முதலாம் பராந்தக சோழன்
சோழ மன்னர் / From Wikipedia, the free encyclopedia
மதுரையும், ஈழமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன் முதலாம் பராந்தக சோழன் (பொ.ஊ. 907-953) முதலாம் ஆதித்த சோழனின் மகனாவான். இவனுடைய இயற்பெயர் வீர நாராயணன். களப்பிரரை முறியடித்து பொ.ஊ. 575 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட பாண்டிய அரசு, இவன் காலத்தில் பொ.ஊ. 915 ஆம் ஆண்டில் முறியடிக்கப்பட்டது. அச்சமயத்தில் பாண்டிய நாட்டை ஆண்டவன் இரண்டாம் இராசசிம்ம பாண்டியன் ஆவான்.பல ஆண்டுகள் நடைபெற்ற இப்போரில், இலங்கை மன்னன் ஐந்தாம் காசியப்பன் (பொ.ஊ. 913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான். முடிவில் பராந்தகன் மதுரையைக் கைப்பற்றினான். போரின் முடிவில் பாண்டிய மன்னன் இலங்கைக்கு தப்பி ஓடினான். பாண்டியனின் அரசை கைப்பற்றியதே இவன் காலத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வாகும். தன் தந்தை கட்டத்தவறிய பல கோயில்களை இவன் முயன்று கட்டினான்.
முதலாம் பராந்தக சோழன் | |
---|---|
பரகேசரி, மதுரையும் ஈழமும் கொண்ட பரகேசரிவர்மன், வீர சோழன், இருமுடி சோழன் | |
முதலாம் பராந்தகன் காலத்திய சோழ நாடு கி.பி. 915 | |
சோழப் பேரரசு | |
ஆட்சிக்காலம் | கி.பி. 907 - 955 |
முன்னையவர் | ஆதித்த சோழன் |
பின்னையவர் | கண்டராதித்தர் |
பிறப்பு | வீர நாராயணன் கி.பி. 873 தஞ்சாவூர், சோழ நாடு தமிழ்நாடு |
இறப்பு | கி.பி.955 (82 வயதில்) திருவொற்றியூர், சோழ நாடு (தற்கால சென்னை தமிழ்நாடு, இந்தியா) |
அரசி | கோ "கிழான் அடிகள்" இரவி நீலி சோழமாதேவியார் உள்ளிட்ட 11 பேர்[1] |
குழந்தைகளின் பெயர்கள் | இராஜாதித்தர் கண்டராதித்தர் உத்தமசீலி அரிஞ்சயன் வீரமாதேவி அனுபமா. |
அரசமரபு | சோழர் |
தந்தை | ஆதித்த சோழன் |
தாய் | திரிபுவனமாதேவியார் |
மதம் | சைவ சமயம் |
தஞ்சையையும், உறையூரையும் கொண்ட சிறு பகுதியைச் சோழர்கள், பல்லவர்களின் தலைமையின் கீழ் ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த வந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின் பலம் பல மடங்கு பெருகிற்று. இந்நிலைக்கு மிக முக்கியமான காரணமாயிருந்தவன் ஒப்பற்ற வீரனும், இராஜதந்திரியுமான முதலாம் ஆதித்தனே ஆவான்.
முதலாம் ஆதித்தனுக்குப் பிறகு இவன் மகன், முதலாம் பராந்தகன் என்ற அபிசேகப் பெயருடன் அரியணையில் அமர்ந்த, சிறிது காலத்திலேயே பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். தனது மூன்றாம் ஆட்சி ஆண்டிலேயே "மதுரை கொண்ட" என்ற விருதினை இவன் பெற்றான். இவன் ஆட்சிக்கு வந்தபொழுது, சோழநாடு வடக்கில் மைசூர் பீடபூமி நீங்கலாக, தெற்கே காவிரி வரையிலான பகுதியும், மேற்குக் கடற்கரையோரமாக ஒரு பகுதியும், சென்னை, காளத்தி வரையிலும் பரவியிருந்தது. கங்க மன்னர்கள் சோழரது அதிகாரத்திற்கு உட்பட்ட நண்பராகவும், சேரமன்னன், நெருங்கிய நண்பராகவும் கருதப்பட்டனர்.
இலங்கையின் வரலாற்றுப் பதிவான மகா வமிசம் கூறும் குறிப்புகளிலிருந்து(மஹாவம்சா சி.வி. பாகம், 52, பக். 70) சோழர் - பாண்டியனிடம் நடந்த போரினை மூன்று கட்டங்களாக அறியலாம். முதல் கட்டத்தில், பராந்தகனிடம் பாண்டிய மன்னன் தோல்வியுற்றான். இரண்டாம் கட்டத்தில் பாண்டிய மன்னன், ஈழ மன்னனது உதவியைக் கோரிப் பெற்று, சோழப்படையைத் தாக்கினான். பாண்டிய ஈழத்துப்படைகள், சோழப்படையிடம் பின்வாங்கின. ஈழப்படைத்தலைவன் சோழரை வெல்ல மீண்டும் முயன்றது மூன்றாம் கட்டமாகும்.