அழற்சி
From Wikipedia, the free encyclopedia
அழற்சி (Inflammation, இலத்தீன், inflammare) என்பது காயங்கள், தீப்புண்கள், அடிபட்ட இடங்களில் திசுக்களின் சேதம் மற்றும் இதர உயிரணுக்களின் வினையால் உடம்பில் நிகழும் எதிர்ப்பாற்றல் சார்ந்த செயலாகும். நோய்க்காரணிகள் தொற்றுவதால் அல்லது திசுக்கள் சேதமடைந்தால் அவ்விடத்தில் உள்ள உயிரணுக்களிலிருந்து புரதங்கள் மற்றும் எதிர்ப்பாற்றலூக்கிகள் வெளிப்படும். இது தன்னிச்சையாக தொடங்கி அவசரக்காலத்தில் வேலை செய்வது போல் உடம்பில் நோயெதிர்ப்புக் காரணிகளான இரத்த வெள்ளையணுக்கள், அவ்விடத்தில் சீக்கிரமாக குவிய ஆயத்தமாக்கும். அவ்வாறு குவியும்போது இரத்தத்தில் வழக்கமாக உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை விட, தேவையைப் பொறுத்து வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். இவ்வாறு ஊக்குவிக்கும் போது அவ்விடத்தில் இரத்த நுண்குழாய் மூலம் குவியும் உயிரணுக்களான வெள்ளையணுக்கள், (இரத்தத்தில் உள்ள உயிரணுக்களில் மிகவும் பெரியவை) திசுக்களின் அடர்த்தி, இரத்தக்குழல்களின் விரிப்பு ஆகியவற்றையும் சேர்த்து இயங்கச்செய்யும். அதுவே நமக்கு வீக்கமாக காட்சியளிக்கும். இதில் தசை சிவப்படைதல், எரிச்சல், வலி மற்றும் சூடு அதிகரித்தல் ஆகியன இணைந்து நிகழும். இவ்வாறு ஏற்படும் நோயெதிர்ப்பு செயலே அழற்சி என அழைக்கப்படுகிறது.
இவ்வாறு குவியும் வெள்ளையணுக்களை நாம் காயமாறியவுடன் வெளிப்படும் வெள்ளைநிற சீழ்களின் வடிவில் காணமுடியும். இது ஆங்கிலத்தில் லீசன்சு என அறியப்படுகிறது. இவ்வாறு வெளிப்படும் சீழ்களில் நிணநீரும் மிகுந்திருக்கும்.
நோய்க்காரணிகள் போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய காரணிகள், அடிப்பட்ட அல்லது பாதிப்புக்குள்ளான உயிரணுக்கள், தீங்கு விளைவிக்கும் தூண்டுகைகள் மற்றும் எரிச்சல் தரக்கூடியப் பொருள்களுக்கு தமனி (அல்லது நாடி), சிரை (அல்லது நாளம்) ஆகிய இரத்தக்குழாய்களில் நிகழும் ஒரு சிக்கலான உயிரியல் எதிர்வினையாகும்.[1] இந்த எதிர்வினை தனக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய தூண்டுகையை நீக்கவும் பாதிக்கப்பட்ட திசுக்கள் குணமடைதலை துவக்கவும் உயிரினங்கள் மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கை ஆகும். அழற்சியும் நோய்த்தொற்றும் (infection) ஒன்றல்ல. பல நேரங்களில் நோய்த்தொற்றினால் அழற்சி ஏற்படலாம். நோய்தொற்று ஒரு புறவழிப் பெருக்க நுண்ணுயிரினால் ஏற்படுவது; அழற்சி அந்த நோய்க்காரணிக்கு எதிராக உடலானது மேற்கொள்ளும் எதிர்வினை.
அழற்சி என்ற எதிர்வினை இல்லாதிருக்குமேயானால் ஓர் உயிரியின் புண்களும் தொற்றுநோய்களும் குணமடையாது திசுக்கள் உயிர்வாழ்வதையே பாதிக்கும். ஆனால், நீண்டநாள் அழற்சி பல நோய்களுக்கு வித்தாக அமைகிறது. தும்மல், சுரம், தமனித் தடிப்பு, முடக்கு வாதம் போன்றன நீடித்த அழற்சியால் உண்டாவன. ஆகவே உடல் தன்னிடத்தே காண்கின்ற அழற்சியை விரைவில் சரிப்படுத்த விழைகிறது.
அழற்சியை கடுமையான, நாட்பட்ட என இருவகையாகப் பிரிக்கலாம். கடுமையான அழற்சி தீங்குதரும் தூண்டுகைக்கு உடல் ஆற்றும் துவக்க எதிர்வினையாகும். பாதிக்கப்பட்டத் திசுக்களுக்கு குருதி நீர்மம் (blood plasma) மற்றும் இரத்த வெள்ளையணுக்களை கூடுதலாக அனுப்புகிறது. படிப்படியான உயிரியல் நிகழ்வுகள் அழற்சிக்கெதிரான வினைகளைப் புரிந்து குணமடையச் செய்கிறது. இதில் குறிப்பிட்ட இடம் சார்ந்த சுற்றோட்டத் தொகுதி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை மற்றும் காயமடைந்த திசுவின் பல உயிரணுக்கள் இணைந்து செயல்படுகின்றன.
நெடுங்கால அழற்சி அல்லது நீடித்த அழற்சி அல்லது நாட்பட்ட அழற்சியில் காயமடைந்த திசுக்களின் அருகாமையில் உள்ள உயிரணுக்களின் வகை வளர்முகமாக மாறுகிறது. திசுக்கள் அழிதலும் குணமாதலும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.