்கொக்கிறான். பூங்குழலி பொன்னியின் செல்வனைப் போற்றுவதையும் அவன்மீது ஈர்ப்பு கொண்டிருப்பதையும் கண்டுபிடிக்கிறான். சுந்தர சோழரின் நலம் விரும்பியும், முதலமைச்சர் அநிருத்த பிரம்மராயரின் உளவாளியாமான ஆழ்வார்க்கடியான் இலங்கையில், வந்தியத்தேவனிடம் வந்து சேர்கிறான். வந்தியத்தேவன் குந்தவையிடம் இருந்தும் பொன்னியின் செல்வனை திருமணம் செய்து கொள்வதாக எதிர்பார்க்கப்படும் வானதியிடமிருந்தும் (கொடும்பாளூர் இளவரசி) செய்திகளை கொண்டுவந்துள்ள நிலையில், நம்பி பொன்னியின் செல்வன் தஞ்சைக்கு திரும்பி வருவது ஆபத்தானது என்று அறிவுறுத்துகிறார். அதேசமயம் புத்த துறவிகள் அசோகரின் மகளின் சிம்மாசனத்தை பொன்னியின் சொல்வனுக்கு வழங்க முற்பட்டபோது அதை நிராகரித்ததற்காக, பொன்னியின் செல்வனை மீண்டும் தஞ்சாவூருக்குக் கொண்டு வருவதற்காக, பெரிய பழுவேட்டரையரும், பிற அமைச்சர்களும் சுந்தர சோழரை வலியுறுத்தி ஆணை பிரப்பிக்க வைக்கின்றனர். பட்டத்து இளவரசன் தலைநகரை விட்டு விலகி இருப்பது சரியல்ல என்பதால் ஆதித்த கரிகாலனை சமாதானப்படுத்தி அவனை தஞ்சாவூருக்கு அழைத்துவரும்படி சுந்தர சோழர் குந்தவைக்கு கட்டளையிடுகிறார்.
பொன்னியின் செல்வனின் நலம் விரும்பிகள் அவரைத் தஞ்சைக்கு அனுப்ப மறுத்துவிடுகின்றனர். ஆனால் பொன்னியி்ன் செல்வன் தன் தந்தையின் கட்டளைக்கு இணங்க முடிவுசெய்கிறான். பொன்னியின் செல்வன் வேடத்தில் புறப்படும் வந்தியத்தேவனை தடுக்க அவரின் நலம் விரும்பிகள் துரத்துகின்றனர். அதேசமயம் வந்தியத்தேவனைப் பொன்னியின் செல்வன் என்று தவறாகப் புரிந்து கொண்டு, வந்தியத்தேவனைக் பிடித்துக் கொள்கின்றனர். இதைப் பூங்குழலியும், பொன்னியின் செல்வனும் கண்டுபிக்கின்றனர். வந்தியத்தேவனைக் காப்பாற்றும் நோக்கத்தில், பொன்னியின் செல்வன், பாண்டிய ஆபத்துதவிகளின் பாய்மரக் கப்பலுக்குச் சென்று, அவர்களுடன் சண்டையிடுகிறான். பூங்குழலி அவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் போது கப்பல் புயலால் கடலில் மூழ்குகிறது. பொன்னியின் செல்வனும், வந்தியத்தேவனும் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு, சுந்தர சோழர், குந்தவை, ஆதித்த கரிகாலன் ஆகியோருக்குச் செய்தி தெரிவிக்கப்படுகிறது. தனது சகோதரனின் மரணத்திற்கு பதிலடி கொடுப்பதாக சபதம் செய்த ஆதித்த கரிகாலன், வஞ்சகமாக ஏமாற்றும் நந்தினியின் போக்கை முடிவுக்கு கொண்டு வர தஞ்சாவூருக்கு புறப்படுகிறான். இதற்கிடையில், நந்தினியைப் போன்ற தோற்றத்தில் உள்ள ஊமை ராணி, கடலில் ஆழமாக மூழ்கி, பொன்னியின் செல்வனைக் காக்க செல்கிறாள்.
