கௌடா (நகரம்)
இந்திய துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள வங்காளத்தின் ஒரு வரலாற்று நகரம் / From Wikipedia, the free encyclopedia
கௌடா (Gauḍa) ( கௌர், இலக்னௌதி மற்றும் சன்னதாபாத் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்திய துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள வங்காளத்தின் ஒரு வரலாற்று நகரமும், பாரம்பரிய மற்றும் மத்தியகால இந்தியாவின் மிக முக்கியமான தலைநகரங்களில் ஒன்றுமாகும். இது பல இராச்சியங்களின் கீழ் வங்காளத்தின் தலைநகரமாக இருந்துள்ளது. கௌட பிரதேசம் பல இந்தியப் பேரரசுகளின் ஒரு மாகாணமாகவும் இருந்தது. 7-ஆம் நூற்றாண்டில், கௌட இராச்சியம் வங்காள நாட்காட்டியின் தொடக்கத்துடன் ஒத்துப்போகும் அரசர் சசாங்கனால் நிறுவப்பட்டது. [1] கௌடா படிப்படியாக வங்காளத்திற்கும் வங்காளிகளுக்கும் ஒத்ததாக மாறியது. இது 1204 இல் தில்லி சுல்தானகத்தால் கைப்பற்றப்பட்டது.
கௌடா (நகரம்) | |
---|---|
மேலிருந்து கடிகார திசையில்: இலுக்காசோரி நுழைவாயில், தக்கில் தர்வாசா, பிரோசு மினர், காதம் ரசூல் பள்ளிவாசல், சோட்டா சோனா பள்ளிவாசல், முகலாய தகாகானா, தர்பாசுபரி பள்ளிவாசல், கௌடா தூண், இலாட்டன் பள்ளிவாசல், பரோ சோனா பள்ளிவாசல், பல்லால் பதி | |
மாற்றுப் பெயர் | இலக்னௌதி, சனாதாபாத்து |
இருப்பிடம் | மால்டா மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா ராஜசாகி கோட்டம், வங்காளதேசம் |
ஆயத்தொலைகள் | 24°52′0″N 88°8′0″E |
வகை | குடியேற்றப் பகுதி |
நீளம் | 7 1/8 கி.மீ |
அகலம் | 1 – 2 கி.மீ |
வரலாறு | |
கட்டப்பட்டது | 7ஆம் நூற்றாண்டு |
பயனற்றுப்போனது | 16ஆம் நூற்றாண்டு |
1453 மற்றும் 1565 க்கு இடையில் 112 ஆண்டுகளுக்கு, கௌடா வங்காள சுல்தானகத்தின் தலைநகராக இருந்தது. 1500 ஆம் ஆண்டில், கௌடா 200,000 என்ற மக்கள்தொகையுடன் உலகின் ஐந்தாவது-அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக இருந்தது.[2] [3] அத்துடன் இந்திய துணைக்கண்டத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாகவும் இருந்தது. போத்துக்கீசர்கள் நகரத்தின் விரிவாக்கத்திற்கான கணக்குகளை விட்டுச் சென்றனர். சுல்தான்கள் ஒரு கோட்டை, பல பள்ளிவாசல்கள், ஒரு அரச அரண்மனை, கால்வாய்கள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றைக் கட்டினார்கள். கட்டிடங்கள் மெருகூட்டப்பட்ட ஓடுகளைக் கொண்டிருந்தன.
16-ஆம் நூற்றாண்டில் வங்காள சுல்தானகத்தின் வீழ்ச்சியின்போது முகலாயப் பேரரசு இப்பகுதியைக் கைப்பற்றும் வரை நகரம் செழித்து வளர்ந்தது. முகலாயப் பேரரசர் நசிருதீன் உமாயூன் இப்பகுதியை ஆக்கிரமித்தபோது, அவர் நகரத்தை சன்னதாபாத் ("பரலோக நகரம்") என்று மறுபெயரிட்டார். கௌடாவில் எஞ்சியிருக்கும் பெரும்பாலான கட்டமைப்புகள் வங்காள சுல்தானகத்தின் காலத்தைச் சேர்ந்தவை. இந்த நகரம் சேர் சா சூரியால்]] சூறையாடப்பட்டது. பிளேக் நோய் பரவியதால் நகரம் வீழ்ச்சியைச் சந்தித்தது. கங்கையின் போக்கு ஒரு காலத்தில் நகரத்திற்கு அருகில் அமைந்திருந்தது. ஆனால் ஆற்றின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் கௌடா அதன் மூலோபாய முக்கியத்துவத்தை இழக்கச் செய்தது. பின்னர் டாக்காவில் ஒரு புதிய முகலாய தலைநகரம் உருவானது.
வங்காளத்தின் வரலாறு மற்றும் இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றில் கௌடா மிக முக்கியமான தலைநகரங்களில் ஒன்றாகும். மேலும் மத்தியகால கட்டிடக்கலையின் மையமாக இருந்தது. கௌடாவின் இடிபாடுகள் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய ஓவியர்களின் கலைப்படைப்புகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன. பிரான்சிஸ் புக்கானன்-ஹாமில்டன் மற்றும் வில்லியம் பிராங்க்ளின் போன்ற குடியேற்ற அதிகாரிகள் முன்னாள் வங்காளத் தலைநகரின் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனர்.[4]