பொ. தி. இராசன்
சென்னை மாகாணத்தின் முந்நாள் முதல்வர் / From Wikipedia, the free encyclopedia
பி. டி. ராஜன் என்றழைக்கப்பட்ட பொன்னம்பல தியாகராஜன் (1892 – 1974) சென்னை மாகாணத்தின் முந்நாள் முதல்வரும் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவருமாவார்.[1][2] ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகங்களில் சட்டம் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்ற பி. டி. ராஜன் 1920 சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 வரை சட்டமன்ற உறுப்பினராக நீடித்தார். 1932-37 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். முதல்வராக இருந்த பொபிலி அரசர் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சென்னை மாகாணத்தின் தற்காலிக முதல்வராகவும் பதவி வகித்தார். 1944 இல் பெரியார் ஈ. வே. ராமசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திராவிடர் கழகத்தில் இணைய மறுத்து விட்டார். 1944 முதல் பி. டி. ராஜனின் தலைமையில் நீதிக்கட்சி என்ற பெயரில் போட்டி நீதிக்கட்சியாக ஒரு தனிக் கட்சி செயல்பட்டு வந்தது. 1952 சட்டமன்றத் தேர்தலில் ராஜனின் தலைமையில் பதினான்கு இடங்களில் போட்டியிட்டது. இத்தேர்தலில் ராஜன் மட்டும் கம்பம் தொகுதியில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். 1957 சட்டமன்றத் தேர்தலில் உத்தமபாளையம் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்த பின் அவர் தேர்தல்களில் பங்கேற்கவில்லை. பி. டி. ராஜன் 1974 இல் மரணமடைந்தார். இவரது மகன் பி. டி. ஆர். பழனிவேல்ராஜன் பின்னாளில் தமிழக சட்டப்பேரவைத் தலைவராகவும் அமைச்சராகவும் பணியாற்றினார்.[3][4][5][6]
சர் பி. டி. ராஜன் | |
---|---|
பி. டி. ராஜன் (1934) | |
கம்பம் தொகுதிக்கான தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1952–1957 | |
ஆளுநர் | ஸ்ரீ பிரகாசா ஏ. ஜே. ஜான் அன்னபரம்பில் |
முதல்வர் | சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, காமராஜர் |
சென்னை மாகாண முதல்வர் | |
பதவியில் ஏப்ரல் 4, 1936 – ஆகஸ்டு 24, 1936 | |
ஆளுநர் | எர்ஸ்கைன் பிரபு |
முன்னையவர் | பொபிலி அரசர் |
பின்னவர் | பொபிலி அரசர் |
சென்னை மாகாண பொதுப்பணித்துறை அமைச்சர் | |
பதவியில் 1930–1937 | |
பிரதமர் | பொபிலி அரசர் |
ஆளுநர் | எர்ஸ்கைன் பிரபு |
பின்னவர் | பி. கலீஃபுல்லா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1892 உத்தமபாளையம் , தமிழ்நாடு , இந்தியா |
இறப்பு | 1974 உத்தமபாளையம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | நீதிக்கட்சி |
முன்னாள் கல்லூரி | லேய்ஸ் பள்ளி, கேம்பிரிச், ஜீசஸ் கல்லூரி, ஆக்சுபோர்டு |
தொழில் | வழக்கறிஞர் |
பி.டி. இராசனின் நினைவைப் போற்றும் வகையில் வகையில் மதுரை கோரிப்பாளையத்திலும், சென்னை கலைஞர் கருணாநிதி நகரிலும் இருக்கும் சாலைகளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.[7]