நடிகர் | பாத்திரம் | குறிப்பு |
---|---|---|
விக்ரம் | ஆதித்த கரிகாலன் | சோழர் குல பட்டத்து இளவரசர், அருள்மொழிவர்மனின் அண்ணன் |
ஜெயம் ரவி | அருள்மொழிவர்மன் | ஆதித்த கரிகாலனின் தம்பி, இராசராச சோழன் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட பொன்னியின் செல்வன்[17] |
கார்த்திக் சிவகுமார் | வல்லவரையன் வந்தியத்தேவன் | வீரமும் துணிச்சலும் மிகுந்த வாணர்குல இளவரசன், ஆதித்த கரிகாலனின் நண்பன்[17] |
ஜெயராம் | ஆழ்வார்க்கடியான் நம்பி | செம்பியன் மாதேவிக்காகப் பணியாற்றுபவன், முதலமைச்சர் அநிருத்தப் பிரம்மராயரின் சீடன்[18] |
விக்ரம் பிரபு | பார்த்திபேந்திர பல்லவன் | ஆதித்த கரிகாலனின் நண்பன், பல்லவ வம்சாவழியைச் சேர்ந்தவன்[19] |
அஸ்வின் ககுமனு | சேந்தன் அமுதன் | பூக்கார வாலிபன், பிற்காலத்தில் உத்தம சோழன் எனப் பெயர்பெற்றவன்[20] |
சரத்குமார் | பெரிய பழுவேட்டரையர் | போரிட்டுப்பெற்ற 64 காயங்களுக்காகவும் வீரத்துக்காகவும் போற்றப்படும் பழுவேட்டரையர் குலத்திலிருந்து வந்த சோழ நாட்டுத் தனாதிகாரி[21] |
பிரபு | பூதி விக்கிரம கேசரி | ஈழத்துப் படையை நடத்திய சோழப் பேரரசின் சேனாதிபதி, வானதியின் மாமன்[22] |
பிரகாஷ் ராஜ் | சுந்தர சோழர் | அழகினால் சுந்தரர் என்று பெயர்பெற்ற சோழப் பேரரசர், அருள்மொழிவர்மனின் தந்தை[23] |
ரகுமான் | மதுராந்தகத் தேவர் | செம்பியன் மகாதேவியின் மகன், சைவராக வளர்க்கப்பட்டவர்.[24] |
அசுவின் ராவ் | கந்தமாறன் | இளைய சம்புவரையன் என்னும் கடம்பூர் இளவரசன்.[25] |
நிழல்கள் ரவி | கடம்பூர் சம்புவரையர் | சம்புவரையர் குடும்பத்திலிருந்து வந்த கடம்பூர்ச் சிற்றரசர்.[26] |
லால் | மலையமான் | சுந்தர சோழரின் மாமனார், அவரது குழந்தைகளுக்குத் தாய்வழிப் பாட்டன் மிலாடுடையார் எனும் திருக்கோயிலூர் மலையமான்.[27] |
நாசர் | வீரபாண்டியன் | |
கிஷோர் | ரவிதாசன் | பொன்னியின் செல்வன் புதினத்தின் எதிர்நாயகன்[28] |
வினோதினி வைத்தியநாதன் | வாசுகி | நந்தினியின் பணிப்பெண்[29] |
மாஸ்டர் ராகவன் | பாண்டிய இளவரசன் | [30] |
பாபு ஆன்டனி | இராட்டிரகூட மன்னர் | [31] |
மகரந்த் தேசுபாண்டே | காளாமுகர் | [32] |
பாலாஜி சக்திவேல் | - | [33] |
விஜய் யேசுதாஸ் | - | [34] |
அர்ஜுன் சிதம்பரம் | ||
அம்சத் கான் | [31] |
நடிகை | பாத்திரம் | குறிப்பு |
---|---|---|
ஐசுவரியா ராய் | நந்தினி | பழுவூர் ராணி, பெரிய பழுவேட்டரையரின் மனைவி, ஆதித்த கரிகாலனின் காதலி.[35] |
மந்தாகினி தேவி | சிங்க நாச்சியார் அல்லது ஊமை ராணி எனவும் அழைக்கப்படுபவர், நந்தினியின் தாய். | |
திரிசா | குந்தவை பிராட்டியார் | சோழ இளவரசி, சுந்தரசோழ சக்கரவர்த்தியின் மகள் இளைய பிராட்டி[36] |
ஐஸ்வர்யா இலட்சுமி | பூங்குழலி | ஊமைராணியின் சகோதரன் மகள், சமுத்திரகுமாரி எனவும் அழைக்கப்படும் கோடிக்கரையில் வாழும் படகோட்டிப் பெண்.[37] |
சோபிதா துலிபாலா | வானதி | வெட்கமிகுந்தவளான கொடும்பாளூர் இளவரசி, பொன்னியின் செல்வனின் காதலி[38] |
ஜெயசித்ரா | செம்பியன் மாதேவி | கந்தராதித்தரின் மனைவி, உத்தம சோழரின் தாயான பெரியபிராட்டி |
சாரா அர்ச்சுன் | நந்தினி (இளமையில்) | [35] |
