உமாயூனின் சமாதி
முகலாயப் பேரரசர் உமாயூனின் கல்லறை / From Wikipedia, the free encyclopedia
உமாயூனின் சமாதி (இந்தி: हुमायूँ का मक़बरा, உருது: ہمایون کا مقبره Humayun ka Maqbara) என்பது முகலாயப் பேரரசர் உமாயூனின் சமாதிக் கட்டிடம் ஆகும்.[1] இது உண்மையில் பல கட்டிடங்களை உள்ளடக்கிய ஒரு தொகுதியாக உள்ளது. இது இந்தியாவின் தலை நகரமான தில்லியில், நிசாமுத்தீன் கிழக்குப் பகுதியில், 1533 ஆம் ஆண்டில் உமாயூன் கட்டுவித்த புராணா கிலா எனப்படும் நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. கிபி 1562 ஆம் ஆண்டில் உமாயூனின் மனைவியான அமீதா பானு பேகம் இதனைக் கட்டுவிக்கத் தொடங்கினார். இதனை வடிவமைத்தவர் மிராக் மிர்சா கியாத் என்னும் பாரசீகக் கட்டிடக் கலைஞர். இவ்வளவு பெரிய கட்டிடத்தில் சிவப்பு மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டதும் இதுவே முதல் தடவை ஆகும்.
உமாயூன் சமாதி, தில்லி | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | ii, iv |
உசாத்துணை | 232 |
UNESCO region | ஆசியா-பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1993 (17வது தொடர்) |
இக் கட்டிடத் தொகுதி, முக்கியமான கட்டிடமாகிய பேரரசர் உமாயூனின் சமாதிக் கட்டிடத்தை உள்ளடக்கியுள்ளது. இங்கேயே அவரது மனைவியான அமீதா பேகம், பின்னாட் பேரரசரான சா சகானின் மகன் தாரா சிக்கோ ஆகியோரதும்; பேரரசர் சகாந்தர் சா, பரூக்சியார், ராஃபி உல்-தார்சத், ராஃபி உத்-தௌலத், இரண்டாம் ஆலம்கீர் போன்ற பல முகலாயர்களதும் சமாதிகளும் இங்கே உள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ள இது முகலாயக் கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இக் கட்டிடமும் இதனோடிணைந்ததும் பாரசீகப் பூங்காக்களின் பாணியில் அமைந்ததுமான சார்பாக் பூங்காவும் அதற்கு முன் இந்தியாவில் எப்போதும் காணப்படாத வகையில் அமைந்ததோடு, பிற்கால முகலாயக் கட்டிடங்களுக்கு ஒரு மாதிரியாகவும் அமைந்தது.
தனது மூதாதையர்களில் ஒருவரும், ஆசியாவைக் கைப்பற்றியவருமான தைமூரின், சமர்க்கண்டில் உள்ள குர்-இ அமீர் என்னும் சமாதியைத் தழுவிச் சமாதிக் கட்டிடத்தை பாரடைசுப் பூங்காவில் அமைக்கும் வழக்கம் தொடங்கியது முதல் முகலாயப் பேரரசரும் உமாயூனின் தந்தையுமான பாபரின் சமாதியிலேயே. பாக்-இ பாபர் எனப்படும் பாபரின் சமாதி, ஆப்கனிசுத்தானின், காபுலில் அமைந்துள்ளது. எனினும், உமாயூனின் சமாதிக் கட்டிடம் அவரது தந்தை பாபரின் அடக்கமான அளவையுடைய சமாதிக் கட்டிடத்திலிருந்து பெருமளவுக்கு வேறுபட்டுக் காணப்படும் ஒரு கட்டிடம் ஆகும். பாபருடன் தொடங்கி உமாயூனின் சமாதியில் பெரும் முன்னேற்றத்தைப் பெற்ற சமாதிக் கட்டிடக் கட்டிடக்கலை ஆக்ராவில் பின்னாளில் கட்டப்பட்ட தாஜ்மகாலில் அதன் உச்சநிலையை அடைந்தது எனலாம்.
இது கட்டப்பட்ட நிலம் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. முகலாய அரசர்களால் மதிக்கப்பட்டவரும், மிகவும் பெயர் பெற்றவருமான நிசாமுத்தீன் ஔலியா எனப்படும் சூபி குருவின் சமாதிக் கட்டிடமான நிசாமுத்தீன் தர்காவுக்கு அருகில் இருந்ததால் இந் நிலம் தெரிவு செய்யப்பட்டது. இக் குருவின் தங்குமிடமும் அருகிலேயே இருந்தது. பின்னாளில் 1857 ஆம் ஆண்டின் இந்தியக் கலகத்தின்போது கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் சா சஃபாரும் மூன்று இளவரசர்களும் ஆங்கிலேயத் தளபதி ஒட்சனால் பிடிக்கப்பட்டு ரங்கூனுக்கு நாடுகடத்தப்படும்வரை இங்கேயே தஞ்சம் அடைந்திருந்தனர்.
இந்த நிலம், அடிமை வம்சத்தினர் காலத்தில் நசிருத்தீனின் மகனான சுல்தான் கெக்குபாத்தின் தலைமையிடமான கிலோக்கேரி கோட்டையைச் சேர்ந்ததாக இருந்தது.