சென்னப்பட்ணா பொம்மைகள்
From Wikipedia, the free encyclopedia
சென்னபட்ணா பொம்மைகள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் ராமநகரா மாவட்டத்தில் உள்ள சென்னப்பட்ணா என்ற நகரில் தயாரிக்கப்படும் மர பொம்மைகள் ஆகும். இப்பொம்மைகளின் தனித்துவமிக்க குறிப்பிட்ட வடிவங்களுக்காக மிகவும் புகழ்பெற்றவை. இந்த பாரம்பரிய மிக்க கைவினைக் கலையானது கர்நாடக அரசால் நிர்வகிக்கப்படும் உலக வர்த்தக அமைப்பின் கீழ் புவியியல் அடையாளமாகப் (ஜிஐ) பாதுகாக்கப்படுகிறது. இந்த பொம்மைகளின் புகழ் காரணமாக இந்த சென்னப்பட்ணா நகரம் 'பொம்பேகல ஊுரு அதாவது ‘பொம்மைகளின் நகரம்' என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரியமாக, ரைட்டியா டின்க்டோரியா எனப்படும் வெப்பாலை மரத்தினைக் கொண்டு பொம்மைகள் செய்து அதற்கு அரக்குப்பூச்சு பூசுவது இப்பொம்மைகளின் தனிப்பட்ட சிறப்பாகும். [1] இம்மரம் பேச்சுவழக்கில் ஆலே மரா (தந்தம்-மரம்) என்று அழைக்கப்படுகிறது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a0/Channapatna-toys.jpg/640px-Channapatna-toys.jpg)
திப்பு சுல்தான் தனது ஆட்சி காலத்தில் மர பொம்மைகளை தயாரிப்பதில் உள்ளூர் கைவினைஞர்களுக்கு பயிற்சி அளிக்க பெர்சியாவிலிருந்து கைவினைஞர்களை வரவழைத்தார். இவரது ஆட்சியில்தான் இந்த பொம்மைகள் உருப்பெற்றதாகக் கருதப்படுகிறது. பாவாஸ் மியான் என்பவர் இந்த சென்னபட்ணா பொம்மைகளின் தந்தை எனப்படுகிறார். சென்னப்பட்ணா பொம்மைகளுக்காகத் தனது வாழ்க்கையை தியாகம் செய்தவர் அவர். பொம்மைகளைத் தயாரிப்பதற்காக சப்பானிய தொழில்நுட்பத்தை அவர் ஏற்றுக்கொண்டார். மேலும் உள்ளூர் கைவினைஞர்களுக்கு அவர்களின் கலையை மேம்படுத்த உதவினார். [2] ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளாக, இந்த பொம்மைகளைத் தயாரிப்பதில் வெப்பாலை மரமே முதன்மை மரமாக இருந்தது, இருப்பினும் ரோஸ்வுட் மற்றும் சந்தனம் மரங்களும் அவ்வப்போது பயன்படுத்தப்படுகின்றன