From Wikipedia, the free encyclopedia
சைலன்ஸ் (silence) 1966ம் ஆண்டு ஜப்பானிய எழுத்தாளர் ஷுசாக்கு என்டோ எழுதிய சரித்திரப் புனைவான சின்மோக்கு எனும் நூலைத் தழுவி 2016ம் ஆண்டில் இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செசி, ஜே கொக்ஸ் உடன் இணைந்து திரைக்கதை எழுதி, இயக்கியத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் கதை ஜப்பானிய நகரமான நாகசாகியில் நடந்தாலும் படப்பிடிப்பின் பெரும்பகுதி தாய்வானின் ஹுவாலியன் கவுன்ட்டி எனுமிடத்திலும் ஏனைய பகுதிகள் தாய்வானின் தைபே, தைச்சுங் ஆகிய இடங்களிலுள்ள படப்பிடிப்பு அரங்குகளிலும் படம்பிடிக்கப்பட்டது.[15] அன்றூ கார்பீல்ட், ஆடம் டிரைவர் , லியம் நீசன், தடனோபு அசானோ, சியேரன் ஹின்ட்ஸ் ஆகியோரின் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தின் கதை 17ம் நூற்றாண்டில் இயேசு சபையைச் சார்ந்த இரு மத குருக்கள் காணாமல் போன தங்கள் ஆசானைத் தேடி போர்த்துக்கல்லில் இருந்து மக்காவு வழியாக ஜப்பானுக்கு செல்வதாக அமைந்துள்ளது. இத்திரைப்படம் 1637க்கும் 1638க்குமிடையே ஜப்பானில் டோக்குகவா ஷோகனேட் அரசுக்கு எதிரான கிறிஸ்த்தவ விவசாயிகளின் கலவரத்திற்கு பின் நிகழ்ந்த கிறிஸ்த்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நிகழ்ந்த காலகட்டத்தை களமாகக் கொண்டுள்ளது.
சைலன்ஸ் | |
---|---|
வெளியீட்டுச் சுவரொட்டி | |
இயக்கம் | மார்ட்டின் ஸ்கோர்செசி |
மூலக்கதை | சைலன்ஸ் படைத்தவர் ஷுசாக்கு என்டோ |
திரைக்கதை |
|
இசை |
|
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ரொட்ரிகோ பிரீட்டோ |
படத்தொகுப்பு | தெல்மா ஷூன்மேக்கர் |
விநியோகம் | |
வெளியீடு | நவம்பர் 29, 2016 (Pontifical Oriental Institute) திசம்பர் 23, 2016 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 161 நிமிடங்கள்[7] |
நாடு |
|
மொழி |
|
ஆக்கச்செலவு | 40–50 மில்லியன் டாலர்[11][12][13] |
மொத்த வருவாய் | $23.7 மில்லியன்[14] |
இரண்டு தசாப்தங்களாக இத் திரைப்படத்தின் ஆரம்ப கட்டத் தயாரிப்பு வேலைகள் மீண்டும் மீண்டும் பல தடைகளுக்கு உள்ளாகி தொடங்கப்பட்டது. வுல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்ததன் பின் இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செசி ஏப்ரல் 19, 2013ல் சைலன்ஸ் திரைப்படத்தின் தொடக்க வேலைகள் 2014ல் ஆரம்பமாகும் என அறிவித்தார். அதன் பின் தயாரிப்பாளர்களாக எர்வின் வின்க்லர், ரண்டால் எம்மெட், ஜோர்ஜ் பர்லா ஆகியோர் அறிவிக்கப்பட்டு தாய்வானில் படப்பிடிப்பு நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மார்ட்டின் ஸ்கோர்செசியின் 25 வருடகால கனவு படைப்பான சைலன்ஸ் நவம்பர் 29, 2016 அன்று உரோமில் திரையிடப்பட்டதன் பின் டிசெம்பர் 23, 2016ல் ஐக்கிய அமெரிக்காவில் வெளியாகியது. வசூல் ரீதியாக இத்திரைப்படம் தோல்வியைத் தழுவினாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அமெரிக்க தேசிய விமர்சன குழு மற்றும் அமெரிக்க திரைப்பட நிறுவனம் 2016ன் மிகச் சிறந்த பத்து படங்களில் ஒன்றாக இத்திரைப்படத்தை பட்டியலிட்டன. அத்தோடு 89வது அகாதமி விருதில் சிறந்த ஒளிப்பதிவுக்காக பரிந்துரையும் செய்யப்பட்டது.
சமயம் தொடர்பாக மார்ட்டின் ஸ்கோர்செசி இயக்கியத் திரைப்படங்களுள் இது மூன்றாவது திரைப்படமாகும். குண்டுன் மற்றும் த லாஸ்ட் டெம்ப்டேஷன் ஒப் கிரைஸ்ட் ஆகியவை ஏனைய இரு திரைப்படங்களாகும்.
இயேசு சபை மதகுரு கிரிஸ்ட்டோவா பெரிராவின் குரலில் ஆரம்ப காட்சி விரிகிறது. ஜப்பானிய அதிகாரிகள் ஐந்து கிறிஸ்த்தவ மத போதகர்களை சித்திரவதைக்கு உட்படுத்துவதை மதகுரு பெரிரா கண்டார்.
சில வருடங்கள் கழித்து மக்காவு புனிதர் பால் கல்லூரியில் ஆசிரியராக இருக்கும் இத்தாலிய இயேசு சபை மத குரு அலெக்சான்றோ வலிங்னோவுக்கு ஜப்பானிலிருந்த மதகுரு பெரிரா கிறிஸ்த்துவத்தை கைவிட்டு விட்டார் எனும் செய்தி வந்தது. இதை மறுதலித்த வலிங்னோவின் போர்த்துக்கேய மாணவர்கள் செபாஸ்டியானோ ரொட்ரிகஸ், மற்றும் பிரான்சிஸ்கோ கருபே நடந்த உண்மையை அறியும் பொருட்டு ஜப்பானுக்கு செல்ல ஆயத்தமானார்கள். ஜப்பானிலிருந்து மக்காவுவுக்கு தப்பி வந்த ஜப்பானிய மீனவன் கிச்சிஜிரோ இவர்களுக்கு உதவுவதாக வாக்களித்தான்.
ஜப்பானிலுள்ள தொமோகி எனும் ஊரிலுள்ள ஒரு கிராமத்தை வந்தடைந்த மத குருக்களிருவரும் அங்கு கிறிஸ்த்தவர்கள் படும் பாட்டைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். அக்கிராமத்திலுள்ள கிறிஸ்த்தவர்கள் அடக்குமுறைக்கு பயந்து மறைந்து வாழ்ந்தார்கள். நீதி விசாரணை அதிகாரி என உள்ளூர் மக்களால் குறிப்பிடப்படும் சாமுராய் ஒருவன் தனது ஆட்களுடன் அக்கிராமத்திலுள்ள நான்கு கிறிஸ்த்தவர்களைக் கண்டுபிடித்து அவர்களை இயேசுவை மறுதளிக்க நிர்பந்தப் படுத்தினான். அவர்களில் மூவர் அதற்கு இணங்க மறுக்கவே அவர்களைக் கொன்று எரித்தான். மதகுருக்கள் இருவரும் தங்களால் தான் ஷோகனேட் அதிகாரிகள் அம்மக்களைத் துன்புறுத்துகிறார்கள் என்றெண்ணி இருவரும் தனித்தனியாக வேறு இடங்களுக்கு செல்வதென முடிவெடுத்தார்கள்.கருபே ஹிராடோத் தீவுக்கும் ரொட்ரிகஸ் தங்கள் ஆசான் பெரிரா கடைசியாக வாழ்ந்த இடமான கோடோத் தீவுக்கும் செல்வதென தீர்மானித்தார்கள். அத்தீவில் மீனவன் கிச்சிஜிரோவை மீண்டும் சந்தித்த ரொட்ரிகஸ் அவனால் ஏமாற்றப்பட்டு சாமுராய்களிடம் பிடித்துக் கொடுக்கப்பட்டார். ஒரு முதிய சாமுராய் ஒருவர் ரொட்ரிகசிடம் கிறிஸ்த்தவம் ஜப்பானில் வெறுக்கப்படுவதாகவும், கிறிஸ்த்தவத்தை விட்டு வெளியேறுமாறும் அல்லாவிடில் சிறைப் பிடிக்கப்பட்ட ஏனைய கிறிஸ்த்தவர்கள் சித்திரவதைக்கு ஆளாவார்கள் எனவும் அச்சுறுத்தினார்.
ரொட்ரிகஸ் நாகசாகிக்கு அனுப்பபட்டு ஏனைய ஜப்பானிய கிறிஸ்த்தவர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு கிச்சிஜிரோவும் சிறையில் அடைப்பட்டிருப்பதைக் கண்டார். ரொட்ரிகசைக் கண்ட கிச்சிஜிரோ தான் ரொட்ரிகசை ஏமாற்ற நிர்பந்திக்கப்படதாகவும் தான் இன்னும் கிறிஸ்த்துவின் விசுவாசியாக இருப்பதாகவும் தனக்கு பாவ மன்னிப்பு வழங்க வேண்டுமெனவும் மதகுரு ரொட்ரிகசிடம் தெரிவித்தான். ரொடெரிகஸ் கிச்சிஜிரோவுக்கு பாவ மன்னிப்பு வழங்கிய சில தினங்களின் பின் அவன் நியாய சபைக்கு அழைக்கப்பட்டு கிறிஸ்த்துவை மறுதளிக்கும் வகையில் கிறிஸ்த்துவின் உருவம் பொறித்த மிதிபலகையில் கால் வைக்குமாறு நிர்பந்தப்படுத்தப்பட்டான். கட்டளையை நிறைவேற்றிய கிச்சிஜிரோ சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டான். அதன் பின் சிறையிலிருந்த ரொட்ரிகஸ் பாதுகாப்புடன் கடற்கரையோரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒருவரின் வரவுக்காக காக்க வைக்கப்பட்டார். சில நிமிடங்களின் பின் கடற்கரையோரத்தின் சிறிது தூரத்தில் விவசாயிகளின் குழுவொன்றை அதிகாரிகள் இழுத்து வருவதையும் அவர்களுள் தனது சக மதகுரு கருபேவும் இருப்பதையும் ரொட்ரிகஸ் கவனித்தார். கிறிஸ்த்தவ விசுவாசத்தைக் கைவிடுமாறு கருபேயிடம் கட்டளையிட்ட அதிகாரிகள் அவ்வாறு கைவிடாவிடில் விவசாயிகள் கொல்லப்படுவரெனவும் மிரட்டினர். எனினும் கருபேயின் மௌனத்தை தாங்க முடியாத அதிகாரிகள் விவசாயிகள் நால்வரை கைகளைக் கட்டி கடலில் மூழ்கடித்தனர். அவர்களில் ஒருவரை காப்பாற்றும் முயறசியில் மதகுரு கருபேவும் இறந்தார். இவையனைத்தையும் அதிகாரிகளினால் காவல் காக்கப்பட்ட ரொட்ரிகஸ் கையறு நிலையில் பார்த்துக் கொண்டிருந்தார்.
சிறைப்பட்டு சில நாட்கள் கழித்து ரொட்ரிகஸ் பெரிராவை சந்தித்தார். பெரிரா அவரிடம் ஜப்பானிய அதிகாரிகளின் சித்திரவதையினால் தான் கிறிஸ்த்துவின் மேலிருந்த நம்பிக்கையைக் கைவிட்டு விட்டதாகவும் 15 வருடங்கள் ஜப்பானில் இருந்த அனுபவத்தில் ஜப்பானுக்கு கிறிஸ்த்தவம் தேவையில்லை எனும் முடிவுக்கு வந்ததாகவும் தெரிவுத்தார். அன்றிரவு ரொட்ரிகஸ் ஐந்து கிறிஸ்த்தவர்கள் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு ஜப்பானிய அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்படுவதைக் கண்டார். அங்கு வந்த பெரிரா ரொட்ரிகசிடம் அந்த ஐவரும் கிறிஸ்த்தவத்தைக் கைவிட்டு விட்டதாகவும், ரொட்ரிகஸ் கிறிஸ்த்தவத்தைக் கைவிட்டு விட்டால் அவர்களை ஜப்பானிய அதிகாரிகள் விடுவிப்பார்கள் எனவும் கூறினார். கிறிஸ்த்துவின் உருவம் பொறித்த மிதிபலகையை வைத்து அதில் காலை ஊன்றுமாறு கட்டளையிடப்பட்ட ரொட்ரிகஸ் முதலில் தயங்கினாலும் தனக்குள் கேட்ட கிறிஸ்த்துவின் அனுமதியின் பேரில் மிதிபலகை மீது கால் வைத்தார்.
சில வருடங்கள் கழித்து ஜப்பானில் புத்த மதத்தைத் தழுவியிருந்த ரொட்ரிகசிடம் கிச்சிஜிரோ மீண்டும் வெளிப்பட்டு தனக்கு பாவமன்னிப்பு வழங்குமாறு மன்றாடினான். தான் கிறிஸ்த்தவ மதகுரு அல்ல என்ற ரொட்ரிகசிடம் ஆழ்மனதில் 'நான் ஒருபோதும் அமைதியாக இருக்கவில்லை' என இயேசுவின் குரல் கேட்டது.
அதன்பின் பல வருடங்கள் ஜப்பானில் கிறிஸ்த்தவ நாட்டமேயில்லாமல் வாழ்ந்த ரொட்ரிகஸ் முதிய வயதில் இறந்தார். அவரின் உடலை பௌத்த மத முறைப்படி தகனம் செய்தனர். சிதையில் எரிந்து கொண்டிருந்த ரொட்ரிகஸ் சிலுவையைக் கையில் வைத்திருக்கும் காட்சியோடு படம் முடிவுறுகிறது.
அகிரா குரொசாவாவின் ட்ரீம்ஸ் திரைப்படத்திலெ நடிப்பதற்காக ஜப்பானுக்கு சென்றிருந்த போது அங்கு ஷுசாக்கோ என்டோவின் புதினத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக மார்ட்டின் ஸ்கோர்செசி அமெரிக்கா மெகசின் எனும் சஞ்சிகைக்குக் கொடுத்த செவ்வியில் குறிப்பிட்டார்.[27] அதன் பின் மிக விரைவில் அந்நூலுக்கான திரைப்பட உரிமையைப் பெற்றுக் கொண்டார்.[28]
மார்ட்டின் ஸ்கோர்செசி தனது உணர்வுபூர்வ படைப்பாகக் குறிப்பிடும் சைலன்ஸ் திரைப்படம் 1990ம் ஆண்டு முதல் தயாரிப்பிலிருந்தது.[29] இத்திரைப்படத்தை இயக்கும் ஆர்வம் 26 வருடங்களாகக் குறையாமல் இருந்தது எவ்வாறு எனக் கேட்டதற்கு ஸ்கோர்செசி இவ்வாறு பதிலளித்தார்,
வயது செல்ல செல்ல மனிதர்களுக்குள் சில எண்ணங்கள் வந்து செல்லும். சில கேள்விகள் எழும்; சில விடைகளும் எழும். பின் விடைகள் மறைய மேலும் பல புதிய கேள்விகள் எழும். குடும்பம், நண்பர்கள் முக்கியமென்றாலும் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் ஒரு நிறைவு வேண்டும். சைலன்ஸ் அவ்வாறானதொரு நிறைவு. என்னுள் எழுந்த பல கேள்விகளுக்கு அது பதிலளித்தது.
2009ம் ஆண்டு ஸ்கோர்செசி சைலன்ஸ் படத் தயாரிப்புக் குழுவினருடன் கதை நடக்கும் இடமான ஜப்பானின் நாகசாகி நகருக்கு படப்பிடிப்புத் தளங்களை ஆராயச் சென்றார்.[30] கனடாவில் மேலதிக இடங்கள் திரைப்படத்துக்காக ஆராயப்பட்டது.[31] அதன்பின் திரைப்படத்தின் தயாரிப்பு வேலைகள் தடைபடவே ஸ்கோர்செசி புதிய படங்களான ஷட்டர் ஐலண்ட் மற்றும் ஹியூகோ படங்களை இயக்கும் பணியில் நுழைந்தார். 2011 டிசம்பரில் ஸ்கோர்செசி தான் அடுத்து இயக்கவிருப்பது சைலன்ஸ் திரைப்படம் என அறிவித்தார்.[32] மார்ச் மாதத்தில் சைலன்ஸ் திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கும் வேளையிலேயே வுல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட் திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமானார்.[33] ஸ்கோர்செசியின் செய்தித் தொடர்பாளர் இரு படங்களில் சைலன்ஸ் முதலில் வெளியாகுமென அறிவித்தார்.[34] மேமாதம் தயாரிப்பு நிறுவனங்களுடனான சட்டச் சிக்கல்களால் சைலன்ஸ் திரைப்படம் தாமதத்திற்கு உள்ளாகியது.[35]
த வுல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட் திரைப்படத்தை 2013ல் இயக்கி முடித்த உடனே ஸ்கோர்செசி சைலன்ஸ் திரைப்படத்தின் வேலைகளை மீண்டும் ஆரம்பித்தார்.[28] ஏப்ரல் 19, 2013 அன்று 2014ல் படத் தயாரிப்பு வேலைகள் தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியானதுடன் அன்றே திரைப்படத்தின் தயாரிப்பாளர்களாக எர்வின் வின்க்லர், ரண்டால் எம்மெட், ஜோர்ஜ் ஃபர்லா ஆகியோர் பெயரிடப்பட்டதோடு கோர்சன் பிலிம்ஸ் நிறுவனம் திரைப்படத்திற்கான நிதியை வழங்கும் எனவும் அறிவித்தல் வெளியானது. அத்துடன் படப்பிடிப்பு தாய்வானில் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டது.[36][37]
தயாரிப்பாளர் எர்வின் வின்க்லர் இது சரித்திர திரைப்படம் ஆகையால் ஆக்கச் செலவை குறைக்க வேண்டும் என்பதற்காகவே தாய்வானில் படப்பிடிப்புகளை நடத்தியதாக குறிப்பிடுகிறார். மேலும் குறைந்தளவு நிதியே ஒதுக்கப்பட்டதால் லையாம் நீசன், அடம் டிரைவர் போன்ற நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியத்தை விட குறைந்தளவு ஊதியத்தையே பெற்றார்கள்.[38] நியூயார்க் இயேசு சபை உறுப்பினரான ஜேம்ஸ் மார்ட்டின் மதகுருவாக நடித்த நடிகர்களுக்கு உதவியாக இருந்தார்.[39]
இத் திரைப்படம் சின்மோக்கு புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இரண்டாவது திரைப்படமாகும். 1971ம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த ஜப்பானியத் திரைப்படமே முதலாவதாகும். 1991ல் ஆரம்பித்த திரைக்கதை எழுதும் பணி 15 வருடங்களாக மீண்டும் மீண்டும் திருத்தி எழுதப்பட்டது.[28] பின்னர் ஜப்பானிய எழுத்தாளர் என்டோவின் எட்டு புதினங்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த வான் சி. கெஸ்ஸெல் இத்திரைப்படத்தின் எழுத்து பணிகளுக்கு உதவினார்.[40] விமர்சகர்கள் இத்திரைக்கதை மூல நாவலைத் துல்லியமாக பிரதிபலித்துள்ளது என பாராட்டினார்கள்.[41] திரைப்படத்தின் இறுதியில் முதிய மதகுரு கையில் ஒரு சிலுவை வைத்திருப்பதைப் போன்ற காட்சி மூல நூலில் இல்லையெனவும் இது ஸ்கோர்செசியின் மேலதிக சேர்ப்பு எனவும் வரலாற்றாசிரியர் ஹருகோ நவாட்டா கூறுகிறார்.[42]
2009ம் ஆண்டின் ஆரம்பத்தில் இத்திரைப்படத்தில் நடிக்க டேனியல் டே லூயிஸ், பெனிசியோ டெல் டோரோ, கேல் கார்ஸியா பேனல் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்தது.[31] எனினும் 2011ல் இவர்கள் இத்திரைப்படத்திலிருந்து விலகினர்.[28][43] அதே வருடம் மே மாதம் அன்றூ கார்பீல்ட் மற்றும் கென் வாட்டனபே இத்திரைப்படத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர். எனினும் கென் வாட்டனபே படப்பிடிப்புக்கு ஒதுக்கிய நாட்களில் சிக்கல்கள் ஏற்பட்டதால் அவரின் வேடத்திற்கு டடனோபு அசானோ தெரிவு செய்யப்பட்டார்.[44][45][46] 2014 ஜனவரி லையாம் நீசன் பெரிரா பாத்திரத்திற்கும் அடம் டிரைவர் இயேசு சபை ஊழியர் வேடத்திற்கும் தெரிவு செய்யப்பட்டனர்.[47][48]
2012 ஜனவரியில் ஸ்கோர்செசி இத்திரைப்படத்தை முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில் இயக்க எண்ணம் கொண்டார்.எனினும் பின்னர் இம்முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டது.[49] 2014 பெப்ரவரியில் ஸ்கோர்செசி தாய்வானில் படப்பிடிப்பிடங்களைத் தேர்வு செய்து,[50] மே,ஜூன் மாதங்களில் படப்பிடிப்பு நடத்தலாமென முடிவு செய்தார். என்றாலும் இறுதியில் 2015ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே படப்பிடிப்பு ஆரம்பமானது.[51] ஆரம்பகட்ட நிழற்படப்பிடிப்பு 2015ம் ஆண்டு ஜனவரி 30க்கும் மேமாதம் 15க்குமிடையில் தாய்வானில் இடம்பெற்றது.[37][52]
இத்திரைப்படத்திற்கு கிம் அலன் குளூஜ் இசை வழங்கியிருந்தார். 51 நிமிடங்கள் நீளமான 25 இசைக் கோர்வையொன்று 2017 பெப்ரவரி 2017ல் ரைனோ வார்னர் கிளாசிக் நிறுவனம் வெளியிட்டது.[53]
2013 கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளச் சென்ற ஸ்கோர்செசி அங்கு சில விநியோகஸ்த்தர்களை சந்தித்து கலந்துரையாடினார்.[54] 2014 ஜூலை மாதத்தில் பரமவுன்ட் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை அமெரிக்காவில் விநியோகிப்பதற்கான உரிமையை கைப்பற்றியது.[55] தயாரிப்பாளர்களில் ஒருவரான வின்க்லர் 2016 மார்ச் மாதம் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் திரைப்படம் படத்தொகுப்பு வேலைகளில் இருப்பதாகவும் 2016ன் இறுதியில் திரைப்படம் வெளியாகுமென உறுதிப்படுத்தினார். 2016 ஆகஸ்ட்டில் இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செசி வெளியீடு பற்றிக் குறிப்பிடும் போது, திரைப்படப் பணிகள் அக்டோபர் மாதத்தில் நிறைவுறுமெனவும் வெளியீடை பரமவுன்ட் பிக்சர் நிறுவனம் தீர்மானிக்கும் எனவும் குறிப்பிட்டார்.[56][57] பரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தின் முதல் முன்னோட்டக் காணொளியை 2016 நவம்பரில் வெளியிட்டது.[58]
முதல் காட்சி உரோமிலுள்ள பொன்டிஃபிக்கல் ஒரியென்டல் இன்ஸ்ட்டிட்டியூட்டில் 2016 நவம்பரில் திரையிடப்பட்டது. அதன் பின் அடுத்த நாள் சிறப்புக் காட்சியாக வத்திக்கான் நகரத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.[59][60] 2017 அகாதமி விருதில் இடம்பெறுவதற்காக இத்திரைப்படம் டிசம்பர் 23 2016 அன்று குறைந்தளவு திரையரங்கில் வெளியாகி ,[61] பின் 2017 ஜனவரி 20ல் 1580 திரையரங்குகளுக்கு விரிவடைந்தது.[62][63][64]
இத்திரைப்படம் 2017 மார்ச் 14 அன்று இணையதளத்திலும் மார்ச் 28 இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு மற்றும் நீலக்கதிர் வட்டு ஆகியவற்றில் வெளியாகியது.[65]
40-50 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் எடுக்கப்பட்ட சைலன்ஸ் அமெரிக்கா மற்றும் கனடாவில் 7.1 மில்லியன் டாலரும் ஏனைய இடங்களில் 16.6 மில்லியன் டாலரையும் மொத்தமாக 23.7 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்தது.
ரோட்டன் டொமோட்டோஸ் இணையதளம் இத்திரைப்படத்திற்கு கிடைத்த 240 விமர்சனங்களின் அடிப்படையில் 84% மதிப்பெண்கள் வழங்கியது.[66] மெட்டகிரிட்டிக் இணையதளம் 79 மதிப்பெண்களும்[67] சினிமாஸ்கோர் இணைய தளம் நேயர்களிடம் பெற்ற கருத்துகணிப்பின் படி "A" தரத்தையும் பெற்றது.[68]
சைலன்ஸ் பல திரை விமர்சகர்களின் தரப்படுத்தல் பட்டியலில் இடம் பெற்றது.[69]
89வது அகாதமி விருதுகளில் சிறந்த ஒளிப்பதிவுக்கான படங்களின் பட்டியலில் இத்திரைப்படம் இடம்பெற்றது. அமெரிக்க திரை நிறுவனம் இத்திரைப்படத்தை 2016ன் சிறந்த படங்களில் ஒன்றாகத் தெரிவு செய்தது.[70]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.