From Wikipedia, the free encyclopedia
நோபெல் பரிசு (Nobel Prize) அல்லது நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்டும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபெல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு.
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான பரிசு 1968 ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது.
நோபல் பரிசு தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் பல காலமாக இருந்து வருகின்றன. இவற்றில் கணிதம் நோபல் பரிசு துறையாக அறிவிக்கப்படாதது, மகாத்மா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது போன்ற முக்கியமான சர்ச்சைகளும் அடங்கும்.
ஜான் பவுல் சாட்டர் ஒரு இருப்பியல்வாத மெய்யியலாளரும், நாடகாசிரியரும், திரைக்கதை எழுத்தாளரும், அரசியலாளரும், இலக்கியத் திறனாய்வாளரும் ஆவார். 1964 ஆம் ஆண்டில் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ள இவர் மறுத்துவிட்டார். ஜான் பவுல் சார்ட்டர் என்று கையெழுத்து இடுவதும், ஜான் பவுல் சார்ட்டர் - (நோபல் பரிசு வெற்றியாளர்) என்று கையொப்பமிடுவதும் ஒன்றல்ல. ஒரு எழுத்தாளர் தான் ஒரு நிறுவனமாக மாற்றப்படுவதை அனுமதிக்கக்கூடாது என்று கூறி தனக்கு வழஙகப்பட்ட பரிசை பெற மறுத்துவிட்டார்.
கார்ல் வான் ஒஸீட்ஸ்கி பகிரங்கமாக ஹிட்லர் மற்றும் நாசிசத்தை எதிர்த்த ஒரு ஜெர்மன் எழுத்தாளர் ஆவார். இவருக்கு 1935 ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதி பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் இதனை தொடர்ந்து ஹிட்லர் வெளியிட்ட ஒரு ஆணை ஜெர்மன் பிரஜைகள் நோபல் பரிசு பெறுவதை தடை செய்தது. எனவெ கார்ல் வான் ஒஸீட்ஸ்கி தமக்கு வழங்கப்பட்ட நோபெல் பரிசை பெறமுடியவில்லை. இதே காரணத்தால் ஜெர்மனி சேர்ந்த ரிச்சர்ட் கூன் (1938), ஜெர்ஹார்ட் டொமாக் (1939) மற்றும் அடோல்ப் புடேனன்ட் (1939) ஆகியோரும் தமக்கு வழங்கப்பட்ட நோபெல் பரிசை பெற இயலவில்லை. இவர்கள் மூவரும் முறையே வேதியியல், மருத்துவம் மற்றும் வேதியியல் ஆகிய துறைகளில் பரிசு அறிவிக்கிப்பட்டவர்கள். பின்னாளில் இவர்களுக்கு அவர்களின் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால் பரிசுத் தொகை வழங்கப்படவில்லை.
சீன எழுத்தாளர், அரசியல் விமர்சகர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் லியூ சியாபோவிற்கு 2010 ஆம் ஆண்டிற்கான நோபெல் அமைதி விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசின் அதிகாரத்தைச் சீர்குலைக்க மற்றவர்களைத் தூண்டினார் என்று குற்றஞ்சாட்டில் சீன அரசால் கைது செய்யப்பட்டு 2009 ஆம் அண்டிலிருன்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் இவர் இந்த பரிசை பெற அனுமதிக்கப் படவில்லை. எனவே அந்த ஆண்டு பரிசளிப்புவிழாவில் இவரது புகைப்படம் வைக்கப்பட்ட நாற்காலிக்குப் பரிசு அளிக்கப்பட்டது.
நோபெல் பரிசுக்குழு அறிவித்த பரிசை பெற அனுமதி மறுக்கப்பட்டவர்கள் மற்றும் பெறாமல் நிராகரித்தவர்கள் பட்டியலில் இன்னும் சிலரும் அடங்குவர்.
ஆண்டுதோறும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டாலும் அஹிம்சை, சத்யாகிரகம் போன்ற அமைதி கருத்துகளுக்காக அறியப்படும் மகாத்மா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை. 1937 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை காந்தியின் பெயர் ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டது. ஆனாலும் அப்போதைய விருது தேர்வுக் குழுவினரால் காந்தியின் பெயர் நிராகரிக்கப்பட்டது. ஆனால் சில ஆண்டுகள் கழித்து காந்தியின் பெயர் நிராகரிக்கப்பட்டதற்கு தேர்வுக்குழுவினர் சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. நோபல் பரிசின் 106 ஆண்டு கால வரலாற்றில் மிக பெரிய விடுபடல் மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கொடுக்காததாகத்தான் இருக்கும் இதில் சந்தேகம் இருக்க முடியாது. "காந்தி அமைதிக்கான நோபல் பரிசு இல்லாமலே செயலாற்ற முடிந்தது. ஆனால் நோபல் பரிசு காந்தி இல்லாமல் முழுமை அடையுமா என்பது கேள்விதான்" என்று 2006 ல் நார்வே நோபல் கமிட்டி செயலாளர் கெயர் லுண்டஸ்தாடு குறிப்பிட்டுள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.