சாக்கிரட்டீசு
From Wikipedia, the free encyclopedia
சாக்கிரட்டீசு (Socrates) (கி.மு 470/469 – கி.மு 399, பிப்ரவரி 15 ) [1] பண்டைக் கிரேக்கத்தின், ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். இவர் எப்போது பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவருடைய சீடர் பிளேட்டோவும் [2] புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீசு போற்றப்படுகிறார். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர் சாக்ரடீசு என்பது இவருடைய சிறப்பாகும்.
சாக்கிரட்டீசு | |
---|---|
பிறப்பு | கி.மு 470/469 (தோராயமாக) ஏதென்சு |
இறப்பு | பிப்ரவரி 15, கி.மு. 399 ஏதென்சு |
இறப்பிற்கான காரணம் | நஞ்சால் கொல்லப்பட்டார். |
காலம் | பண்டைய மெய்ப்பொருளியல் |
பகுதி | மேற்குலக மெய்யியல் |
பள்ளி | பண்டைய கிரேக்கம் |
முக்கிய ஆர்வங்கள் | அறிவாய்வியல், நன்னெறி |
சாக்ரடீசு நன்னெறித் துறையில் அவரது பங்களிப்புக்கு புகழ்பெற்றவராக விளங்குகிறார் என்பது பிளாட்டோவின் உரையாடல்கள் மூலம் சித்தரிக்கப்படுகிறது. சாக்ரடீசு முரண்நகை மற்றும் சாக்ரடீசு வழிமுறை ஆகிய தத்துவக் கருத்துகளுக்காக தத்துவ அறிஞர் சாக்ரடீசு அறியப்படுகிறார். பிந்தைய கருத்து பொதுவாக பரவலான விவாதங்களில் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது, இது ஒரு வகையான கற்பித்தலும் ஆகும், இம்முறையில் தொடர்ச்சியான கேள்விகளுக்கு தனிப்பட்ட பதில்களைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அடிப்படை நுண்ணறிவை ஊக்குவிப்பதற்காகவும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒளிர்வுக் கோட்பாடு தொடர்பான முக்கியமானதும் நிலையானதுமான கோட்பாடுகளுக்கு பிளாட்டோவின் சாக்ரடீசு பங்களித்திருக்கிறார். மேலும் இவருடைய கருத்தியலும் அணுகுமுறையும் தொடர்ந்து வந்த மேற்கத்திய தத்துவத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அளித்துள்ளன.