1930 உலகக்கோப்பை காற்பந்து
From Wikipedia, the free encyclopedia
1930 உலகக்கோப்பை காற்பந்து ( 1930 FIFA World Cup) பன்னாட்டு ஆடவர் தேசிய காற்பந்தாட்ட அணிகளுக்கிடையேயான முதல் உலகக்கோப்பை காற்பந்துப் போட்டி ஆகும். இது உருகுவை நாட்டில் 13 சூலை முதல் 30 சூலை 1930 வரை நடைபெற்றது. உருகுவை தனது முதல் அரசியலமைப்புச் சட்டத்தின் நூறாவது ஆண்டை அந்த ஆண்டில் கொண்டாடியதாலும் 1928 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் உருகுவை தேசிய காற்பந்து அணி காற்பந்து தங்கத்தை வென்றிருந்ததாலும் காற்பந்தாட்டங்களுக்கான பன்னாட்டு கட்டுப்பாட்டு அமைப்பான பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு இப்போட்டியை நடத்த உருகுவை நாட்டை தேர்ந்தெடுத்தது. அனைது ஆட்டங்களும் உருகுவையின் தலைநகரமான மான்ட்டிவிடியோவில் நடந்தது. பெரும்பாலான ஆட்டங்கள் இப்போட்டிக்காக கட்டப்பட்ட எசுடேடியோ சென்டெனரியோவில் நடந்தது.
1er Campeonato Mundial de Fútbol | |
---|---|
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
இடம்பெறும் நாடு | உருகுவை |
நாட்கள் | 13 சூலை – 30 சூலை |
அணிகள் | 13 |
அரங்கு(கள்) | 3 (1 நகரத்தில்) |
இறுதி நிலைகள் | |
வாகையாளர் | ![]() |
இரண்டாம் இடம் | ![]() |
மூன்றாம் இடம் | ![]() |
நான்காம் இடம் | ![]() |
போட்டித் தரவுகள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 18 |
எடுக்கப்பட்ட கோல்கள் | 70 (3.89 /ஆட்டம்) |
பார்வையாளர்கள் | 5,90,549 (32,808/ஆட்டம்) |
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) | ![]() (8 கோல்கள்) |
1934 → | |
பதின்மூன்று அணிகள் (தென் அமெரிக்காவிலிருந்து ஏழு அணிகளும் ஐரோப்பாவிலிருந்து நான்கு அணிகளும் வட அமெரிக்காவிலிருந்து இரண்டு அணிகளும்) இறுதியாட்டங்களில் பங்கேற்றன. தென் அமெரிக்காவிற்கு பயணிப்பது கடினமாக இருந்ததால் ஒருசில ஐரோப்பிய அணிகளே பங்கேற்றன. அணிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவின் வெற்றியாளரும் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் இரண்டு ஆட்டங்களும் ஒரே நேரத்தில் விளையாடப்பட்டன; பிரான்சு மெக்சிக்கோவை 4–1 கோல்கணக்கிலும் ஐக்கிய அமெரிக்கா பெல்ஜியத்தை 3–0 கோல்கணக்கிலும் வென்றன. பிரான்சின் லூசியன் லொரென்ட்டுக்கு உலகக்கோப்பையின் வரலாற்றில் முதல் கோலை அடித்தப் பெருமை கிட்டியது. போட்டியில் அலுவல்முறையாக "எந்த கோலும் வழங்காத" முதல் கோல்காவலராக அமெரிக்க ஜிம்மி டக்ளசு விளங்கினார்.
தங்கள் குழுக்களில் முறையே வெற்றி பெற்ற அர்கெந்தீனா, உருகுவை, ஐக்கிய அமெரிக்கா, யூகோஸ்லாவியா அரையிறுதிக்கு முன்னேறின. 93,000 பேர்கள் கண்டுகளித்த இறுதி ஆட்டத்தில், போட்டி நடத்திய உருகுவை அர்கெந்தீனாவை 4–2 என்ற கோல்கணக்கில் வென்று உலகக்கோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது.