வில்லை (ஒளியியல்)
From Wikipedia, the free encyclopedia
வில்லை (lens) என்பது ஒளிக் கதிர்களைக் குறிப்பிட்டவாறு குவிக்கவோ அல்லது விரியவோ செய்யவல்ல ஓர் எளிய கருவி. இது ஒரு பொருளை பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ காட்ட வல்லது. பொதுவாக ஒற்றை வில்லைகள் கண்ணாடி அல்லது நெகிழி போன்ற ஒளி ஊடுருவும் பொருளால் செய்யப்பட்டது. இரட்டை வில்லை, மும்மை வில்லை போன்றவை பல ஒற்றை வில்லைகளை ஒரே அச்சில் அமைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது. ஒளி ஓர் ஊடகத்தில் இருந்து வேறு ஓர் ஊடகத்தின் வழியே செல்லும் பொழுது ஏற்படும் ஒளிவிலகல் பண்பே வில்லையின் அடிப்படைப் பண்பாகும். இதன் அடிப்படையிலேயே வெவ்வேறு வளைவுகளைக் கொண்ட வில்லையின் பரப்புகள் அமைக்கப்படுகின்றன. ஒரு வில்லையின் புறப் பரப்புகள் சீரான குழியாகவோ, குவிந்தோ அல்லது சமதளமாகவோ இருக்கும்.
வெளிநோக்கி வளைந்து குவிந்து இருந்தால் குவிப் பரப்பு என்றும், உள்நோக்கி வளைந்து குழிந்து இருந்தால் குழிப் பரப்பு என்றும், நேரான சமதளமாக இருந்தால் சமதளப் பரப்பு என்றும் குறிக்கப்படும். ஒருபுறம் ஒளி நுழைந்து மறுபுறம் ஒளி வெளி வருமாகையால் வில்லைக்கு இரு பரப்புகளும் முக்கியமானவை.
பட்டகம், ஒரு ஒளிக் கதிரை விலகலடைய மட்டுமே செய்யும், ஆனால் வில்லைகள் ஒளியை விலகலடையச் செய்வதோடு, அவற்றை குவித்து பிம்பங்களையும் உருவாக்க வல்லது. நுண்ணலைகளை குவிக்கும் வில்லைகள் மற்றும் இலத்திரன்களை குவிக்கும் வில்லைகள் என கண்ணுக்குப் புலனாகாத கதிர்களையும் குவிக்கும் வில்லைகளும் உள்ளன.
வில்லை என்பது பெரும்பாலும் திண்மப் பொருட்களால் ஆனது என்றாலும், தாமரை இலையின் மீது உள்ள நீரும், பனித்துளியும் திரண்டு புறப் பரப்பு குவிந்து இருப்பதால் அவைகளும் வில்லையின் பணியையே செய்கின்றது. மெல்லிய அட்டை போன்ற ஒரு தட்டையான ஒளியூடுருவு பொருளும் குறிப்பிட்ட சில வழிகளில் கீறப்பட்டோ வடிவமைக்கப்பட்டோ இருந்தால் அவைகளும் வில்லை போல இயங்க வல்லன (பார்க்க ஃவிரெனெல் வில்லை). ஒளிப்படக்கருவி, நுண்நோக்கி போன்ற பல அன்றாடக் கருவிகளிலும் அறிவியல் ஆய்வுக் கருவிகளிலும் வில்லை பரவலாக பயன்படுகின்றது[1].