எழுத்தாளர், சிந்தனையாளர். From Wikipedia, the free encyclopedia
பி. ஆர். ராஜமய்யர் அல்லது பி. ஆர். ராஜம் ஐயர் (ஜனவரி 25, 1872 - மே 13, 1898) ஓர் எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாசிரியர், பத்திரிகையாசிரியர், ஆன்மிகம் மற்றும் தத்துவ வேட்கை கொண்ட சிந்தனையாளர். இவர் தமிழில் வெளியாகிய முதல் சில நாவல்களில் ஒன்றாகிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை மிக இளவயதிலேயே (21ஆம் வயதில்) எழுதியவர்.
ராஜமய்யர், 1872ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு என்ற கிராமத்தில் பிறந்தவர். அவர் ஒரு சாதாரண நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இளமைக் கல்வியை மதுரை பாண்டித்தியப் பாடசாலையில் பயின்றார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் 1889 இல் கலைமாணி (B.A.) பட்டம் பெற்று சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். இறுதித் தேர்வில் வெற்றி பெறவில்லை. அதனால் விரக்தியில் ஆழ்ந்திருந்த சமயத்தில், தனது மனத்தை ஞான மார்க்கத்தில் செலுத்தினார்.
பிரம்மவாதின் என்ற ஆங்கிலத் திங்களிதழில் Man his littleness and greatness என்ற தனது முதல் கட்டுரையை எழுதினார். இவருடைய எழுத்துக்கள், இவர் வாழ்க்கையின் ஆன்மிகத் தேடலின் பிரதிபலிப்பாக அமைந்தன. சுவாமி விவேகானந்தரால் பணிக்கப்பட்டு பிரபுத்த பாரதா என்ற ஆங்கில பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அவர் எழுதிய தத்துவ விசாரணை கட்டுரைகள், பின்னாளில் வேதாந்த சஞ்சாரம் (ஆங்கிலத்தில் Rambles in Vedanta) என்று 900 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளிவந்தது.
மே 13 ஆம் நாள் 1898 ஆம் ஆண்டு ,தன்னுடைய 26ஆம் வயதில் குடற்சிக்கல் நோய் காரணமாக இயற்கை எய்தினார். பிரபுத்த பாரதாவின் 1898 ஜூன் மாத இதழில் இராஜமையரின் மறைவினால் இந்த இதழ் நிறுத்தப்படுகிறது என்ற செய்தி வெளியிடப்பட்டது. [ஆனால், சுவாமி விவேகானந்தரின் பெருமுயற்சியால், பி. ஆர். ராஜமய்யரின் மறைவை அடுத்து 1898 ஆகஸ்டு இதழில் இருந்து சென்னைக்கு பதிலாக அல்மோராவில் உள்ள அத்வைத ஆசிரமத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்தது.]
தமிழில் முதல் நாவல் என சொல்லப்படும், மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் 1870ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ராஜமய்யர், தமிழின் இரண்டாம் நாவலாகிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை 1893 ஆம் ஆண்டு விவேக சிந்தாமணி என்ற மாத பத்திரிக்கையில் தொடராக எழுத ஆரம்பித்தார். அவருக்கு அப்போது வயது 21.
ராஜமய்யர் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அழ்ந்த அறிவும், புலமையும் பெற்றிருந்தார். வில்லியம் தாக்கரே, கோல்ட் ஸ்மித் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களை படித்திருந்தார். ஆயினும் கமலாம்பாள் சரித்திரம், எந்த ஆங்கில நடையின் தாக்கமும் இல்லாமல், தன்னுடைய கலைத்திறன் மற்றும் வாழ்க்கையினை நோக்கும் பாதை ஆகியவற்றை கொண்டு ஒரு புதிய இலக்கிய மரபை துவக்கிவைத்தார். ஷெல்லி,வேர்ட்ஸ்வொர்த் போன்ற சிறந்த கவிஞர்களின் கவிதைகளை ஊன்றிப் படித்தார். உலகக் கவிஞர்களில் தலைசிறந்தவர் கம்பர் என்பது அவருடைய கருத்து.[1]
Seamless Wikipedia browsing. On steroids.