From Wikipedia, the free encyclopedia
திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துஸ் (இலத்தீன்: Sixtus/Xystus III, இத்தாலியம்: Sesto III) கத்தோலிக்க திருச்சபையின் 44ஆம் திருத்தந்தையாக சூலை 31, 432 முதல் ஆகத்து 16, 440 வரை பணியாற்றினார்.[1]
திருத்தந்தை புனித மூன்றாம் சிக்ஸ்துஸ் | |
---|---|
44ஆம் திருத்தந்தை | |
ஆட்சி துவக்கம் | சூலை 31, 432 |
ஆட்சி முடிவு | ஆகத்து 18, 440 |
முன்னிருந்தவர் | முதலாம் செலஸ்தீன் |
பின்வந்தவர் | முதலாம் லியோ |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | சிக்ஸ்துஸ் |
இறப்பு | உரோமை, மேற்கு உரோமைப் பேரரசு | 18 ஆகத்து 440
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | மார்ச்சு 28 |
சிக்ஸ்துஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் திருச்சபையில் கொள்கை தொடர்பாகக் கடுமையான விவாதங்கள் நடைபெற்றபோது, திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துஸ் வெவ்வேறு தரப்பினரோடும் கலந்துரையாடி அமைதி கொணர உழைத்தார். இவ்வாறு, "திருத்தந்தை" (இலத்தீன்: Pontifex - ஆங்கிலம்: Pontiff - bridge builder) என்னும் தம் பெயருக்கு ஏற்ப நடந்துகாட்டினார்.
திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துஸ் பணிப்பொறுப்பை ஏற்ற வேளையில் உரோமை நகரம் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்திருந்தது. கி.பி. 410இல் உரோமைக்கு வடக்கிலிருந்து அலாரிக் (Alaric) தலைமையில் படையெடுத்துவந்த விசிகோத்து (Visigoths) இனத்தவர்கள் பெரும் சேதம் இழைத்திருந்தனர்.
உரோமைப் பேரரசிடமிருந்து பெற்ற நிதி உதவியைக் கொண்டு திருத்தந்தை செயல்படுத்திய கட்டட வேலைகள் இவை:
திருத்தந்தை சிக்ஸ்துஸ் திருச்சபையின் ஒற்றுமையைப் பாதுகாத்து வளர்த்திட உறுதியோடு உழைத்தார். 431இல் நடந்த எபேசு பொதுச்சங்கம் பதவி நீக்கிய அந்தியோக்கு மறைமுதல்வர் யோவான் என்பவரை மீண்டும் திருச்சபை ஒன்றிப்பில் கொணர்வதற்கு சிக்ஸ்துஸ் வழிவகுத்தார். அவர் யோவானிடம் கேட்டது ஒன்றே ஒன்றுதான்: அதாவது, நெஸ்டோரியுசு கைக்கொண்ட திரிபுக் கொள்கையை அவர் ஏற்றல் ஆகாது. சமயக் கொள்கைகளை விவாதிக்கும்போது எழக்கூடிய சிக்கல்களை சிக்ஸ்துசு நன்றாகவே அறிந்திருந்தார். அதாவது, திருத்தந்தைப் பணியை ஏற்பதற்கு முன் சிக்ஸ்துஸ் பெலாஜியுசு என்பவரின் திரிபுக் கொள்கைக்கு ஆதரவு அளித்திருந்தார்.[2] ஆனால் திருத்தந்தை சோசிமஸ் பெலாஜியுசின் கொள்கை தவறு என்று அறிவித்ததுமே சிக்ஸ்துஸ் திருச்சபையின் அதிகாரப்பூர்வ கொள்கையை ஏற்றுக்கொண்டார். அதற்கு புனித அகுஸ்தீனாரின் தூண்டுதலும் உதவியாயிற்று.
பண்டைய திருச்சபையில் நிலவிய இரு இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட திருத்தந்தை வழிவகுத்தார். அதாவது, இயேசுவின் இறைத்தன்மையை வலியுறுத்தி அவருடைய மனிதத்தன்மையைக் குறைத்து மதிப்பிட்டது அலெக்சாந்திரிய இயக்கம். அதற்கு நேர்மாறாக, இயேசுவின் மனிதத்தன்மையை வலியுறுத்தி அவருடைய இறைத்தன்மையைக் குறைத்து மதிப்பிட்டது அந்தியோக்கு இயக்கம். அந்த இருதரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் சற்றே விட்டுக்கொடுத்து, ஒன்றிப்பு ஆவணத்தில் 433ஆம் ஆண்டு கையெழுத்து இட்டனர்.
கீழைத் திருச்சபையில் காண்ஸ்டான்டினோப்பிளின் மறைமுதல்வராக இருந்த புரோக்குல் என்பவர், திருத்தந்தையின் ஆளுகைகு உட்பட்டிருந்த இல்லீரிக்கம் என்னும் பகுதியைத் தமது ஆட்சிப்பகுதியோடு சேர்த்துக்கொள்ள முயற்சி செய்தார். இதைத் தடுக்க விழைந்த திருத்தந்தை சிக்ஸ்துஸ் உடனேயே இல்லீரிக்கம் பகுதி ஆயர்களுக்குத் தகவல் கொடுத்து அவர்கள் புரோக்குலின் செயலுக்கு உடன்படலாகாது என்றும், மாறாக, தமது பதிலாளாக தெசலோனிக்காவில் ஆயராக இருந்தவரையே ஏற்கவேண்டும் என்று ஆணையிட்டார்.
திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துஸ் 440, ஆகத்து 18இல் இறந்தார். அவருடைய உடல் புனித இலாரன்சு கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மக்கள் அவருக்கு வணக்கம் செலுத்தத் தொடங்கினர். ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த "மறைச்சாட்சிகள் நூலில்" அவருடைய பெயர் இடம்பெற்றது.
திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துசின் திருவிழா மார்ச்சு 28ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.