சீக்கியம்
குருநானக் உருவாக்கிய மதம் / From Wikipedia, the free encyclopedia
சீக்கியம் (ਸਿੱਖੀ, Sikhism) அல்லது சீக் (சீக்கியர், என்ற சொலுக்கு "சீடர்", அல்லது "கற்பவர்" என்று பொருள்படும்[1][2]) என்பது இந்தியத் துணைக் கண்டத்தின் பஞ்சாப் பகுதியில் பொ.ஊ. 15 ஆம் நூற்றாண்டின் முடிவில் தோன்றிய தர்ம சமயமாகும்.[3][4] உலகில் உள்ள முதன்மை சமயங்களில் இளைய சமயங்களில் இதுவும் ஒன்றாகும். சீக்கிய சமயத்தின் அடிப்படையான நம்பிக்கைகள், குரு கிரந்த் சாஹிப் நூலில் உள்ளன, மனிதகுலத்தின் ஒற்றுமை, தன்னலமற்ற சேவையில் ஈடுபடுவது, அனைவரின் நலனுக்கும் சமூக நீதிக்காக போராடுவது, மற்றும் நேர்மையான நடத்தை ஆகியவற்றை பொதுவாக வலியுறுத்துகிறது.[5][6][7] இது ஓரிறைக் கொள்கையை உடைய சமயமாக பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த குரு நானக் அவர்களால் 15ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட சமயமாகும்.[8] இச்சமயம் குரு நானக்கிற்குப் பிறகு தோன்றிய பத்து சீக்கிய குருக்களாலும் முன்னேற்றப்பட்டது. இது சுமார் 30 மில்லியன் சீக்கியர்களைக் கொண்டு உலகின் ஐந்தாவது பெரிய சமயமாக உள்ளது.[9][10] முதல் நான்கு மதங்களாக முறையே கிறித்தவம், இசுலாம், இந்து, பௌத்தம் போன்ற மதங்கள் இருக்கின்றன.
சீக்கிய சமயம் சிம்ரனை (குரு கிரந்த சாகிப்பின் வார்த்தைகளில் தியானம்) வலியுறுத்துகிறது, இது கீர்த்தனையோ அல்லது உள்மனதில் உச்சாடனை (கடவுளுடைய பெயரை மீண்டும் மீண்டும் சொல்லுதல்) செய்வதன் மூலம் கடவுளுடைய பிரசன்னத்தை உணரும் வழிமுறை என்கிறது, மேலும் "ஐந்து திருடர்களான" (காமம், ஆத்திரம், பேராசை, பற்று, அகந்தை) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, மதச்சார்பற்ற வாழ்க்கையை ஆன்மீக வாழ்வோடு கை கோர்த்து பிணைக்கப்பட வேண்டும் என்கிறது.[11] குரு நானக் கற்பித்தவை "செயலில், ஆக்கபூர்வமான, நடைமுறை வாழ்க்கை" அதில் "உண்மை, விசுவாசம், சுய கட்டுப்பாடு தூய்மை" மேலும் சிறந்த மனிதர் என்பவர் "கடவுளோடு ஒன்றிணைந்து, அவருடைய விருப்பத்தை அறிந்து, அதைத் தொடருவார்" என்று கூறுகிறார்.[12]