From Wikipedia, the free encyclopedia
சிஞ்சியாங் அல்லது சின்ச்சியாங் உய்கர் (Xinjiang) என்பது சீன மக்கள் குடியரசில் சீனாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஒரு தன்னாட்சிப் பகுதி ஆகும்.[1] இதுவே சீனாவின் மாகாணங்களில் பரப்பளவில் மிகப்பெரியதும் உலக நாடுகளில் பரப்பளவு அதிகம் கொண்ட நாடுகளில் எட்டாவதாகவும் உள்ளது. இதன் பரப்பளவு 16 லட்சம் சதுர கி.மீ. வீகெர் அல்லது உய்குர் இன மக்கள் பெரும்பான்மையினோராக உள்ள சின்ச்சியாங்கின் மேற்கு பகுதியும், வடக்கு பகுதியும், ரசியா, மங்கோலியா, இந்தியா, பாகிஸ்தான், கசாக்ஸ்தான், தஜிகிஸ்தான் கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகளுடன் ஒட்டியமைந்துள்ளதான் அந்நாடுகளுடன் பொதுவான எல்லைகளைக் கொண்டுள்ளது. இந்நாட்டின் எல்லை நீளம் 5400 கிலோமீட்டராகும். சீனாவில் மிக நீளமான எல்லை மற்றும், மிக அதிகமான பிற நாடுகளின் நுழைவாயில்களைக் கொண்ட பகுதி சின்ச்சியாங் ஆகும்.
மிகவும் கரடு முரடான காரகோரம், குன்லுன் மலை, தியேன் சான் மலை ஆகியன ஆசியாவின் மையப்பகுதியில் உள்ள சின்ச்சியாங்கின் வடக்கிலிருந்து தெற்கு வரையான எல்லைகளை பெருமளவில் ஆக்கிரமிக்கின்றன. இதனால் பல்வேறு நாடுகளுடனான சாலை மற்றும் தொடர்வண்டிப் போக்குவரத்து சற்று கடினமானதாக உள்ளது. ஆயினும் இதன் காரணமாகவே இப்பகுதிகளில் தனிப்பட்ட வரலாறு மற்றும் கலாச்சாரங்கள் நிலவுகின்றன. மேலும் சின்ச்சியாங் தெற்கே திபெத்துடன் நீண்ட எல்லைப் பகுதியைக் கொண்டுள்ளது. உலகின் மிகவும் வரலாற்றுப் புகழ்பெற்ற பட்டுப்பாதை இதன் கிழக்கிலிருந்து வடமேற்கு எல்லை வரை அமைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இங்கு ஏராளமான எண்ணெய் வளம் மற்றும் கனிமவளங்கள் கண்டறியப்பட்டுள்ள்ன. சீனாவின் ஆகப்பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி சின்ச்சியாங்கில் நடைபெறுகிறது.
சின்ச்சியாங் உய்கர் அல்லது வீகர் இனம், ஹான் இனம், கசக்கு இனம், தாஜிக்கு இனம், ஹூயி இனம், கிர்கிஸ் இனம், மங்கோலிய இனம் ஆகிய இனக்குழுக்களின் மூலமாக விளங்குகிறது[2]. பன்னிரண்டிற்கும் மேற்பட்ட தன்னாட்சிப் பிரதேசங்களும் சிறுபான்மையோர் மாவட்டங்களும் இங்குள்ளன. பழைய ஆங்கில மொழிக் குறிப்பொன்று இந்தப் பகுதியை சீனாவின் துருக்கிஸ்தான் என வழங்குகிறது.[3] சின்ச்சியாங்கிலுள்ள மலைத்தொடர்கள் அதனை வடக்கில் சுன்க்காரியா வடிநிலம், தெற்கே தாரிம் வடிநிலம் என இரண்டாகப் பிரிக்கின்றன. சின்ச்சியாங்கில் 4.3 விழுக்காடு பகுதியே மக்கள் குடியேற்றத்திற்கு உகந்ததாக உள்ளது.[4] சீனாவின் 2,500 ஆண்டுகால வரலாற்றுப் பதிவுகளின் படி இப்பகுதி பல்வேறு அரசர்களால் ஆளப்பட்டும் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருந்து வந்துள்ளது. இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இப்பகுதி முழுதும் அல்லது இதன் ஒருசில பகுதிகள் பிற மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளன. 1949 இலிருந்து சின்ச்சியாங் சீன மக்கள்குடியரசின் பகுதியாக உள்ளது.
கி. மு. 60 களில் இப்பகுதி ஹான் அரச மரபின் கீழ் இருந்தது. முன்பு இப்பகுதி சியு அல்லது சுரின்க்கர் என்றே அறியப்பட்டது. இதன் பொருள் மேற்குப் பிராந்தியம் என்பதாகும். இலாபம் தரும் பட்டுப்பாதையைக் காப்பதற்காக இப்பகுதியும் கண்கானிப்புடன் காத்தல் இன்றியமைததாக இருந்தது. .[5] சிங் அரச மரபில் ஹியூசியாங் என்றழைக்கப்பட்ட சுருங்கர் பிராந்தியம் மற்றும் தாரிம் வடிநிலம் ஆகிய இரண்டும் சேர்ந்த பகுதி ஒன்றிணைக்கப்பட்டு1880 இல் சிஞ்சியாங் பிராந்தியம் உருவாக்கப்பட்டது. இதன் பொருள் புதிய எல்லை என்பதாகும். சீன அறிஞர் சுவோ சோங்டாங் (Zuo Zongtang) என்பவர் இதனைப்பற்றி சிங் அரசருக்கு அனுப்பிய அறிக்கைக் குறிப்பில் சிஞ்சியாங் என்பதன் பொருள் 'பழைய எல்லை மீண்டும் தற்போது வருவாயைத் தருகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக சிஞ்சியாங் பிராந்தியம் முற்காலத்தில் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வந்துள்ளது. மேற்குப் பிராந்தியம்'[6] கோட்டன், கோட்டயி, சீன பிராந்தியம், உயர் பிராந்தியம், கிழக்கு சகட்டயி, முகோலிஸ்தான், கசகாரியா, அச்டிஷார்(தாரிமின் ஆறு நகரங்கள்), சிறிய பகோடா மற்றும் செரிந்தியா[7] என்று பலவாறு அழைக்கப்பட்டது. சின்சுவான் நாடு, என்பது பின்னர் சின்சுவான் சிஞ்சியாங் என அறியப்பட்டது. 1821 க்குப்பிறகு சிங் அரசு இதனுடன் பிற வருவாயைத் தரும் மற்ற பகுதிகளையும் இணைத்து சிஞ்சியாங் எனப் பெயரிட்டது. அன்று முதல் இதன் பெயர் சிஞ்சியாங் என வழங்கப்பட்டு வருகிறது.[8] 'கிழக்கு துருக்கிஸ்தான்' என்றழைக்கப்பட்ட இப்பகுதி ருசியச் சீனவியல் அறிஞர் ஹையாசிந்த் என்பவரால் 1829 இல் சீனதுருக்கிஸ்தான் எனப் பெயர் மாற்றம் பெற்றது.[9] கிழக்கு துருக்கிஸ்தான் என்பது மரபுப்படி தாரிம் வடிநிலத்தை மட்டுமே குறிக்கும், மொத்த சிஞ்சியாங் பகுதியையும் குறிக்காது. மேலும் கிழக்குத் துருக்கிஸ்தானில் சுங்காரியா உள்ளடங்காது.
1955 இல் சிஞ்சியாங் பிராந்தியம் சிஞ்சியாங் தன்னாட்சிப் பிரதேசம் எனப் பெயர் முன்மொழியப்பட்டது. சிஞ்சியாங்கின் முதல் தலைவரான சயிஃபுதின் அசிசி என்பவர், தன்னாட்சி என்பது மலைகள் மற்றும் ஆறுகளுக்கு வழங்கப்படுவதில்லை அது அக்குறிப்பிட்ட குடியுரிமை கொண்டவர்களுக்கே வழங்கப்படுகிறது எனவே சிஞ்சியாங் உய்குர் தன்னாட்சிப் பிரதேசம் என பெயர் மாற்றப்பட்ட வேண்டும் என தனது எதிர்ப்பை பதிவு செய்தார், மாவோ சேதுங் அதனை ஏற்று உய்குர் இனக் குழுக்களை அடையாளப்படுத்தும் முகமாக அதன் நிர்வாக மண்டலத்திற்கு சிஞ்சியாங் உய்குர் தன்னாட்சிப் பிரதேசம் எனப் பெயரிட்டார்.