வினோதினி வைத்தியநாதன் | வாசுகி | நந்தினியின் பணிப்பெண்[29] |
1958-இல், எம்.ஜி.ஆர், கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வனைத் தழுவிய அதே பெயர் கொண்ட திரைப்படத்தை அறிவித்தார். இராமச்சந்திரன் அப்புதினத்திற்கான திரைப்பட உரிமையை ₹. 10,000க்கு வாங்கினார். முதன்மை நடிகர்களாக வைஜெயந்திமாலா, ஜெமினி கணேசன், பத்மினி, சாவித்திரி, பி. சரோஜா தேவி, எம். என். ராஜம், பாலைய்யா, மா. நா. நம்பியார், ஓ. ஏ. கே. தேவர் மற்றும் வி. நாகையா ஆகியோரை உள்ளடக்கியிருந்தது. படப்பிடிப்பு தொடங்கும் முன்பு, இராமச்சந்திரனுக்கு விபத்து நேர்ந்து காயம் ஆற ஆறு மாதங்கள் ஆயின. நான்கு ஆண்டுகள் கழித்து உரிமையை மறுபுதுப்பிப்பு செய்த பின்பும் இராமச்சந்திரனால் அத்திரைப்படத்தினைத் தொடர இயலவில்லை.[39][40]
1994 சனவரியில் ஃபில்ம்ஃபேருடனான நேர்காணலில், மணிரத்னம் அப்புதினத்தினைத் தழுவி படம் எடுப்பது, அவரது தொழில் வாழ்க்கையின் "கனவுத் திட்டங்களில்" ஒன்றாகும் என்று கூறினார். புதினத்தின் உரிமையை வாங்கிய இயக்குநர் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து திரைப்படத்தின் முதல் வரைவில் பணியாற்றியதாக மணிரத்னம் வெளிப்படுத்தினார். ஆனால், அந்தக் காலத்தில் அச்செயல்திட்டத்திற்கு ஆக்கச்செலவு அதிகமாக இருந்ததால் அவர்கள் அத்திட்டத்தைக் கிடப்பில் போட்டது.
2010-இன் பிற்பகுதியில், மணிரத்னம் படத்தை எடுக்கும் திட்டத்தின் மீது மீண்டும் ஆர்வம் கொண்டு பொன்னியின் செல்வனின் திரைப்பட தழுவலுக்கான வரிவடிவத்தை முடிவுசெய்ய எழுத்தர் ஜெயமோகனுடன் இணைந்து பணிபுரிந்தார். ₹. 100 கோடி ஆக்கச்செலவு என எதிர்ப்பார்ப்பில், திரைப்பிடிப்பிற்குப் பின் பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் நோக்கத்தில் ரத்னமே முதலில் திரைப்படத்தைத் தயாரிக்க தீர்மானித்தார்.[41] இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், தொகுப்பாளர் ஏ. ஸ்ரீகர் பிரசாத் மற்றும் கலை இயக்குநர் சாபு சிரில் உள்ளிட்ட நுட்பக்கலைஞர்கள் விரைவில் படத்திட்டத்தில் இணைக்கப்பட்டனர்.
வல்லவரையன் வந்தியத்தேவன் என்ற முன்னணி பாத்திரத்தில் விஜயை நடிக்கவைக்க முடிவெடுத்தார் ரத்னம். திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டப் பிறகு, நேருக்கு நேர்-க்குப் பின் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றுவது என்றும் "கனவு நனவானது" என்றும் விஜய் குறிப்பிட்டார்.[42] அருள்மொழிவர்மனாக நடிக்க மகேஷ் பாபுவும் மணிரத்னத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மகிழ்ச்சியைத் வெளிப்படுத்தினார்.[43] வரிவடிவத்தை விவரிக்கப்பட்டப்பின் மூன்றாவது முன்னணி ஆண் பாத்திரமாக நடிக்க ஆர்யா இணைந்தார்.[44] இதற்கிடையில், சத்யராஜ் திரைப்படத்தில் துணைப் பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.[45] நடிகர்களைத் தேர்ந்தெடுக்கும்போது மணிரத்னம் விக்ரம், சூர்யா மற்றும் விஷால் உள்ளிட்டோரையும் கருத்தில் கொண்டார். ஆனால், அவர்கள் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்களில் இடம்பெறவில்லை.[46] முன்னணி பெண் பாத்திரங்களுக்கு, அனுஷ்கா செட்டியை ஒரு பாத்திரத்திற்கு இறுதிபடுத்தி பிரியங்கா சோப்ரா மற்றும் அசினுடன் மற்ற கதாபாத்திரங்கள் தொடர்பாக கலந்துரையாடல் நடத்தினார்.[47][48]
