குமரி அனந்தன்
தமிழ்நாட்டு அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
குமரி அனந்தன் (Kumari Ananthan, 19 மார்ச்சு 1933 – 9 ஏப்ரல் 2025), தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர். காமராசருடன் இணைந்து பணியாற்றியவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், இந்திய மக்களவை உறுப்பினர், தமிழ்நாட்டுச் சட்டமன்ற உறுப்பினர் எனப் பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர். இலக்கியப் பேச்சாற்றல் திறன் மிக்கவர்.
Remove ads
பிறப்பும் கல்வியும்
குமரி அனந்தன் கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்கிற அகத்தீசுவரத்தில், இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி அரிகிருசுணன் - தங்கம்மாள் இணையருக்கு முதல் மகனாக 1933 மார்ச்சு 19 ஆம் தேதியன்று பிறந்தார். இவருடைய இயற் பெயர் அனந்தகிருட்டிணன். குமரிமங்கலம் அனந்தகிருட்டிணன், பின்னாளில் குமரி அனந்தன் ஆனார். தொழிலதிபர் எச். வசந்தகுமார் இவருடைய தம்பி ஆவார்.
குமரி அனந்தன் தமிழில் முதுகலை, முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளார். மதுரையில் சிறிது காலம் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
Remove ads
குடும்பம்
குமரி அனந்தனின் மனைவி பெயர் கிருஷ்ணகுமாரி. இந்த இணையருக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரின் மகள் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு மருத்துவரும், அரசியல்வாதியும் ஆவார்.
நாடாளுமன்ற உறுப்பினர்
குமரி அனந்தன் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் , இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில், நாகர்கோயில் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.[1] பின்பு 1996 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] அடுத்து இரண்டு முறை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோற்றார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், நாகர்கோயில் தொகுதியில் போட்டியிட்டும்,[3] 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டும் தோற்றார்.[4]
சட்டமன்ற உறுப்பினர்
குமரி அனந்தன் ஐந்து முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினாராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம் 19 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[5] 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தேர்தலில், திருவொற்றியூர் தொகுதியில், காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார். [6] 1984 ஆம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், சாத்தான்குளம் தொகுதியில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தேர்தெடுக்கப்பட்டார்.[5][8]
Remove ads
காங்கிரஸ் தொண்டர்
குமரி அனந்தன் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவருடைய 80-ஆவது பிறந்த நாள் விழா 2012 ஆம் ஆண்டு மார்ச்சு 20 அன்று, சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் குழு சார்பில் கொண்டாடப்பட்டது.[9]
1980-களில் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியினைத் தொடங்கினார். பின்னர் அதனை இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடன் இணைத்தார். பின்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தொண்டர் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார்.[10] தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை அலட்சியம் செய்ததாலேயே இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறினார். பிறகு, மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.
குமரி அனந்தன் காந்தி பேரவை என்கிற அமைப்பின் தலைவராக இருந்து வந்தார். தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர் வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றி வந்தார், தன்னுடைய உடல்நலக்குறைவு காரணமாக, 2011 ஆம் ஆண்டு மே மாதம் 14 அன்று அப்பொறுப்பை விட்டு விலகினார்.
Remove ads
அரசியல் பணிகள்
நடைபயணங்கள்
குமரி அனந்தன் 1967 முதல் மதுவிலக்கு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், தமிழுக்கு முன்னுரிமை, நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல நடைபயணங்களை மேற்கொண்டு வந்தார். 2011 ஆம் ஆண்டு, ஒன்பதாவது முறையாக நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவல்லிக்கேணி முதல் புதுச்சேரி வரையிலான 180 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்டார்.[11]
எங்கும் தமிழ்
குமரி அனந்தன் நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்கும் உரிமையைப் பெற்றுத் தந்தார்.[சான்று தேவை] தந்தி விண்ணப்பங்கள், காசாணை ஆகியவற்றையும் தமிழ் வழியிலேயே பயன்படுத்தும் வசதியினைப் போராடிப் பெற்றுத் தந்தார்.[சான்று தேவை] தமிழில் விமானங்களில் அறிவிப்புகள் வெளியிடவேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்.
Remove ads
நூல்கள்
குமரி அனந்தன் பின்வரும் நூல்கள் உள்பட 29 நூல்களை எழுதியுள்ளார்.
- கலித்தொகை இன்பம்
- படித்தேன், கொடுத்தேன்
- நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ்
- குமரி அனந்தனின் தமிழ் அமுது
- சிந்தனைப் பண்ணையில் பாரதியார்
- சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன்
- கங்கையே வருக... குமரியைத் தொடுக!
- நீங்களும் பேச்சாளராகலாம்
சிறப்புகள்
2011 ஆம் ஆண்டிற்கான சி. பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது: வெள்ளிப் பட்டயத்துடன் ரூ. 1.5 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்ட இந்த விருது குமரி அனந்தனுக்கு வழங்கப்பட்டது. சென்னை மகாஜன சபை வழங்கும் 2011 ஆம் ஆண்டிற்கான காமராஜர் விருது குமரி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது சமுதாயத் தொண்டும், தேசத் தொண்டும் ஆற்றி வருபவர்களுக்கு வழங்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் குடிமக்களுக்கு வழங்கும் பெருமைமிகு உயரிய விருதான தகைசால் தமிழர் விருதினை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், குமரி அனந்தனுக்கு வழங்கினார். [12]
Remove ads
இறப்பு
குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2025 ஏப்ரல் 9, அன்று மூச்சுக் கோளாறு காரணமாகத் தனது 92 ஆவது அகவையில் காலமானார்.[13] தமிழ்நாடு அரசு சார்பில் குமரி அனந்தன் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை வழங்கப்பட்டது.[14]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads