வானம்
From Wikipedia, the free encyclopedia
வானம் அல்லது ககனம் பூமியின் மேற்புறத்திலிருந்து குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் விரிந்திருக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய பரந்த வெளியைக் குறிக்கும். இது பொதுவாக வளிமண்டலத்தையும், அதற்கு அப்பாலுள்ள விண்வெளியையும் சேர்த்து உள்ளடக்கியதாகும். வானியலில் வானமானது வானக்கோளம் எனவும் அழைக்கப்படும். இந்த வெளியிலே சூரியன், நிலா, விண்மீன்கள் போன்றவற்றின் அசைவுகளை நாம் அவதானிக்கிறோம். முகில், வானவில், வடமுனை ஒளி என்பன வானத்தில் காணக்கூடிய இயற்கையான சில தோற்றப்பாடுகளாகும். பொழிவு (வானிலையியல்), மின்னல் என்பனவும் வானத்துடன் தொடர்புடைய தோற்றங்களே.
பகலில், முகில்களற்ற வானம் இருக்கையில் சூரியன் தெரியும். அத்துடன் முகில்களற்ற வானம் நீல நிறமாக இருக்கும்[1][2][3][4]. இதற்குக் காரணம் வளிமண்டலத்தில் இருக்கும் வளிமமானது, சூரிய ஒளியிலிருந்து வரும் வெவ்வேறு நிறங்களில், நீல நிற ஒளியை அதிகமாகச் சிதறடிக்கின்றது. நீலநிறத்தை விடவும் அலைநீளம் குறைவான ஊதா, கருநீலம் ஆகிய நிறங்கள் அதிகமாகச் சிதறடிக்கப்பட்டாலும், நமது கண்களில், குறிப்பிட்ட நிறக் கதிர்களைப் பெற்றுக் கொள்ளுவதற்கான உணர்திறன் குறைவாக இருப்பதனால் நீல நிறமே, பார்வையில் ஆதிக்கம் செலுத்துகின்றது. அந்திநேரத்தில், அல்லது அதிகாலை வேளைகளில் சூரியன் மிகவும் தூரத்திலும், ஒரு சாய்விலும் இருப்பதனால், சிதறடிக்கப்படும் நீல ஒளி வேறு திசைக்குச் சென்றுவிடும். எனவே வானம், மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். இரவில் சூரிய ஒளி இன்மையால், வானம் இருண்ட நிறத்தில் தெரியும். இரவில் நமது பார்வையில், பிரகாசமான சூரிய ஒளியின் குறுக்கீடு இல்லாமல், சூரியனின் ஒளி விண்மீன்கள், கோள்கள், நிலா போன்றவற்றில் பட்டுத் தெறிப்பதால், நம்மால் அவற்றைப் பார்க்கக் கூடியதாக இருக்கும். ஆனால், பகலிலோ, இரவிலோ, முகில்கள் வானத்தில் இருப்பின், முகிலினால் ஏற்படும் மறைப்பினால், சூரியனையோ, ஏனைய விண்மீன்கள், கோள்கள், நிலாவையோ நம்மால் பார்க்க முடியாது.