நேரங்குறிக்கப்பட்ட படப்படிப்புத் தொடக்கத்திற்கு ஏழு நாள் முன்பு, விஜய் மற்றும் மகேஷ் பாபுவைக் கொண்டு புகைப்படப்பிடிப்பு திரைப்படத்திற்காகச் சென்னையில் நடந்தது.[49] அதற்கு படக்குழுவினர் மைசூர் அரண்மனை மற்றும் லலிதா மண்டபத்தின் அலுவலர்களிடம் தொடர்க்காட்சிகளைப் படமெடுக்க அனுமதி கோரினர். ஆனால், படக்குழுவினர்களை வரலாற்று இடங்களிலிருந்து விலக்கி வைக்க முனைப்புடனிருக்கும் அரண்மனை அலுவலர்களால் அவர்களது கோரிக்கைகள் மறுக்கப்பட்டன.[50] பின்னர், படமெடுப்பு துவங்கும் முன்பே எதிர்ப்பார்த்ததைவிட தயாரிப்புச் செலவு கூடியதால் திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. திரைப்படத்தைப் படமெடுக்க தகுந்த இடங்களைக் கண்டறிய படக்குழு போராடியதால் திரைப்படத்தை உருவாக்க முடியவில்லை என்று கூறினார் ஜெயமோகன். தமிழ்நாட்டிலுள்ள கோவில் வளாகங்களில் படமெடுக்க அறநிலையத்துறையினர் அனுமதி தர மறுத்தனர் என்றும் அதுபோன்ற இடத்தை செயற்கையாக உருவாக்க அதிக செலவு ஏற்படுமென்பதால் அது சாத்தியமான தீர்வல்ல என்றும் தெரிவித்தனர்.[51]
2019 சனவரியில், செக்கச் சிவந்த வானம் (2018) படத்தில் முன்பு மணிரத்னத்துடன் கூட்டுப்பணிபுரிந்த லைக்கா தயாரிப்பகம் திரைப்படத்திற்கு நிதியுதவியளிக்க ஒப்புக்கொண்ட பின் அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் புத்துயிரூட்ட தீர்மானித்தார்.[52] விக்ரம்,[53] விஜய் சேதுபதி, ஜெயம் ரவி ஆகியோர் முன்னணி பாத்திரங்களிலும் சிலம்பரசன் மிகமுக்கியமானப் பாத்திரத்திலும் நடிக்க முடிவுசெய்யப்பட்டது.[54] சுந்தர சோழர் பாத்திரத்திற்கு அமிதாப் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோரும் படத்தின் தயாரிப்புத் திட்டத்தில் சேர்க்கப்படனர்.[55] புதிய பதிப்பிலும் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பாளராகவும் ஜெயமோகன் திரைக்கதையாசிரியராகவும் இருந்தனர். ஏப்ரல் 2019 இல், படத்தின் நடிகர்களில் அனுஷ்கா ஷெட்டி சேர்க்கை (ரத்னத்துடன் முதன்முறையாக பணியாற்றுகிறார்),[56] மற்றும் அட்டவணைச் சிக்கலால் சேதுபதி செயல்திட்டதிலிருந்து விலகி அவருக்கு பதில் கார்த்திக் சேர்க்கப்படுவது[57] என்று படத்தின் நடிகர்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. கான் திரைப்பட விழாவில் பின்பு ஐஸ்வர்யா ராய் தான் இப்படத்தில் இருப்பதை உறுதிசெய்தார்.[58][59][60] படத்தின் பழைய பதிப்பில் இருந்த அனுஷ்கா ஷெட்டி அதிகாரப்பூர்வமாக படத்திட்டத்தில் கையெழுத்திட்டார்.[61][62] நடிகை அமலா பாலும் தனது பங்கை உறுதி உறுதிசெய்தார்.[63][64][65] படத்தின் பிரதான கதாபாத்திரங்களுள் ஒன்றான விக்ரமும் தனது பங்கை உறுதிசெய்தார்.[66][67][68] மூத்த நடிகர்களான ஆர். பார்த்திபனும் ஜெயராமும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.[69][70][71]
