காப்பியம்
From Wikipedia, the free encyclopedia
காப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்று. இதனைப் பெருங்காப்பியம் என்றும், சிறுகாப்பியம் என்றும் பகுத்துக் காட்டினர் [1] அறம், பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஓர் ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது பெருங்காப்பியமாகும். வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று இது விரிந்து வளர்கிறது. நான்கு பொருள்களையும் பயக்காமல் சில பொருள்கள் மட்டும் பயக்கும் கதைநூல் சிறுகாப்பியம்.
தமிழின் பழைய இலக்கியங்கள் தனிப்பாடல் திரட்டுக்களாகவே உள்ளன. தமிழ் மொழியில் 3 அடி முதல் 782 அடியுள்ள நீண்ட பாட்டு வரையில் உள்ள தனிப்பாட்டுகளே சங்க இலக்கியமாக உள்ளன. தொடக்கத்தில் நாட்டுப் பாடல்களின் ஓசையமைப்பையும் பொருள் வகையையும் ஒட்டி வளர்க்கப்பட்ட தனிப்பாடல்களே தமிழ் இலக்கியத்தின் தோற்றமாகும்.
சங்கப் பாடல்களில் நாட்டியக் கலையில் நன்கு தேர்ந்த விறலியர், கூத்தர், பொருநர் என்போர் பற்றிய குறிப்புகள் உள. ஆயினும் சங்க காலத்தில் கதை தழுவிய நாடகங்களும் கதைகளும் பல இருந்திருக்கக் கூடும். ஆனால், அந்தக் கதைகள் திரண்டு வளர்ந்து காப்பியங்களாக உருவம் கொள்ளவில்லை. கற்றறிந்த புலவோர் அந்தக் கதைகளை எழுதிப் போற்ற மனம்கொள்ளாதது காரணமாக இருக்கலாம்.