அகம்
From Wikipedia, the free encyclopedia
உலக வளர்ச்சிக்கு அன்பின் தொடர்பு இன்றியமையாதது. அந்த அன்பானது இரண்டு உயிர்களின் தனித்தனி நிலையில் உண்டாவதில்லை; அவை ஆணும் பெண்ணும் என்ற இரண்டின் கூட்டுறவால் நிகழும் வாழ்வியல் முறையாகும். பழந்தமிழர் வாழ்வியலில் அகம் என்பது, ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு, காதலித்து, மணம்புரிந்து, இல்லறம் நடத்துவதோடு தொடர்புடைய வாழ்வின் பகுதி ஆகும்.[1] பழந்தமிழ் இலக்கியங்கள் மக்களின் அகவாழ்க்கை பற்றி மிகவும் விரிவாகப் பேசுகின்றன. தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் இலக்கியங்களில் அகப்பொருளைக் கையாள்வது பற்றிய இலக்கணங்களை வகுப்பதுடன், அக்காலத்தின் அக வாழ்வின் பல்வேறு அம்சங்கள் பற்றியும் எடுத்துரைக்கின்றது.