பெரிய நிக்கோபார் தீவு வளர்ச்சித் திட்டம்
From Wikipedia, the free encyclopedia
பெரிய நிக்கோபார் தீவு வளர்ச்சித் திட்டம் (Great Nicobar Development Plan), வங்காள விரிகுடாவில் அமைந்த இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளில் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு தெற்கே அமைந்த பெரிய நிக்கோபார் தீவில் உள்ள நிகோபார் மாவட்டத்தின் பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டமாகும்.[1][2] [3][1][4] நிகோபார் மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டத்திற்கு 2022ம் ஆண்டில் இந்திய அரசு ரூபாய் ₹75,000 கோடி (US$9.4 பில்லியன்) ஒதுக்கியுள்ளது.[5]
நிதி ஆயோக் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சி குழுமம்[4][1] பாதுகாப்பு முக்கியத்துவத்தையும், புவிசார் யுக்தியையும், போக்குவரத்து, வணிகம், தொழில் வளர்ச்சியையும், கடல்சார் சூழல் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்துவதையும் இத்திட்டத்தின் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.[6]இத்திட்டத்தின் கீழ் நான்கு பெரிய வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளது:
- நிகோபார் மாவட்டத்தில் உள்ள காலத்திய கடற்கரையில் ஆண்டுக்கு 14.2 மில்லியன் சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் வகையில் துறைமுகம் அமைப்பது. [1]
- நிகோபார் மாவட்டத்தில் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைத்தல்.[1]
- நிகோபார் மாவட்டத்தில் 16,610 எக்டேர் பரப்பளவில் 450 மெகா வாட் திறன் கொண்ட இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் மற்றும் சூரிய மின் ஆற்றல் நிலையங்கள் அமைத்தல்.[1]
- கடற்கரையில் இரண்டு புதிய பசுமை நகரங்கள் அமைத்தல்.[1]
இந்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தின் வல்லுநர் குழு 2022ம் ஆண்டில் இத்திட்டத்திற்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது.