ஆவியுயிர்ப்பு
From Wikipedia, the free encyclopedia
தாவரங்களில் இருந்து நீர் நீராவி நிலையில் ஆவியாதலே ஆவியுயிர்ப்பு (Transpiration) எனப்படும். ஒளிச்சேர்க்கை நிகழ்வின்போது வாயு பரிமாற்றத்திற்காக இலைவாய்கள் திறந்திருக்கும் நிலையில், தாவரத்தில் மேல்நோக்கி எடுத்து வரப்படும் நீரானது ஆவியாக இலைவாய்களூடாக வெளியேறும். இது முக்கியமாக இலைகளிலுள்ள இலைவாய்களூடாகவே இடம்பெற்றாலும், தாவரங்களின் ஏனைய பகுதிகளிலிருந்தும் ஆவியுயிர்ப்பு சிறிதளவில் நிகழும். இலைவாய் தவிர புறத்தோல், தண்டிலுள்ள பட்டைவாய்களூடாகவும் ஆவியுயிர்ப்பு நிகழ்வதுண்டு.[1][2][3]
இது ஆவியாதல் போன்ற ஒரு செயற்பாடாகும். இது விலங்குகளில் வியர்த்தல் போன்றதென்றாலும் இரண்டுக்கும் பல வேறுபாடுகளும் உண்டு. மழை போதுமான அளவில் கிடைக்கும் இடங்களில் ஆவியுயிர்ப்பைத் தடுக்க தாவரங்கள் இசைவாக்கம் அடைந்திருக்காது. எனினும் வறண்ட பிரதேசங்களில் வாழும் தாவரங்களான கள்ளி போன்றவை ஆவியுயிர்ப்பைக் குறைக்க நன்றாக இசைவாக்கம் அடைந்துள்ளன. ஆவியுயிர்ப்பு வீதம் பல காரணிகளால் செல்வாக்குச் செலுத்தப்படுகின்றது.