காரைநகர்
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
காரைநகர் (Karainagar)[1] இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மேற்குத்திசையில் அமைந்துள்ள ஏழு சப்த தீவுகளில் ஒன்றாகும். மற்றைய தீவுகளை விட யாழ். நகருக்கு அண்மையில் இருப்பதுதான் காரைநகர். இது நாற்புறமும் கடலினால் சூழப்பட்ட ஒரு தீவாகும்.
காரைநகர் Karainagar | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பிசெ பிரிவு | காரைநகர் |
இவ்வூரில் அப்பொழுது ஏராளமான காரைச்செடிகள் நின்றமையால் அப்பெயர் பெற்றது என்றும் பெயருக்குரிய காரணம் கூறப்படுகின்றது. காரைதீவு வடக்கு, மேற்கு திசைகளில் ஆழமான பாக்கு நீரிணைக் கடலாலும் கிழங்கு, தெற்கு திசைகளில் ஆழமற்ற வற்றும் தன்மையுள்ள பரவைக் கடலாலும் சூழப்பட்டுள்ளது.
இவ்வூரோடு இலங்கையில் புத்தளத்தில் ஒரு காரைத்தீவும், கிழக்கே மட்டக்களப்பில் ஒரு காரைத்தீவும் ஆக மூன்று காரைத்தீவுகளும் சேர்ந்து அரசினரின் தபால் தந்திப் போக்குவரத்திற்கு பெரிய தொல்லைகளையும் தாமதங்களையும் எற்படுத்திக் கொண்டிருந்தன. ஆங்கிலேயரின் ஆட்சியில் 1869 ஆம் ஆண்டில் அப்போது அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையால் பொன்னாலைக் கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து காரைத்தீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இவ்விணைப்பு தெருவினது நீளம் சுமார் 3 கிலோ மீட்டர் ஆகும். இத்தரைத் தொடர்பினை அடுத்து சேர் பொன் இராமநாதனின் விதைந்துரைப்புடன் காரைதீவினை 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றிக் கொண்டனர்.[2]
இங்கே வலந்தலை, கோவளம்[3][4], தங்கோடை, கருங்காலி[5], பலகாடு, களபூமி என்ற ஆறு பெருங்குறிச்சிகள் உள்ளன. காரைநகர் ஏழு கிலோ மீட்டர் நீளமும் நாலரை கிலோ மீட்டர் அகலமும் உடையது. மேற்கே உள்ள கோவளக் கடற்கரையில் கலங்கரை விளக்கமும் தெற்கே இயற்கையாக அமைந்த கப்பல் துறைமுகமும் உள்ளன. நகரின் வடக்கு பக்கமாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. திண்ணபுரம் சிவன் கோவில். இக்கோவிலுக்கு கிழக்கு, தெற்கு திசைகளில் பசும்புல் தரைகளும் மேற்கு வடக்கு திசைகளில் தென்னஞ்சோலைகளும் அதனை அடுத்தாற் போல கசூரினா கடற்கரை உள்ளது