கிணறு
From Wikipedia, the free encyclopedia
கிணறு என்பது, நிலத்தின் கீழ் நீர்ப்படுகைகளில் சேமிக்கப்பட்டிருக்கும் நிலத்தடி நீரை எடுப்பதற்கு வசதியாக நிலத்தில் தோண்டப்படும் ஒரு குழி ஆகும். அகழ்தல், தண்டு செலுத்தல், துளையிடல் போன்ற பல முறைகளைக் கையாண்டு கிணறுகள் வெட்டப்படுகின்றன. நிலத்தடி நீரின் மட்டத்தைப் பொறுத்து கிணற்றின் ஆழம் வேறுபடும். கிணறுகள் பொதுவாக வட்டமான குறுக்கு வெட்டுமுகம் கொண்டவையாக இருக்கும். சதுரம், நீள்சதுரம் ஆகிய வடிவங்களிலான வெட்டுமுகம் கொண்ட கிணறுகளும் உள்ளன. இவ்வெட்டு முகங்களின் விட்டம் அல்லது நீள அகலங்களின் அளவுகளும் வெட்டும் முறை, பயன்பாடு என்பவற்றைப் பொறுத்து வேறுபட்டுக் காணப்படும்.
கிணறுகளில் நீர்மட்டம் பெரும்பாலும் கைக்கு எட்டாத ஆழத்தில் இருப்பதனால், நீரை வெளியே எடுப்பதற்குப் பல முறைகள் பயன்படுகின்றன. ஏதாவது கொள்கலன்களைக் கயிற்றில் கட்டிக் கிணற்றுக்குள் இறக்கி மனிதவலுவைப் பயன்படுத்தி நீரை வெளியே எடுப்பது பண்டைக்காலம் தொட்டு இன்றுவரையும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு முறை. இம்முறையில் மனித முயற்சியை இலகுவாக்குவதற்காக கப்பி, துலா போன்ற பல்வேறு பொறிமுறைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கிணறுகளில் இருந்து நீரை வெளியே எடுப்பதற்கு, பொதுவாக பயிர்களுக்கு நீர் பாய்ச்சுதல் போன்ற தேவைகளுக்காக விலங்குகளின் வலுவையும் பயன்படுத்துவது உண்டு. இதற்காகப் பல்வேறு வகையான பொறிகளும் உலகின் பல பாகங்களிலும் உருவாக்கப்பட்டன. தற்காலத்தில் மின்சாரத்தில் இயங்கும் நீரேற்றிகள் பரவலாகப் பயன்படுகின்றன.[1][2][3]