From Wikipedia, the free encyclopedia
கல்லிடைக்குறிச்சி அய்யாவய்யர் நீலகண்ட சாத்திரி (K. A. Nilakanta Sastri, கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, ஆகஸ்ட் 12, 1892 - ஜூன் 15, 1975) ஒரு இந்திய வரலாற்றாளர் மற்றும் திராவிடவியலாளர். இவர் தென்னிந்திய வரலாற்றாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.[1]
கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாத்திரி | |
---|---|
![]() | |
பிறப்பு | கல்லிடைக்குறிச்சி, இந்தியா | ஆகத்து 12, 1892
இறப்பு | சூன் 15, 1975 82) சென்னை, இந்தியா | (அகவை
பணி | வரலாற்றாளர், ஆய்வாளர், பேராசிரியர், எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை | லட்சுமி நரசம்மாள் |
நீலகண்ட சாத்திரி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி என்ற ஊரில் ஓர் ஏழை பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்.[2] திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இடைநிலை வகுப்பை (FA) முடித்து விட்டு மேற்படிப்பைச் சென்னை கிருத்துவக் கல்லூரியில் தொடர்ந்தார்.[3][4] முதுகலைப் பட்டத்தில் (எம்.ஏ) சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். 1913 முதல் 1918 வரை இந்துக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.[5][6] 1918-20 காலகட்டத்தில் வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக வேலை பார்த்தார்.[5] அதன் பின்பு புதிதாகத் தொடங்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கலைக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றார்.[7] பிறகு 1929-இல் திருச்சி நேஷனல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அதே ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தொல்லியல் பேராசிரியராகப் சாக்கோட்டை கிருஷ்ணசாமி அய்யங்காருக்குப்பின் பதவியேற்று 1946 வரை பணிபுரிந்தார்.[3][8]
1952 முதல் 1955 வரை மைசூர் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் பேராசிரியராக இருந்தார். 1954-இல் மைசூர் மாநிலத்தின் தொல்லியல் துறையின் கெளரவ இயக்குநராக நியமிக்கப்பட்டார்.[1][3][5] 1950-களின் ஆரம்பத்தில் அகில இந்திய கீழைத்தேய மாநாட்டின் தலைவராக இருந்தார்.[9] 1957 -1972 வரை இவர் யுனெஸ்கோவின் தென்னிந்தியப் பாரம்பரிய கலாச்சார நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார்.[1][3] 1957-இல் இவருக்கு பத்ம பூஷண் விருது (இந்தியப் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மூன்றாவது உயரிய விருது) அளிக்கப்பட்டது. 1959-இல் கோடைப்பருவத்தில் சிக்காகோ பல்கலைக்கழகத்திற்குச் சென்று தென்னிந்திய வரலாறு பற்றிப் பல சொற்பொழிவுகள் ஆற்றினார்.[5] இவர் 1975-இல் காலமானார்.[1]
புகழ் பெற்ற வரலாற்றாளர் ஆர். எஸ். சர்மா, க. அ. நீலகண்ட சாஸ்திரி ஒரு மீட்டுருவாக்குபவர் (revivalist) அல்லர் என்றும் அவரது புத்தகம் தென்னிந்திய வரலாறு ஆதாரப்பூர்வமானது என்றும் கூறியுள்ளார்.[10] தமிழ் வரலாற்றாளரான ஆ. இரா. வேங்கடாசலபதி, இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் சிறந்த வரலாற்றாளராக நீலகண்ட சாஸ்திரியைக் கருதுகிறார். 1915-இல் வங்காள வரலாற்றாளர் ஜாதுநாத் சர்க்கார், கன்ஃபஷன்ஸ் ஆஃப் அ ஹிஸ்டரி டீச்சர் (மாடர்ன் ரிவ்யூ இதழ்) என்ற கட்டுரையில் வட்டார மொழிகளில் வரலாற்றுப் படைப்புகள் அதிகம் இல்லை என்றும் வட்டார மொழிகளில் வரலாற்றுப் புத்தகங்கள் அவசியம் வெளிவர வேண்டும் மற்றும் வரலாற்றுப் பாடம் வட்டார மொழிகளில் பயிற்றுவிக்கப் பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். அப்போது திருநெல்வேலியில் ஆசிரியராக இருந்த நீலகண்ட சாஸ்திரி தமிழைவிட ஆங்கிலம் தான் தன் கருத்துகளை எழுத வசதியாக இருப்பதாகவும் வட்டார மொழிகள் அந்த அளவுக்கு வளமானதாக இல்லாததுதான் அதற்குக் காரணம் எனவும் சர்க்காரின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து செய்தித்தாளில் எழுதினார். சாஸ்திரியின் இக்கருத்துகள் சுப்பிரமணிய பாரதியின் வன்மையான கண்டனத்துக்குள்ளாயின.[11][12]
நீலகண்ட சாஸ்திரிக்கு ஆழமான தமிழ் அறிவு கிடையாது என்றும் தமிழ் இலக்கியங்களைச் ச. வையாபுரிப்பிள்ளையின் உரைகளின் துணையோடுதான் புரிந்து கொள்ள முடிந்தது என்றும் வேங்கடாசலபதி கூறுகிறார். இதனால் நீலகண்ட சாஸ்திரியால் காலமாற்றத்துக்கு ஏற்றவகையில் தமிழ் வார்த்தைகளுக்குப் பொருள் கொள்ள இயலவில்லை என்றும் அவர் கருதுகிறார். மேலும் சாஸ்திரியின் காலத்தில், தமிழ் நாட்டில் கிடைத்த ஆதாரங்களை வேறு களங்களில் உள்ள ஆதாரங்களோடு ஒப்பிட்டு ஆராயும் பழக்கம் வரலாற்றியலில் இருக்கவில்லை எனவும் அவர் கூறுகிறார்.[13]
இவர் தென்னிந்திய வரலாறுபற்றி 25 நூல்கள் எழுதியுள்ளார்.
{{cite book}}
: Unknown parameter |coauthors=
ignored (help){{cite book}}
: Unknown parameter |coauthors=
ignored (help){{cite book}}
: Unknown parameter |coauthors=
ignored (help)Seamless Wikipedia browsing. On steroids.