2011 எகிப்திய போராட்டம் (2011 Egyptian protests, Day of Anger) (அரபு மொழி: يوم الغضب, அல்லது இளைஞர் புரட்சி (Youth Revolution) எனக் குறிப்பிடப்படும்[1] எதிர்ப்புகள், 25 சனவரி 2011 முதல் எகிப்து நாட்டில் தொடர்ந்து நிகழும் தெருப்போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் குடிமை ஒத்துழையாமையையும் குறிக்கின்றன. 2010-11 துனீசியா புரட்சியின் பின்னணியில் பொதுமக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த புரட்சி அமைப்பாளர்கள் முயன்று வந்தனர்.. காவல்துறையின் கொடுஞ்செயல்கள், நெருக்கடி நிலைச் சட்டங்கள், வேலையின்மை, குறைந்த ஊதியத்தை உயர்த்தவேண்டியத் தேவை, குடியிருப்பில்லாமை, உணவுப்பொருட்களின் விலை உயர்வு, அரசியல் ஊழல், பேச்சுரிமை மறுக்கப்படுதல், மோசமான வாழ்நிலை போன்ற காரணங்களுக்காக இந்தப் போராட்டங்களும் கலவரங்களும் நடைபெற்றன.[2] கடந்த 30 ஆண்டுகளாக பதவியில் இருந்துவரும் அதிபர் ஹொஸ்னி முபாரக்கின் பதவி விலகலை இப்போராட்டங்கள் இலக்காகக் கொண்டு அதில் வெற்றியும் கண்டன.[3] 11 பெப்ரவரி அன்று முபாரக் முனைப்புடன் செயல்பட்ட பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கிடையே தமது பதவியிலிருந்து விலகினார்.[4]

Thumb
25 சனவரி அன்று எகிப்திய போராட்டக்காரர்கள்

முந்தைய ஆண்டுகளிலும் உள்ளூர் போராட்டங்கள் நடப்பது வழமையான ஒன்றாக இருந்தபோதும், 25 சனவரி 2011 முதல் நாடு தழுவிய போராட்டங்களும் கலவரங்களும் நிகழ்ந்தன. எகிப்தின் எதிர்கட்சிகளும் பிறரும் பெரும் எதிர்ப்பு தெரிவிக்க தெரிந்தெடுத்த 25 சனவரி 2011 "கோபத்தின் நாள்" எனக் குறிப்பிடப்படுகிறது.[2] இப்போராட்டங்கள் எகிப்தில் "முன்னெப்போதும்" நடக்காதவை,[5] என்றும், நாட்டில் "அண்மைக்காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட மிகப்பெரும் பொதுமக்களின் எதிர்ப்பு என்றும்,[6] கெய்ரோ ஒரு "போர்க்களமாகக்" காட்சியளிப்பதாகவும்[7] செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் குறிப்பிட்டன. முதன்முறையாக அனைத்து சமூக பொருளியல் பின்னணி கொண்ட பல்வேறுத் துறை மக்களும் எதிர்ப்பு தெரிவிப்பதில் ஒன்று சேர்ந்தனர்.[8][9]

சனவரி 29 வரை பத்து காவலர்களுடன் குறைந்தது 95 மரணங்களாவது (27 பேர் சூயசில், 23 பேர் அலெக்சாண்டிரியாவில், 45 பேர் கெய்ரோவில்) அறிவிக்கப்பட்டது. 750 காவலர்களும் 1,500 போராட்டக்காரர்களும் காயப்பட்டனர்.[10][11] தலைநகர் கெய்ரோவிலும் துறைமுக நகர் சூயசிலும் வன்முறைச் சம்பவங்கள் நடப்பதாகச் செய்திகள் வந்தன.[7] எகிப்து அரசு போராட்டத்தை கலைக்க பலவகைகளிலும் முயன்று வந்தது. கலவர எதிர்ப்பு காவல்படை இரப்பர் இரவைகள், கைத்தடிகள், நீர் பீரங்கிகள்,கண்ணீர்புகை மற்றும் இராணுவக் குண்டுகளையும் பயன்படுத்தி வந்தது.[12] பெரும்பாலும் போராட்டத்தை கொல்லும் நோக்கமின்றி காவலர்கள் செயல்பட்டாலும் சில மரணங்கள் நிகழ்ந்துள்ளன.[13][14][15][16] அரசு அடிப்படைவாத இசுலாமியக் குழுக்கள் தூண்டுவதாகக் கூறி அனைத்து இணையச் சேவைகளையும் முழுமையாக தடைசெய்தும் [17][18][19] ஊரடங்குச் சட்டத்தை அமலாக்கியும்,[20] போராட்டத்தின் தீவிரத்தைக் குறைக்க முயன்றது.[21]

