![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3c/Handaxe_by_John_Frere.png/640px-Handaxe_by_John_Frere.png&w=640&q=50)
கற்கோடரி
From Wikipedia, the free encyclopedia
கற்கோடரி அல்லது கைக்கோடரி என்பது இரண்டு முகங்களைக் கொண்ட, வரலாற்றுக்கு முற்பட்ட காலக் கற்கருவிகளுள் ஒன்று. மனித வரலாற்றில் கூடிய காலம் பயன்பாட்டில் இருந்த கருவி இதுவே. இது கீழைப் பழங்கற்காலம், நடுப் பழங்கற்காலம் ஆகியவற்றுக்குரிய சிறப்பியல்பான கருவியாகும். இருமுகக் கருவி என்பது இதன் தொழில்நுட்பப் பெயர். இதன் மூலப்படிம மாதிரி வேல் வடிவம் கொண்ட இரு முகக் கற் சீவலாக இருப்பதே இப்பெயருக்கான காரணம். கற்கோடரிகள் பொதுவாக அதன் நீளப்பாட்டு அச்சுப் பற்றி சமச்சீர் வடிவம் கொண்டவை. இவை அழுத்தம் கொடுப்பதன் மூலமோ தட்டி உடைப்பதன் மூலமோ உருவாக்கப்பட்டன. மிகப் பொதுவான கற்கோடரிகள் கூரான முனையையும், வளைவான அடிப்பகுதியையும் கொண்டு அவற்றுக்கான சிறப்பியல்பான வடிவத்தைக் கொடுக்கின்றன.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3c/Handaxe_by_John_Frere.png/320px-Handaxe_by_John_Frere.png)
பழங்கற்காலக் கருவிகளாக முதன் முதலாக அடையாளம் காணப்பட்டவை கற்கோடரிகளே. முதல் வெளியிடப்பட்ட கற்கோடரி ஒன்றின் படம், யோன் பிரேரே என்பவரால் வரையப்பட்டு 1800 ஆம் ஆண்டில் பிரித்தானிய வெளியீடு ஒன்றில் இடம்பெற்றது.[1] அதற்கு முன்னர் இப்பொருட்கள் இயற்கையாகவோ அல்லது இயற்கைக்கு மேம்பட்ட சக்திகளாலோ உருவானவை என்றே மக்கள் நம்பினர். இடிக்கற்கள் என்று அழைக்கப்பட்ட இவை புயல்களின்போது வானத்தில் இருந்து விழுந்தவை என்றோ அல்லது நிலத்துக்கு அடியில் மின்னலின் தாக்குதலினால் உருவாகி புவியின் மேற்பரப்புக்கு வந்தவை என்றோ கருதினர். இந்த நம்பிக்கை காரணமாகவே இன்னும் சில நாட்டுப்புறப் பகுதிகளில், தம்மைப் புயல்களில் இருந்து காத்துக்கொள்வதற்காகத் தாயத்தாக அணிகின்றனர்.
கற்கோடரிகள்,
- வேட்டையாடிய விலங்குகளைத் துண்டுபோடுதல்,
- கிழங்குகள், நீர் போன்றவற்றுக்காக நிலத்தைத் தோண்டுதல்,
- விறகு தறித்தலும், மரப் பட்டைகளை உரித்தலும்,
- இரைகளை நோக்கி எறிதல்,
போன்றவற்றுக்காகப் பயன்பட்டிருக்கக்கூடும்.