2019 சூனில், மணிரத்னம் மற்றும் ஜெயமோகனுடன் இப்பதிப்பிற்கானத் திரைக்கதையைச் சேர்ந்தெழுதுவதாக இளங்கோ குமரவேல் அறிவித்தார்.[72] இச்செயல்திட்டத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனை வைத்திருப்பதாக ரத்னம் தீர்மானித்தார். இருப்பினும், அவரிடம் நேரம் இல்லாதமையால் ரத்னம் ரவி வர்மனைச் சேர்த்தார். படத்திற்குக் கையெழுத்திடும் முன் வர்மன் சங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படத்திற்காக பணியாற்றிக்கொண்டிருந்தார். இந்தியன் 2 இன் தாமதத்தால் அப்படத்திலிருந்து விலகி பொன்னியின் செல்வனுக்காக இணைந்தார்.[73] 2019 செப்டம்பரில், ரோஜா (1992) இல் இருந்து ரத்னத்துடன் கூட்டுப்பணியில் பங்குபெற்ற இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் இணையான ரகுமான் மற்றும் வைரமுத்து ஆகியோரிடம் பணியாற்ற போவதாக ரத்னம் உறுதிபடுத்தினார். எனினும், வைரமுத்து பாலியல் துன்புறுத்தல் மற்றும் தீயநடத்தைக்காக தமிழ்த் திரைப்படத்துறையிலிருக்கும் பல பாடகிகள் மற்றும் பெண் கலைஞர்களால் குற்றஞ்சாட்டப்பட்டதால்,[74][75] ரத்னம் எடுத்த இம்முடிவு இணையவாசிகளுக்கு அதிருப்தியை அளித்தது. இதன் விளைவாக அனுஷ்கா ஷெட்டியும் செயல்திட்டத்தைவிட்டு விலகினார்.[76][77] கலை இயக்குநர் தோட்டா தரணி செயல்திட்டத்தின் புதிய பதிப்பிற்குக் கையெழுத்திட்டுப் பழைய பதிப்பில் பணியாற்றிய சாபு சிரிலுக்குப் பதிலாகச் சேர்ந்தார்.[78] வடிவமைக்கத் தொடங்கும் முன்பு சிற்பங்களைக் கவனித்து நெசவாளர்களைச் சந்தித்து பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ள தஞ்சாவூர் கோவில்களுக்கு ஆடை வடிவமைப்பாளர் ஏகா லக்கானி பயணித்தார்.[79][80]
படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் தாய்லாந்தில் ஆங்காங்கே நடைபெறுமென ரத்னம் அறிவித்தார்.[81][82] அவரது அறிவுரையின்படி விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக் உள்ளிட்ட பல நடிகர்கள் அவர்களது பாத்திரத்திற்காக நீண்ட முடி வளர்த்தனர்.[83][84][85] 2019 அக்டோபரில் அஸ்வின் ககுமனு செயல்திட்டத்தில் தான் இருப்பதை அறிவித்தார்.[86][87] நடிகர் லால், ரத்னத்துடனான ஒரு ஒளிப்படத்தைப் பகிர்ந்து படத்தைப் பற்றிய எதிர்ப்பார்ப்புகளை கூட்டினார்.[88][89] ஒரு வயதுமுதிர்ந்த போர்வீரன் பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறி படத்தில் தான் இருப்பதை மேலும் உறுதிபடுத்தினார்.[90]படப்பிடிப்பிற்கு முன்னர், ரத்னம் தாய்லாந்து முழுவதும் படப்பிடிப்பிற்கான இடவேட்டையில் இறங்கினார்.[91] தாய்லாந்திலுள்ள வளமிகு வனங்களும் கோவில்களும் கதைக்கேற்ற 9ஆம் நூற்றாண்டு உணர்வை ஒத்திருந்தமையால் அதனை முதன்மை இடமாக தேர்ந்தெடுக்கப்படலாமென சில அறிக்கைகள் கூறின.[91] அழைப்புச்சீட்டு(call sheet) சிக்கல்களைக் சுட்டிக்காட்டி அமலா பாலும்,[92] அண்ணாத்த திரைப்படத்திற்காக கேட்கப்பட்டிருப்பதால் கீர்த்தி சுரேசும் திரைப்படத்திலிருந்து விலக,[93] மீண்டும் பட நடிகர்களில் மீண்டும் ஒரு பெரு மாற்றம் ஏற்பட்டது. எனினும், பட நடிகர்களில் சில சேர்வுகளும் ஏற்பட்டது. எனினும், திரிசா,[94] ஐஸ்வர்யா லெட்சுமி மற்றும் விக்ரம் பிரபு ஆகியோர் திரைப்படத்திற்குக் கையெழுத்திட்டதாகத் தெரியவந்தது.