சிங்சியாங் புவியியல், வரலாறு மற்றும் இனக்குழுக்களின் அடிப்படையில் இரண்டு மண்டலங்களை உள்ளடக்கியதாக வெவ்வேறு வரலாற்றுப் பெயர்களில் அழைக்கப்படுகிறது. தியேன்சன் மலைக்கு வடக்கே ஊள்ள பகுதி சுங்கரியா எனவும் தெற்கே உள்ள பகுதி தாரிம் வடிநிலம் எனவும் அழைக்கப்படுகிறது. சிங் அரச மரபு காலத்தில் தனித்தனி பிராந்தியங்களாக ஆளப்பட்டு வந்த இப்பகுதிக்ள் 1884 இல் அரசியல் ரீதியாக ஒன்றினைக்கப்பட்டு சிங்சியாங் பிராந்தியம் என அழைக்கப்பட்டது. 1759 இல் சிங் அரச மரபு இப்பகுதியைக் கைப்பற்றியபோது சுங்காரியா ஸ்டெப்பி புல்வெளி பகுதியில் திபெத்திய புத்த மதத்தைப் பின்பற்றுகிற சுங்கர் மக்கள் என்பவர்களுடைய குடியேற்றம் மிகுந்திருந்தது. தாரிம் வடிநிலப்பகுதிகளில் உடலுழைப்பு அதிகம் தேவைப்படாத பாலைவனச் சோலைப் பகுதிகளை வாழ்விடங்களாகக் கொண்ட துருக்கிய மொழி பேசும் முஸ்லீம் விவசாயிகள் குடியேறியிருந்தனர். இவர்களே இப்பொழுது உய்குர் இனமக்கள் என அழைக்கப்படுகின்றனர். 1884 வரை இவ்விரண்டு பகுதிகளும் தனித்தனியாக நிர்வகிக்கப்பட்டு வந்தன. உய்குர் மொழியில் தாரிம் வடிநிலத்தின் பெயர் அல்டிஷார் என்பதாகும்.
2008 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 60 பில்லியன் டொலராகவும் சராசரி தனிநபர் உற்பத்தி 2864 டொலராகவும் இருந்தது. மேலும் இம்மாகாணம் தாதுக்களும் எண்ணெய் வளமும் நிறைந்ததாகும். ஷாங்காய் நகருடன் இப்பகுதி எண்ணெய்க் குழாய் மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது.
1949 இல் 95 சதவீதம் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இப்பிரதேசம் மீது சீனா படையெடுத்து ஆக்கிரமித்து கொண்டது. பின்னரான காலப்பகுதியில் பல நூறு இராணுவ கிராமங்களை அங்கு உருவாக்கி இராணுவ குடும்பங்களை குடியமர்த்தியது, அவை காலபோக்கில் சீனர்களை கொண்ட குடியேற்ற கிராமங்களாக உருவெடுத்தன. இப்போது 2 கோடி மக்கள் தொகை கொண்ட சிங்கியாங்கில் 57 சதவீதம் முஸ்லிம்கள், 41 சதவீதம் ஹான் சீனர்கள் ஹன் வாழ்கின்றனர். இம்மாகாண தலைநகர் உரும்கியில் 2009 ஜூலை 5 ல் பெரிய அளவில் வெடித்த இனக்கலவரத்தை (Urumqi riots) சீனா தனது இராணுவப் பலத்தால் ஒடுக்கியது. இக்கலவரத்தின் போது ஒரே தினத்தில் 184 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், மேலும் 10000 அளவானோர் காணாமல் போயுள்ளதாகவும் கணக்கெடுப்புகள் கூறுகின்றன. இப்பகுதியில் உய்குர் முஸ்லீம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா அரசு இராணுவத்தினர் மூலம் பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவருகிறது. [10]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.