புயல்
From Wikipedia, the free encyclopedia
புயல் (Storm) என்பது ஒரு பருப்பொருளின் அமைதி குலைந்த நிலையை, குறிப்பாக அப்பொருளின் மேற்பரப்பு பாதிக்கப்பட்ட நிலையைக் குறிக்கிறது. அதிலும் வலிமையாக காற்றின் ஆற்றலைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. மின்னல், இடிமழை, பனிப்பொழிவு, கனமழை, ஆலங்கட்டிமழை, பனிப்புயல், பலமான மழைக்காற்று, கடும் உறைபனி, புழுதிப்புயல், மணற்புயல், வெப்பமண்டலச் சூறாவளி, அல்லது வளிமண்டலத்தின் ஊடாக பொருட்களை தூக்கி வீசுவது, இத்யாதி போன்ற குறிப்பிடத்தக்க இடையூறுகள் மூலம் காற்று என்ற பருப்பொருளின் அமைதிக் குலைவு சுட்டிக்காட்டப்படுகிறது.
கனமழை, பனி, மின்னல், காட்டுத்தீ, வெள்ளம், சாலைகளை சிதைத்தல், சூறாவளிக் காற்று போன்ற அசாதாரணமான நிகழ்வுகள் மூலமாக புயல்களால் உயிர்களுக்கும் சொத்துகளுக்கும் தீங்கு விளைவிக்க முடியும். குறிப்பிடத்தக்க மழை மற்றும் கால அளவைக் கொண்ட புயல்கள் அவை நகரும் இடங்களில் மழையை பொழிவித்து வறட்சியைப் போக்க உதவுகின்றன. பனிச்சறுக்கு விளையாட்டு, பனிப்போக்குவரத்து போன்ற தனிச்சிறப்பு பொழுதுபோக்கு நடவடிக்கைகள் நடைபெற கடுமையான பனிப்பொழிவு அனுமதிக்கிறது. இந்த கடும்பொழிவு இல்லையெனில் இந்த சிறப்பு அம்சங்கள் நிகழ சாத்தியமில்லை. Storm என்ற ஆங்கிலச் சொல் "சத்தம், கொந்தளிப்பு என்ற பொருளைக் குறிக்கும் sturmaz என்ற ஆதி செருமானிய சொல்லிலிருந்து வந்ததாகும் [2].
உயர் காற்றழுத்த அமைப்பு சூழ்ந்திருக்கும்போது குறைந்த அழுத்த மையம் படிப்படியாக வளர்ச்சியடைந்து புயல்கள் உருவாகின்றன. எதிரெதிர் சக்திகளின் இந்த கலவையானது காற்றை உருவாக்கி, திரள் கார்முகில் போன்ற புயல் மேகங்களை உருவாக்கும். வெப்பமான நிலத்திலிருந்து வீசுகின்ற சூடான காற்றிலிருந்து குறைந்த அழுத்தத்தின் குறிப்பிட்ட ஒரு சிறிய பகுதி உருவாகலாம். இதனால் பேய்க்காற்று, சூறாவளிச் சுழல்காற்று போன்ற சிறிய இடையூறுகள் ஏற்படுகின்றன.