பொன்னியின் செல்வன் கதை பல ஆண்டுகளையும் 15 முதன்மை பாத்திரங்களுடன்,[95] 50க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களையும் கொண்டது.[96] மணிரத்னத்தின் திரைப்படத் தழுவலின் பழைய பதிப்பு விஜயை இரு கதாநாயகர்களுள் ஒருவரான வந்தியத்தேவனாகவும், மகேஷ் பாபுவை புதினத்தின் பெயர் கொண்ட பொன்னியின் செல்வன் என்னும் மற்றொரு கதாநாயகன் அருள்மொழிவர்மனின் பாத்திரமாகவும் கொண்டிருந்தது.[97][98] செயல்திட்டம் புத்துயிர் பெற்ற பின் அப்பாத்திரங்கள் முறையே கார்த்திக்கும் ஜெயம் ரவிக்கும் சென்றன. பின்னர் ஐஷ்வர்யா ராய் பச்சன் புதினத்தின் முதன்மை எதிர்நாயகியான நந்தினியாகவும் அவளது ஊமைத்தாய் அரசி மண்டகினி தேவியாகவும் நடிப்பாரெனத் தெரியவந்தது.[99] ஆழ்வார்க்கடியான் பாத்திரத்திற்காக ஜெயராம் மொட்டைத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.[100] திரிசா இளையபிராட்டி என்னும் குந்தவையாக நடித்திருக்கிறார்.[101] பூங்குழலி கதாபாத்திரம் படகோட்டிப் பெண் என்பதால் அப்பாத்திரத்திற்காக ஐஷ்வர்யா லட்சுமி துடுப்பு போட கற்றார்.[102] படப்பிடிப்பிற்குப் பின் ஊரடங்கு வந்ததால், திரிசா மதராசு குதிரையோட்டப் பள்ளியில் குதிரையோட்ட பயிற்சியெடுத்து 26 அக்டோபர், 2020 ஒரு சிறப்பு பயிற்சி வகுப்பில் பதிவுசெய்து 14 நவம்பர், 2020 இல் முடித்தார்.[103] ஜெயம் ரவியும் கார்த்திக்கும் திரைப்படத்தில் அவர்களது பாத்திரங்களை உறுதிபடுத்தினர்.[104]
₹500 கோடி ஆக்கச்செலவுடன் பொன்னியின் செல்வன் துவங்கியது.[105][106] பின்னர், அடுத்தடுத்து படமெடுக்கப்படும் இரு பாகங்களாக இது பிரிக்கப்பட்டது.[107] சில மூலங்கள் ₹500 ஆக்கச்செலவு இரு பாகங்களுக்கும் சேர்த்தே என தெரிவிக்கின்றன.[108][109]
முதன்மை ஒளிப்பதிவு 11 திசம்பர் 2019 இல் கிராபி, காஞ்சனபுரி மற்றும் தாய்லாந்திலுள்ள பிற இடங்களில் துவங்கியது. அங்கு படமெடுப்பு திட்டவணையை 40 நாட்களுக்குத் திட்டமிட்டிருந்தது படக்குழு.[110] முதல் திட்டவணையை சனவரி 2020 இல் முடித்தப்பின், படக்குழு இரண்டாம் திட்டவணையைச் சென்னையில் படமெடுக்க திட்டமிட்டது.[111] ஆனால் பின்னர் புதுச்சேரிக்கு மாறி ஆறு நாட்களுக்குள் நிறைவடைந்தது.[112][113] அடுத்த திட்டவணைக்கு ஐதராபாத்திற்கு பிப்ரவரி 10 அன்று படக்குழு நகர்ந்தது.[114] அங்கு மொத்த படக்குழுவும் இராமோசி திரைப்பட நகரில் படமெடுக்க திட்டமிட்டது. இரண்டாம் திட்டவணை 16 பிப்ரவரி 2020 அன்று முடிவடைந்தது.[115] ஐதராபாத்தில் படமெடுப்பின் போது கார்த்திக் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கையில் காற்றில் வீசப்பட்டு விபத்துக்குள்ளானதாகவும் எனினும் அவருக்கு சிறு காயங்கள் மட்டுமே வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.[116] மார்ச்சு 2020 முதல், கோவிட்-19 பெருந்தொற்று படப்படிப்பிற்கு இடையூறு செய்யும்வரை ஆக்குநர்கள் திரைப்படத்தின் பெரும் பாகத்தை 90 நாட்களுக்கு படமெடுத்தனர்.[117] சனவரி 2020 இல் திரைப்படம் இரு பாகங்களாகப் பிரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு,[118] ஏப்ரல் 2020 இல் மணிரத்னத்தால் உறுதிசெய்யப்பட்டது.[119]