போராட்டத்திற்கு எதிரான பன்னாட்டு அரசு மற்றும் அமைப்புகளின் எதிர்வினைகள் இருபக்கத்தினரையும் வன்முறையைத் தவிர்க்குமாறும் அமைதிப்பேச்சுக்கள் மூலம் தீர்வு காணுமாறும் வலியுறுத்துவதாகவும் இருந்தது. போராட்டக்காரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தொடர்பு கொள்ளவும், ஒருங்கிணைக்கவும், ஆவணப்படுத்தவும் உதவும் சமூக வலைத்தளங்களான டிவிட்டர், ஃபேசுபுக், யூ டுயூப் போன்றவற்றின் தாக்கத்தால் இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் உலகின் கவனத்தை ஈர்த்தது. போராட்டத்திற்கான விளம்பரத்தைக் கூட்டுவதால் எகிப்திய அரசு இணைய அணுக்கத்தைக் கட்டுப்படுத்தி வந்தது. 28 சனவரி 2011 அன்று திட்டமிடப்பட்ட "கோப வெள்ளி" எதிர்ப்பினையொட்டி முதல்நாள் இரவு நகர்பேசிகள் இயங்குவது தடைப்பட்டபோதும் வெள்ளி விடிகாலையில் அந்தத் தடை நீக்கப்பட்டது.[22]

எகிப்தியத் துணைத்தலைவர் ஒமார் சுலைமான் 11 பெப்ரவரி அன்று முபாரக் பதவி இறங்கியதையும் படைத்துறை உயர்மட்டக்குழுவிடம் ஆட்சியை ஒப்படைத்ததையும் அறிவித்தார்.[23] மொகமது உசைன் தன்டவி தலைமையில் அமைந்த இக்குழு அரசியல் சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதையும் நாடாளுமன்ற இரு அவைகளும் கலைக்கப்பட்டதையும் பெப்ரவரி 13 அன்று அறிவித்தது. ஆறு மாதங்களில் தேர்தல்கள் நடத்தப்படும்வரை இராணுவம் ஆட்சி நடாத்தும் என்றும் அறிவித்தது. புதிய அமைச்சரவை உருவாகும்வரை பிரதமர் அகமது சபீக்கின் தலைமையிலான முந்தைய அமைச்சரவை தொடர்ந்து காபந்து அரசை நடத்தும். .[24]

ஒசுனி முபாரக்கிற்கு எதிரான எகிப்திய மக்களின் போராட்டத்திற்கு உலகெங்கும் பலத்த ஆதரவு

எகிப்தில் ஒசுனி முபாரக் அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் முகமாக உலகின் பல நாடுகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் எகிப்திய துதுவராலயங்களுக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் குதித்தனர்.

துருக்கியத் தலைநகர் அன்காராவிலுள்ள எகிப்திய தூதுவராலயத்தின் முன் குழுமிய பெருந்தொகையான மக்கள் எகிப்தில் கிளர்ச்சி செய்யும் மக்களுக்குத் தமது ஆதரவை வெளிக்காட்டும் சுலோகங்களை தாங்கி நின்றனர்.

லண்டன் மாநகர எகிப்தியத் தூதுவராலயத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அரச அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அண்மையில் கிளர்ச்சி வெடித்த துநேசியத் தலைநகர் டியுநிசில் எகிப்தியப் புரட்சியை ஆதரிக்கும் கோசங்களை முழங்கியபடி ஏராளமான மக்கள் பேரணியொன்றில் கலந்துகொண்டனர்.

எகிப்திய கிளர்ச்சியாளர்களுக்கு தம்முடைய ஆதரவை தெரிவிக்கும் முகமாக ஜெர்மனியிலும் ஒரு பேரணி ஒழுங்கு செய்யப்பட்டது.

முபாரக் அரசினால் பிறப்பிக்கப்பட்ட ஊடரங்கு உத்தரவையும் மீறி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரவு முழுக்க கொய்ரோ வீதி தோறும் குழுமியிருந்தனர். இப்பதற்ற நிலைமையை கருத்திற்கொண்டு வீதியில் ஏராளமான இராணுவத்தினர் குவிக்கப் பட்டனர்.

எகிப்தின் எல்லா பிரதேசங்கிலும் வெடித்த மாபெரும் மக்கள் கிளர்ச்சியின் போது மக்களுக்கும் அரச துருப்புக்களுக்கும் இடையிலான மோதலில் இதுவரையில் நூறுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர் ஆரம்பமான மாபெரும் மக்கள் கிளர்ச்சியினால் குலை நடுக்கமுற்ற முபாரக் அரசு நாடளாவிய ரீதியில் சகல கைத்தொலைபேசி மற்றும் இணைய சேவைகளை முற்றாகத் துண்டித்தமை குறிப்படுத்தக்கது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.