செப்டம்பர் 2020 இல் மணிரத்னம் முடிவாக படப்பிடிப்பை இலங்கையில் தொடர திட்டமிட்டார்.[120] ஆனால் சர்வதேச பயணத்தில் இருந்த மட்டுப்பாடுகளால்,[121] படப்பிடிப்பைத் தொடர அதிகாரிகளிடம் அனுமதி பெறுதல் படக்குழுவிற்குக் கடினமாதலால்[122] திரைப்படத்தின் பெரும் பகுதிகளை இந்தியாவிலேயே படமெடுக்க தீர்மானித்தனர்.[123] அவற்றை ஐதராபாத்து, செய்சல்மேர், செய்ப்பூர், மத்திய பிரதேசம் மற்றும் இந்தியா முழுதுமுள்ள பல முக்கிய இடங்களில் படமெடுக்க மணிரத்னம் விரும்பினார்.[124] நவம்பர் மாதப் பாதியில் படமெடுக்க படக்குழு திட்டமிட்டபோதிலும்,[125] அரசு படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்திருந்தாலும் திரைப்பிடிப்பானது திரைப்படத்தில் பணியாற்றும் 75 பேருக்கு மேல் தாண்டாதவாறு குறைந்தபட்ச நபர்களையே கொண்டிருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தபடியால் புலம்பி அவ்வாறு படமெடுக்க வேண்டாம் எனத் தீர்மானித்தார்.[126] படப்பிடிப்பில் 500 பேர் நடிக்கவிருப்பதால் 2020 பாதியில் படமெடுத்தல் கடினம் எனக் கூறினார் மணிரத்னம்.[127] 10 திசம்பர் 2020 இல், திரைப்படத்தின் சிறு திட்டவணை பொள்ளாச்சியில் முன்னிலை நடிகர்களுடன் நிகழ்ந்தது.[128] ஒரே இழுவையில் முடியும் மாபெரும் திட்டவணை என்று சொல்லப்பட்ட திரைப்படத்தின் பெரும் திட்டவணை சனவரி 2021 இல் நடக்குமெனப் படக்குழு கூறியது.[128] கோப்ராவிற்கானப் படப்படிப்பை முடித்ததும் விக்ரம் அத்திட்டவணையில் இருக்கப்போவதாகத் தெரிவிக்கப்பட்டது.[129] ஒன்பது மாத நெடிய இடைவெளிக்குப் பின்,[130] படத்தின் படமெடுப்பு 6 சனவரி 2021 அன்று இராமோசி திரைப்பட நகர், ஐதராபாத்தில் மீண்டும் தொடர்ந்தது.[131] அப்பெரும் திட்டவணையில் சரத்குமார்,[132] ஐஷ்வரியா ராய் பச்சன்,[133] திரிசா,[134] ரகுமான்,[135] பிரகாஷ் ராஜ்,[136] பார்த்திபன் மற்றும் மோகன் ராமன் ஆகியோரின் வருகைபுரிந்து நடித்தனர்.[137]
3 பிப்ரவரி 2021 அன்று பெரும் எண்ணிக்கையுடன் இராமோசி திரைப்பட நகரில் கட்டப்பட்ட ஒரு பெரிய காட்சியமைப்பில் திரிசா மற்றும் மற்ற 250 கலைஞர்கள் நடித்ததை ஆக்குநர்கள் படமெடுத்தனர்.[138] தோட்டா தரணி மேற்பார்வையிட்ட கலை இயக்க அணியானது படப்பிடிப்பிடத்தில் ஐந்து பெரிய காட்சியமைப்புகளை கட்டியிருந்தனர்.[138] செயற்குழு தயாரிப்பாளர் சிவா ஆனந்தைப் பொருத்தவரை, இதற்குமுன் சனவரியில் சில பகுதிகளுக்கு நடித்த மற்றும் திட்டவணையின் குறுகிய இடைவெளியின்போது காட்சியமைப்பில் சேரவிருக்கும் விக்ரமைத் தவிர்த்து மற்ற முன்னிலை நடிகர்கள் ஐதராபாத்தில் சில பகுதிகளுக்கு நடிக்கத் தொடங்கினர்.[139] திட்டவணையின் படப்பிடிப்பு மார்ச்சில் முடிந்த பின், அடுத்த திட்டவணை மே மாதத்தில் துவங்க இருந்து, 23 ஏப்பிரலில் கோவிட்-19 பாதிப்பு உயர்ந்ததால் சூன் மாதத்திற்குத் தாமதிக்கப்பட்டது. வட இந்திய மாநிலங்களில் படமெடுக்க இருந்த திட்டங்கள் பதிலாகச் சென்னை மற்றும் ஐதராபாத்திற்கு மாறியது.[140] சூன் 2021 பாதியில், கோவிட்-19 பாதிப்பு குறைந்தவுடன் மட்டுமே படமெடுப்பு மீண்டும் தொடருமென அறிவிக்கப்பட்டது.[141]
சூலை 2021 இல் புதுச்சேரியில் படப்பிடிப்பு மீண்டும் தொடர்ந்தது.[142] ஆகத்து மாதத்தில், நிலுவையிலுள்ள பகுதிளை படமெடுக்கும் பொருட்டு இடம் பார்வையிட மத்தியப் பிரதேசத்திற்குப் படக்குழு சென்று பின்னர் ஓர்ச்சா மற்றும் குவாலியரில் படமெடுக்க மீண்டும் தொடர்ந்தனர். 2021 ஆகத்து மாத இறுதிக்குள், ஜெயம் ரவி மற்றும் விக்ரம் அவர்களது பகுதிகளை திரைப்படத்தின் இரு பாகங்களுக்கும் நிறைவுசெய்தனர்.[143] கார்த்திக் மற்றும் திரிசாவில் கவனம் செலுத்தும் மற்றொரு திட்டவணைக்காக படக்குழு பின்னர் மகேசுவருக்கு நகர்ந்தனர்.[144] 4 செப்டம்பர் 2021 அன்று, ரகுமான் அவரது பகுதிகளை நிறைவுசெய்ததை உறுதிப்படுத்தினார்.[145] ஒரு பாடலின் தொடர்காட்சிகளுக்கு படக்குழு பொள்ளாச்சியில் படமெடுப்பை மாதப் பாதியில் துவங்கியது.[146] சில தொடர்காட்சிகளைப் படமெடுக்க படக்குழு பொள்ளாச்சிக்கும் பின்னர் மைசூருக்கும் நகர்ந்தது. கார்த்திக் பொள்ளாச்சியில் படமெடுப்பில் சேர்ந்ததாகவும் அஷ்வின் ககமனு படமெடுப்பில் மைசூரில் சேர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. கார்த்திக் அவரது பகுதிகளுக்கானப் படமெடுப்பை 16 செப்டம்பர் 2021 அன்று முடித்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 18 அன்று இரண்டாம் பாகத்தின் சில தொடர்காட்சிகளைத் தவிர முதற்பாகத்தின் மொத்த படமெடுப்பும் முடிந்தது என்று உறுதிப்படுத்தினார். எனினும், மார்ச்சு 2022 இல் ஜெயம் ரவி, கார்த்திக் மற்றும் ஐஷ்வரியா ராய் ஆகியோர் மீதமுள்ள சிறிய ஒட்டுவேலையொன்றை 7 நாட்களில் முழுவதுமாக முடித்தனர்.[147]
திரைப்பட முன்னோட்டம் சோழ சாம்ராச்சியத்தின் தலைநகரமான தஞ்சாவூரில் பிரகதீசுவரர் கோவிலில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் திரைப்படத்திற்கான விளம்பரப் பிரச்சாரம் 2022 சூலையில் துவங்கும்.[148] துவக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து, திரைப்படத்திற்காக ஒரு விளம்பரச் சுற்றுலாவையும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.[148] 2022 சூன் மாத நடுவில் முன்னோட்ட வெளியீடு பாதுகாப்பு காரணங்களுக்காகவும் முன் தயாரிப்பு தாமதங்களினாலும் ரத்துசெய்யப்பட்டது.[149] பின்னர், முன்பு திட்டமிட்டதுபோல் சென்னையில் 8 சூலை 2022 அன்று ஒரு பிரம்மான்டமான முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சி நடத்த படக்குழு முடிவெடுத்தது.[150] 8 சூலை 2022 அன்று படத்தின் முன்னோட்டம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.[151]
பொன்னியின் செல்வன்: I 30 செப்டம்பர் 2022 இல் வெளியாக தேதி குறிக்கப்பட்டுள்ளது.[152] 2022 (மே - சூன்) கோடையில் வெளியாக முன்பு காலங்குறிக்கப்பட்டிருந்த நிலையில் தயாரிப்பு வேலைகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் திரைப்படத்திற்கான விநியோக உரிமைகளை லைக்கா தயாரிப்பகம் வாங்கியது.[153]
திரைப்படத்திற்கான வீட்டு ஊடக வெளியீட்டு உரிமைகளை அமேசான் பிரைம் வீடியோ ₹125 கோடிக்கு (US$16மில்லியன்) வாங்கியது.[154]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.